டெல்லி: தல தோனிக்கு (Dhoni) அறிமுகமே தேவை இல்லை. இந்திய கிரிக்கெட் மதத்தில் கடவுள் சச்சின் என்றால், அந்த மதத்தை நல் வழிப்படுத்தி கோடான கோடி இந்தியனையும் கவர்ந்திழுத்த குருமார்களில் முக்கியமானவர் மஹிந்திர சிங் தோனி.
தோனியின் சிக்ஸர்களுக்கும் சிதறாத சில்லறைகள் உண்டா..? தலைவனின் நொடிப் பொழுது ஸ்டம்பிங்குகளுக்கு துள்ளிக் குதிக்காத நெஞ்சங்கள் உண்டா..?
தோனி கடைசி ஓவரில் அணியை வெற்றி பெறச் செய்யும் ஃபினிஷிங்குகளுக்கு நிகரான சொர்க்கம் உண்டா..? இல்லவே இல்லை. தல தல தான். சாமி சாமி தான்.
கனவு
இன்றைய தேதிக்கு கிரிக்கெட் பேட் பிடித்த அத்தனை பொடிசுகளுக்கு தோனி ஒரு ஆகர்ஷ நாயகன். எல்லோரும் தோனி மாதிரியாக வேண்டும் எனத் தான் பாலே குடிக்கிறார்கள். ஆனால் பொடிசாக இருந்த போது, தோனி கிரிக்கெட்டைத் தாண்டி ஒரு விஷயத்தை நினைத்திருக்கிறார். அது தான் ஓவியம்.
தோனி வாக்குமூலம்
ஆம், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஓய்வு பெற்ற பின், நம்மூர் பெயிண்டர்களைப் போல காதில் பிரஷ்ஷும், கையில் பெயிண்ட் டப்பாக்களோடு, மகளை அன்பாகத் துரத்திக் கொண்டு அலையும் சாதாரண தகப்பன் சாமியாகத் திரியப் போகிறாராம் தோனி. இதை வேறு யாரும் சொல்ல வில்லை, சிம்பிளிசிட்டிக்கே டஃப் கொடுக்கும் நம் தல தோனியே சொல்லி இருக்கிறார். அறிவிப்பு வீடியோவைக் காண
ரகசியம்
மேலே கொடுத்திருக்கும் வீடியோவில் "நான் உங்களிடம் ஒரு ரகசியம் சொல்ல இருக்கிறேன். எனக்கு சின்ன வயதில் இருந்தே ஒரு கலைஞன் ஆக வேண்டும் என ஆசை உண்டு. நான் நிறைய கிரிக்கெட் விளையாடி விட்டேன். எனவே இனி என் கனவை நனவாக்க ஓவியம் வரைய இருக்கிறேன். இதற்கு முன் சில ஓவியங்களையும் வரைந்திருக்கிறேன்" என பெருமையாக தன் ஓவியங்களைக் காட்டி இருக்கிறார்.
ஓவியம்
முதல் ஓவியம், ஒரு இயற்கை சம்பந்தப்பட்ட ஓவியமாக இருக்கிறது . உதய சூரியன் சின்னத்தில் இருந்து ஆறு ஓடி வருகிறது, அதன் இடப்பக்கம் இரண்டு வீடுகள் என உண்மையாகவே ஒரு சிறுவன் வரைந்தது போலவே இருக்கிறது.
இரண்டாவது ஓவியம் ஏதோ வானத்தில் பறக்கிறது அது என்னவென்று தெரியவில்லை. ஆனால் எதிர்காலத்தில் பறக்கும் ஒரு விமானமாகக் கூட இருக்கலாம் அப்படி எதையோ எதிர்கால கண்டு பிடிப்புகளை மனதில் வைத்து வரைந்திருக்கிறது பார்க்க எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஜெட் போல இருக்கிறது.
தன்னைத் தானே
இதை எல்லாம் விட ஐந்து வயது சிறுவன் இல்லஸ்ட்ரேட்டர் வரைந்தது போல, தன்னைத் தானே வரைந்திருக்கிறார். அதைப் பார்த்தால் மைக்ரோ நொடிகளில் ஸ்டெம்பிங் செய்யும் எங்கள் தல தோனி போல இல்லை, ஹெலிகாப்டர் ஷாட் அடித்து இந்தியாவை வெற்றி பெறச் செய்யும் எங்கள் வீர யுக நாயகன் மஹிந்திர பாகுபலி தோனியாக சத்தியமாகக் எங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனால் வரைந்து கொண்டது நம் தல என்பதால் ஒன்றும் சொல்வதற்கில்லை. இது தான் அவரின் ஃபேவரெட் ஓவியம் எனவும் சொல்லி பெருமிதப்பட்டிருக்கிறார் தல தோனி.
குட்டி வருத்தம்
ஒற்றை சொடக்கில் மொத்த இந்திய கிரிக்கெட்டையும் வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்ற அந்த தோனி எங்கே...? இங்கு ஒரு சாதாரண டீ ஷர்ட், நல்ல காற்றோட்டமான ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு வீட்டு பால்கனியில் பெயிண்ட் பிரஷ்ஷுகளோடு படம் வரைந்து கொண்டிருக்கும் தோனி எங்கே..? என இப்போதே ரசிக பெருமக்கள் முனு முனுக்கத் தொடங்கிவிட்டார்கள். சிலர் வா தல, ஓவியத்திலயும் நீ தான் ரஜா என மலர் தூவி வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் ரசிக ரசிகைகள்.
தற்போது
உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் இருக்கும் தோனி, அடுத்து இங்கிலாந்துக்கு பறக்க இருக்கிறார். தன் உலகக் கோப்பை போட்டிகளை முடித்துக் கொண்டு ஓவியத்தில் முழுமையாக வலது கால் வைப்பார் என்கிறார்கள். அதோடு கூடிய விரைவில் தன் ஓவியங்களை கண்காட்சியாகவும் வைக்க இருக்கிறாராம். அதற்கு ரசிக ரசிகைகளிடம் இருந்து அறிவுரைகளையும் உரிமையாகக் கேட்டிருக்கிறார் நம்ம தல தோனி.
பணம்
இதற்கு மத்தியில் "தோனி தன் புகழை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார். தன் பெயரில் எது வந்தாலும் நல்ல விலைக்குப் போகும் என்பதை உணர்ந்தவர் தோனி. ஆகையால் தானே ஓவியம் வரைந்து அதை கண்காட்சியாக வைத்து, வரும் பணத்தை சில நல்ல காரியங்களுக்குச் செலவு செய்ய இருக்கிறார்" எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுவரை அதிகார பூர்வமாக எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
சாதனைகள்
இதை எல்லாம் பார்க்கும் போது 2014-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது எல்லாம் கண் முன் வந்து போகிறது. தற்போது வரை சுமார் 340 போட்டிகளில் 10,500-கும் மேற்பட்ட ரன்களை குவித்திருக்கிறார் நம் தல தோனி. அதில் 10 சதங்கள் மற்றும் 71 அரை சதங்கள் அடக்கம். பேட்டிங் சராசரி சுமார் 50-ஆக இருக்கிறது.
கடைசி போட்டி
அனேகமாக நம் தல தோனி இந்தியாவுக்காக விளையாடும் கடைசி உலகக் கோப்பை இதுவாகத் தான் இருக்கும் என் ஆரூடம் சொல்கிறார்கள் விளையாட்டு விமர்சகர்கள். ஆக இந்த கடைசி உலகக் கோப்பையை வெல்ல, தன் முதல் போட்டியை 2019 ஜூன் 05-ம் தேதி தென் ஆப்பிரிக்கா உடன் தொடங்க இருக்கிறது இந்தியா. தோனி கோப்பையை கோலியோடு நின்று வென்று கொடுப்பார் என இப்போதே தமிழர்கள் பிரார்த்திக்கத் தொடங்கிவிட்டார்கள். தோனியும் களம் இறங்கிவிட்டார். அவர் அங்கு கோப்பையை வெல்லட்டும். நாம் இங்கு அவர் ஓவியர் வாழ்க்கை சிறக்க வாழ்த்துவோம்.
தோனி சார், உங்கள் ஓவியர் வாழ்கை சிறக்க வாழ்த்துக்கள்.