வாஷிங்டன்: ஈரான் நாட்டிலிருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்த இந்தியா இறக்குமதியை படிப்படியாக குறைத்து தற்பொழுது முழுவதுமாக நிறுத்திவிட்டது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தொடர்ந்து எதிர்த்து வந்ததை அடுத்து 6 மாதம் வரையிலும் கால அவகாசம் கேட்டிருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்துடன் காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து இந்தியா இந்த மாத தொடக்கதில் இருந்து படிப்படியாக குறைத்துக்கொண்டு வந்து தற்போது கச்சா எண்ணெய் இறக்குமதியை முழுவதுமாக நிறுத்திவிட்டது என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா தெரிவித்துள்ளார்.
அதேபோல் வெனிசூலா நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும் அமெரிக்க கட்டுப்பாடு விதித்ததால் வேறு வழியில்லாமல் இந்தியா தற்போது அதையும் முழுவதுமாக நிறுத்திவிட்டதாக அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது.
பொருளாதாரத் தடை
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அணு ஆயுதங்களையும் யுரேனியத்தையும் வைத்துக்கொண்டு ஈரான் மிரட்டுவதாக குற்றம் சாட்டிய அமெரிக்கா ஈரான் மீது பொருளாதாரத் தடையை விதித்தது. இதை மீறி மற்ற நாடுகள் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை தொடர்ந்தால் அந்த நாடுகளின் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று எச்சரித்தது.
மாற்று வழி என்ன
இந்தியா, சீனா ஜப்பான், தென்கொரியா, துருக்கி போன்ற நாடுகள் ஈரானிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவந்தன. மேற்படி நாடுகள் ஈரானிலிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவந்த நிலையில் மாற்று வழியை தேடும் வரையிலும் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன.
6 மாத காலக் கெடு
இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு நடப்பு மேதம் 1ஆம் தேதி வரையிலும் கால அவகாசம் அளித்திருந்தது. அதற்குள் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக குறைத்துகொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா எச்சரித்தது. மீறினால் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும் இறுதிக் கெடு விதித்தது.
இறக்குமதி இல்லை
அமெரிக்காவின் எச்சரிக்கை மற்றும் உத்தரவுக்கு பணிந்துகொண்டு இந்தியாவும் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக குறைத்துகொள்ள முடிவெடுத்தது. அதன் படி கடந்த 6 மாதங்களாக படிப்படியாக கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து கடந்த ஏப்ரல் மாதத்தில் 57 சதவிகிதமாக அதாவது 10 லட்சம் டன்களாக குறைத்துது. தற்போது அதையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து இறுதியில் இந்தியா தன்னுடைய இறக்குமதியை முழுவதுமாக நிறுத்திக்கொண்டது.
முழுசா நிப்பாட்டிட்டோம்
இந்தியாவில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிடம் தெரிவிப்பதற்காக சென்ற இந்தியத் தூதர் ஷிரிங்லா, ஈரான் மற்றும் வெனிசூலா நாடுகளில் இருந்து செய்து வந்த கச்சா எண்ணெய் இறக்குமதியை தற்போது முற்றிலும் நிறுத்திவிட்டதாக தெரிவித்தார். அவ்வளவு தான் இனிமேல் அங்கிருந்து எதையும் நாங்கள் இறக்குமதி செய்யும் உத்தேசம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
எங்கே செல்லும் இந்தப் பாதை
அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஈரான் மற்றும் வெனிசூலா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா சுத்தமாக நிறுத்திவிட்டது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 10 சதவிகிதம் வரையிலும் ஈரான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்து வந்தோம். இனிமேல் அது கிடையாது என்று ஷிரிங்லா தெரிவித்துள்ளார்.
ஆழமான உறவு இருக்கு
ஈரானும் இந்தியாவும் பழங்காலத்தில் இருந்தே ஆழமான அரசியல் மற்றும் கலாச்சார அடிப்படையில் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையால் இந்த உறவில் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் ஷிரிங்லா கூறினார். அதோடு இந்தியா ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பாக அமெரிக்கா எந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பது பற்றியும் சொல்ல ஷிரிங்லா மறுத்துவிட்டார்.
நாங்கள் மய்யமாத்தான் நிப்போம்
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை என்பது இரு நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதும், அது பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்படவேண்டியது என்றும் இந்தியா எந்த பக்கமும் சார்ந்திருக்காமல் வெறும் பார்வையாளர் மட்டுமே என்றும் ஷிர்ங்லா கூறினார்.
பெட்ரோல் விலை ஏறுமா
இந்தியா தன்னுடைய கச்சா எண்ணெய் இறக்குமதியை ஈரானுக்கு அடுத்து வெனிசூலாவில் இருந்தும் அதிகமாக இறக்குமதி செய்து வந்த நிலையில் அமெரிக்காவின் எச்சரிக்கையை அடுத்து அங்கிருந்தும் தன்னுடைய கச்சா எண்ணெய் இறக்குமதியை முற்றிலும் நிறுத்திவிட்டதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.