டெல்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் அனைத்தும் தற்போது ஆளும் பாஜகவே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று சொன்னதை அடுத்து பைசா பெறாத பங்குகள் எல்லாம் நல்ல லாபத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றன.
நட்பிற்கு இலக்கணமான, பிரதமர் நரேந்திர மோடி (Modi) மற்றும் கெளதம் அதானியின் (Gautam Adani) நட்பு நேற்று பங்குச் சந்தைகளில் புதிய உச்சங்களைத் தொட்டிருக்கிறது.
அதானி குழும பங்குகள் அனைத்தும் நினைத்துக் கூட பார்க்க முடியாத உச்ச விலையில் வர்த்தகமாயின. இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான நேற்று (மே 20, 2019) திங்கட்கிழமையன்று மொத்த சந்தையும் கேப் அப்பிலேயே வர்த்தகமாகத் தொடங்கின.
உச்சம்
வர்த்தகத்தின் தொடக்கம் முதலே அதானி குழுமத்தை சேர்ந்த aதானி போர்ட்ஸ் தொடங்கி அதானி பவர் வரை... அனைத்து பங்குகளும் குறைந்த பட்சமாக 15 சதவிகித ஏற்றத்துடனேயே வர்த்தகமாகின. வர்த்தகத்தின் இடையிலும் எந்தவிதமான சுனக்கமும் இல்லாமல் தோனி சிக்ஸர் போல வர்த்தகத்தின் இறுதி வரையிலும் தொடர்ந்து உச்ச விலையிலேயே வர்த்தகமாகின.
ஏற்றம்
இந்தியா மட்டுமல்லாது, பக்கத்து நாடுகளான, பர்மா, மலேசியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா என (கோபால் பல்பொடி விளம்பரம் போல்) உலகில்எங்கெல்லாம் அதானி குழும பங்குகள் வர்த்தகமானதோ, அங்கெல்லாம் அவை கொழுத்த விலை ஏற்றம் கண்டதக சொல்கிறார்கள் பங்குச் சந்தை ஆய்வாளர்கள்.
ஆக்டோபஸ் கரங்கள்
கடந்த 1988ஆம் ஆண்டுகளில் ஒரு சாதாரண பல்பொருட்கள் விற்பனை நிலையத்தையும் சிறிய அளவில் ஏற்றுமதி வியாபாரத்தையும் நடத்திவந்த கவுதம் அதானி, இன்றைக்கு கட்டுமானத்துறை, கப்பல் கட்டும் துறை, தளவாட போக்குவரத்து, மின் உற்பத்தி, ரியல் எஸ்டேட், நிதிச் சேவைகள், நிலக்கரி உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி, விவசாயம் என இன்னும் எத்தனை துறைகள் உள்ளனவோ அத்தனையையும் தன்னுடைய ஆக்டோபஸ் கரங்களால் வளைத்து கபளீகரம் செய்து தனதாக்கிக் கொண்டு அசுர வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு மோடியின் நட்பும் ஒரு பெரிய காரணம்.
காணவில்லை
அதானி பங்குகளை, கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முன், திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல தனியாக அழுது கொண்டிருந்தது. உள்நாட்டு முதலீட்டாளர்களோ, சில்லறை முதலீட்டாளர்களோ, நிறுவன முதலீட்டாளர்களோ மற்றும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்களோ யாரும் அதானி நிறுவனங்கள் மீது பெரிய நம்பிக்கை வைத்து முதலீடுகளை மேற்கொள்ளவில்லை. இந்தியாவில் பிசினஸ் செய்யும் வியாபாரிகளில் கெளதம் அதானியும் ஒருவர் அவ்வளவு தான்.
வாங்க ஆளில்லை
பொதுவாக தரமான முன்னணி நிறுவனப் பங்குகளின் விலையைக் காட்டிலும் அதானி குழுமத்தைச் சேர்ந்த பங்குகள் எல்லாம் மிகக் குறைவான விலையிலேயே வர்த்தகமாயின. அன்றைக்கு அதானி குழும பங்குகளை கூவிக் கூவி விற்றாலும் நம்பிக்கையாக அடுத்த சில வருடங்களுக்கு வாங்கிப் போட்டு லாபம் பார்க்க ஆளில்லாமல் அல்லாடிக்கொண்டு இருந்தன. அன்றைக்கு அதானி நிச்சயம் நினைத்திருப்பார் இருங்கடா எனக்கும் ஒரு காலம் வரும், அப்போ உங்களை எல்லாம் வச்சி செய்யிறேன் என்று.
ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு
அதானி நினைத்தது போல் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி தலைமையலான பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. அந்த நிமிடத்தில் இருந்து திருவாளர் கவுதம் அதானி அவர்களுக்கு குருவும் சுக்கிரனும் ஒன்று சேர்ந்து ஆசி வழங்கி வருகின்றனர். இதற்கு பேர் தான் ஒடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்பார்கள் போல.
இரண்டு மாதத்தில் 126 ஒப்பந்தங்கள்
பிரதமராக நரேந்திர மோடி பதவிக்கு வந்த பின்னர் மத்திய அரசு சம்பந்தப்பட்ட எந்த ஒப்பந்த வேலையாக இருந்தாலும், அதானியின் கண் அசைவில் தான் நடந்தன. அதற்கு சமீபத்தைய விமான் நிலைய பராமரிப்பு பணிகள் ஒரு எடுத்துக்காட்டு. கெளதம் அதானி சாப்பிட்டு முடித்த அப்பத்தில் மீதி தான் மற்ற தொழிலதிபர்களுக்கு. இதற்கு உதாரணம், கடந்த 2018ஆம் ஆண்டில் நாடு முழுவதும் இயற்கை எரிவாயு பதிப்பதற்கான ஒப்பந்தம் தான். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சுமார் 126 ஒப்பந்தங்கள் அதானி குழுமத்திற்கே கிடைத்தன என்றால் மற்றவற்றை நீங்களே எண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள்.
2014ஆம் ஆண்டுவரை 44தான் அப்புறம் 92
கடந்த 2014ஆம் ஆண்டில் அதானி குழுமம் மொத்தமே 44 திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வந்தது. ஆனால் அதுவே 2018ஆம் ஆண்டில் 92 ஆக உயர்ந்துவிட்டது. உள்கட்டமைப்பு துறையானது கடந்த நான்க ஆண்டுகளில் கடும் சிக்கலை சந்தித்து வந்தது. சுமார் 200 நிலக்கரி சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.
அதானிக்கு விதிவிலக்கு
உச்ச நீதிமன்றத்தின் தடையால் அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் அளித்திருந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் அந்த ஒப்பந்ததாரர்களில் பெரும்பாலானவர்கள் திவால் நோட்டீஸ் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் அதானி குழுமம் மட்டும் தன்னுடைய வேலையை செவ்வனே தொடர்ந்து வருகிறது.
ஏர்போர்ட் கான்ட்ராக்ட்
சமீப காலங்களில் கூட இந்தியாவில் உள்ள ஆறு சர்வதேச விமான நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை அதானி குழுமமே தட்டிச்சென்றுள்ளது (கொடுத்துதான ஆகணும், இல்லேன்னா நடக்கிறதே வேறெ). மற்ற நிறுவனங்கள் போட்டியில் கலந்து கொண்டாலும், தமிழ் சினிமாவில் வருவது போல பின்னர் அவர்களே விருப்பப்பட்டு விலகிக் கொண்டனர். கடந்த 2014ஆம் ஆண்டில் மோடி பதவிக்கு வந்ததில் இருந்து அதானி குழுமத்தின் பங்குகள் எல்லாம் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன.
கருத்துக் கணிப்புகள்
கடந்த 19ஆம் தேதியுடன் முடிவடைந்த 17வது லோக்சபா தேர்தலில் மீண்டும் ஆளும் பாஜக கூட்டணியே வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என்று அனைத்து ஊடகங்களும் கருத்துத் கணிப்புகளை வெளியிட்டன. இந்த ஒரு காரணத்தை வைத்து இந்திய பங்குச் சந்தையில் காளையின் ஆட்டம் அபாரமாக இருந்தது.
தொடக்கூட முடியவில்லை
மூக்கணாங்கயிறு இல்லாத ஜல்லிக்கட்டு காளை போல், கரடியை கொஞ்சம் கூட தொட்டுப்பார்க்க வாய்ப்பு தராமல் வர்த்தகத்தின் இறுதி வரையிலும் சளைக்காமல் களைப்பு இல்லாமல் நிதானமாக அதே சமயத்தில் ஆக்ரோசமாக ஆடிவிட்டு ஓய்ந்தது அதானி குழும பங்குகளின் விலை. இதன் ஆட்டம் இன்றும் தொடருமா அல்லது 23ஆம் தேதி வரை ஆட்டம் கண்டு அடங்கி விடுமா எனத் தெரியவில்லை.
15 சதவிகித லாபம்
நேற்றைய பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கத்தை பயன்படுத்தி மொக்கையான பங்குகள் கூட அதிக லாபம் பார்த்தன. அதானி குழுமப் பங்குகள் சும்மா இருக்குமா என்ன...? வர்த்தகத்தின் தொடக்கம் முதலே சுமார் 15 சதவிகித லாபத்துடனேயே வர்த்தகமாகின. இறுதியில் உச்ச விலையிலேயே நிலைபெற்றன.
அதானி குழுமத்தின் பங்குகள் திங்கட்கிழமை நிலவரங்களை பார்க்கலாம்.
அதானி பவர் (Adani Power)
இந்நிறுவனத்தின் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே சுமார் 10 சதவிகிதம் அதாவது 4.75 ரூபாய் அதிகரித்து 44.50 ரூபாய் விலையில் வர்த்தகத்தை தொடங்கியது. உச்ச விலையாக 47.55 ரூபாய் வரை சென்றது. இறுதியில் 46.95 ரூபாய் அதாவது 15.21 சதவிகிதம் அதிகரித்து நிலைபெற்றது.
Adani Ports and SEZ Ltd
இந்நிறுவனத்தின் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே சுமார் 5.5 சதவிகிதம் அதாவது 20.40 ரூபாய் அதிகரித்து 388.85 ரூபாய் விலையில் வர்த்தகத்தை தொடங்கியது. உச்ச விலையாக 409.90 ரூபாய் வரை சென்றது. இறுதியில் 409.90 ரூபாய் அதாவது 11.25 சதவிகிதம் அதிகரித்து நிலைபெற்றது.
அதானி ட்ரான்ஸ்மிசன் (Adani Transmission Ltd)
இதன் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே சுமார் 6 சதவிகிதம் அதாவது 12 ரூபாய் அதிகரித்து 217.40 ரூபாய் விலையில் வர்த்தகத்தை தொடங்கியது. உச்ச விலையாக 226.70 ரூபாய் வரை சென்றது. இறுதியில் 223.85 ரூபாய் அதாவது 9 சதவிகிதம் அதிகரித்து நிலைபெற்றது.
அதானி என்டெர்பிரைசஸ் (Adani Enterprises)
இதன் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே சுமார் 9 சதவிகிதம் அதாவது 10 ரூபாய் அதிகரித்து 129.50 ரூபாய் விலையில் வர்த்தகத்தை தொடங்கியது. உச்ச விலையாக 155.10 ரூபாய் வரை சென்றது. இறுதியில் 154.35 ரூபாய் அதாவது 29.38 சதவிகிதம் அதிகரித்து நிலைபெற்றது.
அதானி கேஸ் (Adani Gas)
இதன் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே சுமார் 12 சதவிகிதம் அதாவது 14.40 ரூபாய் அதிகரித்து 130 ரூபாய் விலையில் வர்த்தகத்தை தொடங்கியது. உச்ச விலையாக 134.50 ரூபாய் வரை சென்றது. இறுதியில் 130.10 ரூபாய் அதாவது 12.54 சதவிகிதம் அதிகரித்து நிலைபெற்றது.
அதானி கிரீன் எனெர்ஜி (Adani Green Energy)
இதன் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே சுமார் 10 சதவிகிதம் அதாவது 4 ரூபாய் அதிகரித்து 41.05 ரூபாய் விலையில் வர்த்தகத்தை தொடங்கியது. உச்ச விலையாக 43.80 ரூபாய் வரை சென்றது. இறுதியில் 43 ரூபாய் அதாவது 15 சதவிகிதம் அதிகரித்து நிலைபெற்றது.
அம்மாடி 170 சதவிகித வளர்ச்சி
இதில் அதானி பவர் நிறுவனம் கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முன்பு வரை 40 சதவிகித வளர்ச்சியையே பெற்றுவந்தது. ஆனால் மோடி பிரதமராக வந்த 2014ஆம் ஆண்டிலிருந்து நேற்று வரையிலும் சுமார் 170 சதவிகித வளர்ச்சியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கே அடிச்சா அங்கெ வலிக்கும்
மொடியின் வெற்றி குறித்த கருத்துக்கணிப்பு ஆஸ்திரேலியா வரைக்கும் எட்டிவிட்டது. அதானி குழுமம் ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து மாகாணத்தில் நிலக்கரி வெட்டி எடுக்க தடை விதித்திருந்தது. தற்போது வந்துள்ள தேர்தல் முடிவுகளால் குவின்ஸ்லாந்து மாகாண அரசு இனியாவது தன்னுடைய முடிவுகளை மாற்றிக்கொள்ளும் என்று நம்புவதாக அதானி மைனிங் நிறுவனத்தின் ஆஸ்திரேலியா தலைமை நிர்வாகி லூகஸ் டோவ் (Lucas Dow) தெரிவித்தார்.
அதானே... அதானி ன்னா சும்மாவா