பீஜிங்: உலகின் இரு வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் தொடங்கிய வர்த்தகப்போர் தற்போது அதிமுக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சீனாவின் தகவல் தொடர்பு சாதனங்களுக்கு அமெரிக்கா தடைவிதித்ததைத் தொடர்ந்து சீனாவும் பதிலுக்கு மின்னணு சாதனங்களுக்கு உபயோகிக்கும் அரிய வகை உலோக ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்துள்ளது.
அமெரிக்கா தான் தயாரிக்கும் அனைத்துவித மின்னணு சாதனங்களுக்கு உபயோகிக்கும் மூலப்பொருளான அரிய வகை உலோகத்திற்கு 80 சதவிகிதம் சீனாவிடம் இருந்தே இறக்குமதி செய்கிறது. தற்போது சீனா இதற்கு கட்டுப்பாடு விதிக்க உள்ளதால் அமெரிக்காவின் நிலை இடியாப்பச் சிக்கலில் மாட்டிக்கொண்ட ஈயின் நிலைமை ஆகிவிட்டதாக தெரிகிறது.
உலகம் முழுவதும் தயாரிக்கப்படும் ஸ்மார்ட்ஃபோன் முதல் பொம்மை கார் வரையிலும் அனைத்துவிதமான பொருட்களிலும் உள்ள மின்னணு சாதனங்களிலும் பயன்படுத்தும் அரிய வகை உலோக உற்பத்தியில் சீனா 95 சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
பிள்ளையார் சுழி
உலகின் சூப்பர் பவர் நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் வர்த்தகப் பற்றாக்குறை என்ற ஒற்றை சொல்லை வைத்துக்கொண்டு உலகை அச்சுறுத்திக்கொண்டுள்ளன. இதற்கு முதலில் பிள்ளையார் சூழி போட்ட பெருமை நம் டொனால்ட் ட்ரம்புக்குத்தான் போய்ச் சேரும்.
ஆடுறா ராமா ஆடுறா
சீனாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் மதிப்பைக் காட்டிலும் இறக்குமதியாகும் பொருட்களின் மதிப்பானது அதிகமாக இருப்பதால் அமெரிக்காவின் அந்நியச் செலாவணி இருப்பு கையை விட்டுப்போவது ட்ரம்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் மிகப் பெரிய பலமே அதன் டாலர் மதிப்பு தான். அந்த ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு உலக நாடுகளை எல்லாம் ஆடுறா ராமா ஆடுறா என்று ஆட்டி வைத்துக்கொண்டிருக்கிறது.
அதிக இறக்குமதி வரி
சரி விசயத்திற்கு வருவோம். அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு சீனா அதிக அளவில் வரி விதிப்பதும், பதிலுக்கு சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா குறைந்த அளவில் வரி விதிப்பதாலும் தான் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படுகிறது என்ற கொலம்பஸ் காலத்து உண்மையை உணர்ந்த ட்ரம்ப், சீனாவிடம் இறக்குமதி வரியை குறைக்க வலியுறத்தியது.
14 லட்சம் கோடி ரூபாய்
அமெரிக்காவின் கோரிக்கையை சீனா கண்டுகொள்ளாததால், அமெரிக்கா இறக்குமதி வரிகுறைப்பு தொடர்பாக சீன துனை அதிபர் லியூ ஹீ தலைமையிலனே குழுவுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களுக்கு கூடுதலாக வரி விதித்து உத்தரவிட்டார்.
4.23 லட்சம் கோடி ரூபாய்
அமெரிக்காவின் இந்த செயலுக்கு எதிர் வினையாக சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சுமார் 4.23 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு கூடுதலாக வரி விதித்து தன்னுடைய எதிர்ப்பை காட்டியது. இதைப் பார்த்து கடுப்பான அமெரிக்கா இறுதி எச்சரிக்கை விடுப்பது போல், சீனா உடனடியாக இறக்குமதி வரி குறைப்பு சம்பந்தமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று மிரட்டிப் பார்த்தது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கு
தன்னுடைய மிரட்டலையும் சீனா கண்டு கொள்ளாததால், எரிச்சலான ட்ரம்ப் உடனே, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி சீனாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு சாதன நிறுவனமான ஹீவாய் (Huawei) உள்பட சுமார் 70 நிறுவனங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். சீனா இதற்காகவாவது தன்னிடம் வந்து சரணடையும் என்று ட்ரம்ப் எதிர்பார்த்தார்.
சீனா போட்ட குண்டு
சீனா தன்னிடம் வந்து மண்டியிடும் என்று எதிர்பார்த்த அமெரிக்காவுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. அதே நேரத்தில் அமெரிக்கா எதிர்பார்க்காத மற்றொரு குண்டைத் தூக்கி அதன் தலையில் போட்டுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். இதற்கு பெயர்தான் இங்கன அடிச்சா அங்கன வலிக்கும் என்பது.
அரிய வகை உலோகம்
இன்றைக்கு உலக நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து விதமான மின்னணு சாதனங்களான தொலைக்காட்சி பெட்டி, கேமரா, ஸ்மார்ட் ஃபோன்கள் முதல் குழந்தைகள் பயன்படுத்தும் விளையாட்டு பொருட்களான பொம்மை கார்கள் வரை அனைத்து பொருட்களிலும் உள்ள முக்கிய உலோகமான அரிய வகை உலோகங்களை (Rare Earth Metal) ஏற்றுமதி செய்வதில் சீனாதான் முன்னிலை வகிக்கிறது. அதாவது தங்க நகை தயாரிப்பதற்கு தாமிரம் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் இந்த அரிய வகை உலோகமாகும்.
சீனா முதலிடத்தில்
அரிய வகை உலோக உற்பத்தியில் (17 வகையான உலோகங்கள்) சீனா 95 சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது. ஆனால் அமெரிக்காவோ தான் தயாரிக்கும் அனைத்து விதமான பொருட்களிலும் பயன்படுத்தும் அரிய வகை உலோகத்தை அதாவது 80 சதவிகிதம் வரையிலும் சீனாவிடம் தான் கையேந்தி வாங்குகிறது.
அமெரிக்கா கதி அதோகதி
அரிய வகை உலோக உற்பத்தியை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, இனிமேல் இதை அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. ஒருவேளை அரியவகை உலோகத்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதை முற்றிலும் தடை செய்துவிட்டால் அமெரிக்காவின் நிலை அதோகதியாகிவிடும் என்று சீனாவும் நினைக்கிறது. அதன் பின்னர் வர்த்தகப்போர் முடிந்து இரு நாடுகளுக்கும் தொழில்நுட்ப போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
கட்டளை அல்ல சாசனம்
இந்த வார தொடக்கத்தில் சீன அதிபர் சீ ஜின்பிங் (Xi Jnping) அரிய வகை உலோக நிறுவனத்திற்கு வருகை தந்தார். அப்போது அரிய வகை உலோக உற்பத்தியை கட்டுப்படுத்துவது தொடர்பாக தெளிவான திட்டத்தை தயார் செய்துள்ளதாக தெரிகிறது. நம்முடைய தொழில்நுட்ப திறமைகளை நாம் சரிவரி புரிந்துகொண்டு அதற்கேற்ப அவற்றை பயன்படுத்தவேண்டும் என்றும் அதோடு கட்டளையிடும் உயரத்தில் நாம் இருக்கவேண்டும் என்றும் அதிபர் தெரிவித்ததாக சீனாவின் அதிகார பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹூவா செய்தி நிறுவனம் (Xinhua news agency) தெரிவித்துள்ளது.
சீனாவின் பயம்
அரிய வகை உலோகம் என்பது மிகவும் அரிதானது மட்டுமல்லாமல் புதுப்பிக்க முடியாத உலோகமும் கூட என்றும் சீ ஜின்பிங் தெரிவித்ததாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் சீனா இந்த அரியவகை உலோகம் என்னும் ஆயுதத்தை கையில் எடுக்க பயந்து யோசித்துக்கொண்டிருப்பதாக உலகளாவிய ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
தற்செயலான நிகழ்வு அல்ல
சீன அதிபரின் அரிய வகை உலோக நிறுவனத்திற்கு சென்று பார்த்தது தற்செயலான நிகழ்வு கிடையாது, அதற்கு சாத்தியமும் இல்லை. எல்லாமே திட்டமிட்டபடி நடந்ததுள்ளது என்று சிங்கப்பூரில் உள்ள எஸ். ராஜரத்தினம் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் (S.Rajaratnam School of International Studies-RSIS) திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் லீ மிஞ்சியாங் தெரிவித்தார்.
உற்பத்தி பாதிக்கும்
தற்சமயத்திற்கு அரிய வகை உலோகத்தை ஏற்றுமதி செய்வதற்கு சீனா தடைசெய்துள்ளதாக தெரிகிறது. இதனால் அமெரிக்காவின் பெருமளவு மின்னணு பொருட்களின் உற்பத்திய கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.