லண்டன்: மதுபான பாரில் குடிப்பதற்கு 300 டாலர் மதிப்புள்ள வைன் பாட்டில் கேட்ட வாடிக்கையாளருக்கு தவறுதலாக 5000 டாலர் மதிப்புள்ள ஒயின் பாட்டிலை மாற்றி சப்ளை செய்த பெண் ஊழியரை பாதுகாப்பு கருதி பார் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். காரணம் அந்த பெண் ஊழியருக்காகவே கூட்டம் அதிகரிப்பதுதானாம்.
சாதாரணமாக மதுபானக் கடைகளிலும், பார்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, வாடிக்கையாளர்கள் கேட்கும் மது வகைகளில் சொஞ்சம் தண்ணீரை கலந்து கொடுத்து காசு பார்ப்பது வழக்கம். அதுவும் கொஞ்சம் போதை தலைக்கேறிவிட்டால், சரக்கு சப்ளை செய்பவர்களின் காட்டில் அடைமழைதான்.
சரக்கு சப்ளை செய்பவர் சொன்னது தான் விலை. ஒரு பாக்கெட் தண்ணீர் விலையைக் கேட்டால் ஒரு லிட்டர் தண்ணீரின் விலையை சொல்லி கொள்ளை லாபம் பார்ப்பார்கள். வாடிக்கையாளர் கேட்ட மதுவகைகளுக்கு பதிலாக மட்டமான குறைந்த விலை உள்ள மதுவகையை கொடுத்து ஏமாற்றுவதும் உண்டு.
ஆனால் சில நேரங்களில் இதுவே உல்டாவாக மாறிவிடுவதும் உண்டு. வாடிக்கையாளர் கேட்ட மதுவகைக்கு பதிலாக விலை உயர்ந்த மதுவை ஊற்றிக் கொடுத்துவிடுவதும் உண்டு. இதனால் அந்த மதுக்கடைக்கு அதிக நட்டம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். அதே சமயத்தில் போதையில் உள்ள வாடிக்கையாளருக்கு கொண்டாட்டமாகிப் போய்விடும்.
இதே கூத்துதான் லண்டனில் உள்ள ஒரு மதுபான பாரில் நடந்துள்ளது. அங்குள்ள ஹாக்ஸ்மூர் மான்செஸ்டர் ஸ்டீக்ஹவுஸ் (Hawksmoor Manchester Steakhouse) என்ற பாரில் ஒரு வாடிக்கையாளர் குடிப்பதற்காக 22 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள வைன் பாட்டில் ஆர்டர் செய்திருக்கிறார்.
உடனே அங்கிருந்த பெண் வெய்டர், அதே போல் தோற்றமுடைய 3.50 லட்சம் ரூபாம் மதிப்புடைய அதிக விலை உயர்ந்த வைன் பாட்டிலை எடுத்துக் கொண்டுவந்து அந்த வாடிக்கையாளருக்கு ஊற்றிக்கொடுத்துவிட்டார். எப்படி நம் வீட்டு சமையல்கட்டில் சர்க்கரைக்கு பதிலாக உப்பை அள்ளி கொட்டுவார்களோ அதே மாதிரிதான் பாவம் அந்த பெண் சப்ளையர், அவருக்கு வீட்டில் கணவரோடு என்ன சண்டையோ, அந்த கோபத்தை பாரில் கொண்டுவந்து கொட்டி விட்டார்.
வாடிக்கையாளர் கேட்டவுடனே விலை உயர்ந்த வைன் பாட்டிலை எடுத்துக் கொண்டுவந்து ஊற்றிக் கொடுத்துவிட்டார். அந்த ஆசாமியாவது பேசாமல் குடித்துவிட்டு போகவேண்டியது தானே.
ஆனால் அதற்கு பதிலாக வீட்டிற்கு சென்று இரண்டு பாட்டில்களையும் சேர்த்து வைத்து, உங்கள் ஊழியரின் மண்டையில் களிமண்ணா உள்ளது. இரண்டு பாட்டில்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா அந்த மதுபான பாரின் உரிமையாளருக்கு ட்விட் போட்டுவிட்டார்.
அதற்கு அந்த மதுபார் உரிமையாளர் தன்னுடைய ஊழியரை விட்டுக் கொடுக்காமல், பரவாயில்லை, அது எதிர்பார்க்காமல் நடந்துவிட்டது, நீங்கள் அதைக் குடித்துவிட்டு திருப்தியடைந்தீர்கள் அல்லவா, அதுவே எங்களுக்கும் எங்கள் ஊழியர்களுக்கும் முழு சந்தோசம் அளிக்கிறது என்று பதில் ட்விட் போட்டுள்ளார். இதே நம் ஊராக இருந்தால் பெரிய பஞ்சாயத்தே கூட்டியிருப்பார்கள்.