புதிதாக பொறுப்பேற்க உள்ள மத்திய அரசு நில சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தாவிடில் இந்தியப் பொருளாதாரம் மேலும் சரிவடையும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் கூறியுள்ளார்.
புதிதாக அமைய உள்ள அரசுக்கு வரப்போகும் சவால்களில் மிகவும் முக்கியமானது நில சீர்திருத்தம் என்றும், புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நிலத்தை ஆர்ஜிதம் செய்வதற்கு வசதியாக நில சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். நில ஆர்ஜிதத்தை தொடர்ந்து தொழிற்சாலைக்கு தேவையான பணியாளர்களை ஈடுபடுத்த தொழிலாளர் சீர்திருத்தம் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிதாக பொறுப்பேற்கவுள்ள பிரதமர்,நில சீர்திருத்தம் மற்றும் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் கொண்டுவருவதற்கு முன்னுரிமை அளிப்பதோடு, தொழில் நிறுவனங்களுக்கு எளிய வகையில் முதலீடுகிடைக்கவும் உரிய வழிவகைகளை செய்ய வேண்டும் என்றும் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் கூறினார். 2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நில சீர்திருத்த சட்டத்தின்படி நிலத்தின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இதுபோன்ற விஷயங்களில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதன் மூலம்தான் தொழில் தொடங்குவது எளிதாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர் அதிக வட்டி மற்றும் வங்கிகளில் போதிய நிதி ஆதாரம் இல்லாத சூழல் ஆகியவையே தொழில்துறையை வெகுவாக பாதிக்கும் காரணிகளாக உள்ளதை குறிப்பிட்டார். தொழிலாளர் அமைச்சகம், தொழிலாளர்களை பணியில்அமர்த்துவதை எளிதாக்குவதற்கான சட்டங்களை உருவாக்கியுள்ளது.
அதோடு ஏற்கெனவே உள்ள 44 சட்டங்களுக்கு பதிலாக ஒரே ஒரு எளிமையான சட்டம் அதாவது ஊதியம், தொழில்துறை உறவு,சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் நலன், பணியிட சூழல் ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தும் வகையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றார். குறைந்தபட்ச ஊதியம் வரையறுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டிய அவர் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவைசந்தித்து வருகிறது.
முன்னெப்போதும் இல்லாத அளவாக 6 காலாண்டில் எட்டப்பட்டதைக் காட்டிலும் டிசம்பரில் முடிவடைந்த காலாண்டில் 6.6 சதவீதமாக உள்ளது என்றும் கூறினார்.