டெல்லி: பழைய காலத்து சினிமாவில் வருவது போல சிகரெட் புகையை வளைய விட்டபடி, ஒரு கிளாஸில் மது ஊற்றி ஆற அமர குடிப்பதெல்லாம் இப்ப மலையேறிப் போச்சு. டீ, காபி குடிப்பது போல நார்மல் ஆகி விட்டது.
விடுவார்களா மது உற்பத்தியாளர்கள். விதம் விதமான சுவையில் மது வகைகளை தயாரித்து விற்பனைக்குத் தள்ள ஆரம்பித்துள்ளனர். விஸ்கினா இப்படித்தான் இருக்கணுமா என்ன... தேநீர் சுவை, பட்டர்ஸ்காட்ச் சுவை என விதம் விதமான விஸ்கிகள் இப்போது விற்பனைக்கு வர ஆரம்பித்துள்ளனவாம்.
பழச்சுவை கலந்த, இனிப்பு கலந்த விஸ்கியும் இப்போது மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. எத்தனை நாளைக்குத்தான் ஒரே சுவையில் குடிப்பது. விதம் விதமா வந்தா நாக்குக்கு நல்லாதானே இருக்கும் என்று குடிகாரர்களும் ஹேப்பியாகியுள்ளனர்.
பெண்கள் ஸ்பெஷல்
குறிப்பாக பெண்களை குறி வைத்து காபி சுவையுடன் கூடிய விஸ்கி விற்பனைக்கு வந்துள்ளதாம். இதுகுறித்து சிரேஷ்டா சஹா என்ற பெண்மணி கூறுகையில், நான் ரொம்ப காலமாக குடிக்காமல் இருந்தேன். எனக்கு சுவை போரடித்ததால் அந்த முடிவு. ஆனால் இப்போது காபி சுவையுடன் வந்துள்ள விஸ்கி என்னை கவர்ந்துள்ளது. காபி குடிப்பது போலவே அதை குடிக்கலாம். எனவே மறுபடியும் விஸ்கியை கையில் எடுத்துள்ளேன் என்கிறார்.
சுவையில் வித்தியாசம்
சஹா போன்ற பலரும் இப்படி வித்தியாசமான மது வகைகளை எப்போதுமே வரவேற்கிறார்கள் என்பதால் மது உற்பத்தியாளர்களும் இப்போது புதிது புதிதாக பல ரகங்களை களம் இறக்க ஆரம்பித்துள்ளனர்.
பகார்டி விஸ்கி
பகார்டி நிறுவனம் தற்போது புதிய வகை ஸ்காட்ச் விஸ்கியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த வகை விஸ்கியைத் தயாரிக்கும் உரிமையைப் பெற்ற தீவார் இந்தியாவின் எர்னஸ்ட் ரீட் கூறுகையில், தற்போது உள்ள சுவையுடன் கூடுதலாக புதிய சுவையுடன் கூடிய விஸ்கியை தயாரிக்கவுள்ளோம்.
ஆப்பிள் சுவை
தேன், ஆப்பிள் சுவையுடன் கூடிய புதிய வகை விஸ்கிகள் நிச்சயம் புதுமையை விரும்பும் குடிமக்களைக் கவரும் என்று கருதுவதாக அவர் கூறினார். முதல் முறையாக அல்லது நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஸ்கி சாப்பிட வருவோர், அதீத போதையை விரும்ப மாட்டார்கள். மாறாக லேசான போதையுடன் கூடிய சந்தோஷத்தையே அவர்கள் விரும்புகிறார்கள்.
மெல்ல குடித்து அனுபவியுங்கள்
எனவே அவர்களை கருத்தில் கொண்டே இந்த புதிய வகை விஸ்கிகள் களம் இறக்கப்படுகிறதாம். அதாவது படிப்படியாக ஒருவரை பெருங்குடிகாரர்களாக மாற்ற இது உதவுமாம்!