மும்பை: பாஜக கூட்டணி இந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று நேற்று வெளியான கருத்துக் கணிப்புகள் தெரிவித்ததன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தைகள் உச்சத்தில் உள்ளன.
கடந்த ஒரு மாத காலமாக நடந்து தேர்தல் நேற்றோடு முடிவுக்கு வந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், பல இடங்களில் பதற்றத்தையும் சில இடங்களில் திகிலையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று மாலையோடு இறுதிகட்ட வாக்குப்பதிவு முடிவுற்றது.
7-ம் கட்ட தேர்தலில் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவான நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியான வண்ணம் உள்ளன. வெளியான அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே பெரும்பான்மையான இடங்களை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சில கருத்துக் கணிப்புகள் பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பலத்தோடு வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கிறது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும் பாஜகவுக்கு ஓரளவு சாதகமாக வந்த சூழலில் பங்கு சந்தைகள் ஏற்றம் கண்டது ஆனால் அதன் பின்னர் சரிவை சந்தித்தது. இப்போது கருத்துக் கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக வந்திருக்கும் சூழலில் மீண்டும் இன்று பங்கு சந்தைகள் ஏற்றம் கண்டு வருகிறது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே தொடர்ச்சியாக ஏற்றமான போக்கு நிலவி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 962 புள்ளிகள் உயர்ந்து 38,892 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி, 286 புள்ளிகள் உயர்ந்து 11,694 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
இது கருத்துக் கணிப்புகள் காரணமாக என்று கூறப்பட்டாலும் இதை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது. 2004 ம் ஆண்டு ஆட்சியில் இருந்த பாஜக தேர்தலை சந்தித்த போது இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷத்தோடு இறங்கியது. அப்போது மீண்டும் பாஜகவே ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியை பிடித்தது. அந்த கருத்துக் கணிப்புகள் வந்தபோதும் பங்கு சந்தைகள் உயர்ந்தன. ஆனால் ஆட்சியை பிடித்தது காங்கிரஸ்.
அதன் பின்னர், 2009 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜகவுக்கு பெரும் வாய்ப்புகள் உள்ளதாகவே கருத்துக் கணிப்புகள் கூறிவந்தன. அப்போதும் பங்கு சந்தைகள் தேர்தல் சமையத்தில் உயர்வை கண்டன. ஆனால் முன்பை விட அதிக இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அதன் பினர் பாஜக ஆட்சியில் பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டபோது பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. அதனால் கருத்துக் கணிப்புகள் காரணம் என்று சொல்வதற்கு இல்லை என்பதே பொருளாதார வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.