வாசிங்டன்: கடந்த நவம்பர் 04, 2018 அன்று ஈரான் மீது, அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. நவம்பர் 04, 2018-ல் இருந்து மே 02, 2019 வரை ஈரானிடம் எண்ணெய் வாங்க, இந்தியா உட்பட 8 நாடுகளுக்கு அனுமதி கொடுத்தது அமெரிக்கா. இப்போது மே 02, 2019-க்குப் பிறகு, ஈரானிடம் இருந்து கச்சாஅ எண்ணெய் வாங்க எந்த நாட்டுக்கும் அனுமதி கொடுக்க வில்லை அமெரிக்கா.
ஆனால் இந்தியா பின் வாசல் வழியாக ஈரான் உடன் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடு பட இருப்பதாக, மத்திய அமைச்சக வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இதற்கு அதிகார பூர்வமாக பதில் அளிக்கும் விதத்தில் அமெரிக்க தன் திருவாய் மலர்ந்திருக்கிறது. இப்போது அந்த மலர்ச்சி இந்தியாவுக்கு எதிராக மலர்ந்திருப்பது தான் இங்கு கவனிக்க வேண்டிய விஷயமே..!
இந்தியாவுக்கு பதில்
அமெரிக்காவைப் பொறுத்தவரை, நவம்பர் 04, 2018-ல் ஈரான் என்கிற தீவிரவாத நாட்டின் மீது விதித்த பொருளாதாரத் தடை சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஈரான் முழுமையாக பொருளாதார ரீதியாக தளர்ந்திருப்பதாக நம்புகிறது. இந்தியா, ஈரான் உடன் வர்த்தக உறவு வைத்துக் கொண்டால், ஈரான் மீது விதித்தது போலவே இந்தியா மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் எனத் தெளிவாகச் சொல்லி விட்டது. அதோடு இனி வருங்காலங்களிலும், இந்தியா ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அனுமதிக்க முடியாது எனவும் முகத்தில் அறைந்தார் போலச் சொல்லி விட்டது அமெரிக்கா.
ட்ரம்பு கோபம்
நாங்கள் விதித்த பொருளாதாரத் தடை காரணமாக ஈரான் தற்போது துடித்துக் கொண்டிருக்கிறது என மிகப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க உள் துறைச் செயலர் மைக் பாம்பியோ. அதோடு என்னப்பா ஈரான் வலிக்குதா..? நாங்க சொல்றத கேக்குறீங்களா..? என்கிற ரீதியில் ஒரு ஒன்வே பேச்சு வார்த்தை வேறு நடத்தப் போகிறார்களாம்.
காத்திருக்கும் அமெரிக்கா
பேச்சு வார்த்தை நடத்த பல முறை ஈரானுக்கு சிக்னலும் கொடுத்திருக்கிறார்களாம். "தடை விதிக்கப்பட்ட சிறு பிள்ளை ஈரான் எம்மிடம் வரட்டும்" என அமெரிக்கா கால் நீட்டிக் காத்துக் கொண்டிருக்கிறதாம். அதோடு இந்த ஈரான் பொருளாதாரத் தடை குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமும் அமெரிக்கா பேசி வருகிறார்களாம்.
இந்தியாவின் ராஜ தந்திரம்
அமெரிக்க நாட்டுக்கான இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்கலா "இந்தியா கடந்த மே 02, 2019-க்குப் பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில்லை. அமெரிக்கா எப்போது ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு விலக்கு அளிக்க வில்லையோ அப்போதில் இருந்தே இந்தியா ஈரானுடனான வர்த்தக உறவை முறித்துக் கொண்டது" என பதில் கொடுத்திருக்கிறார். ஆனாலும் அமெரிக்காவுக்குச் சந்தேகம் குறைவில்லை.
வேண்டும் 0
அமெரிக்க முக்கியச் செயலர்களில் ஒருவரான மார்கன் ஆர்டாகஸ் (Morgan Ortagus) "அமெரிக்கா கடந்த ஏப்ரல் 22, 2019-ல் இருந்து தன் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறது. மே 02, 2019-ல் இருந்து ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி பூஜ்ஜியத்துக்கு இறங்க வேண்டும் என்கிற இலக்கில் எந்த மாறுபாடும் இல்லை எனச் சொல்லி இருக்கிறார். அப்போதும் இந்தியா நல்ல பிள்ளையாக "நாங்களா ச்சே ச்சே, நீங்க சொன்னதுக்கு அப்புறம் ஈரான் கிட்ட பேசுறதே இல்ல. கடந்த ஏப்ரல் மாசத்துலேயே ஈரான் கிட்ட இருந்து நாங்க வெறும் 1 மில்லியன் டன் கச்சா எண்ணெய் தான் வாங்குணோம்" என்கிற ரீதியில் பதில் கொடுத்திருக்கிறார்கள்.
நல்ல பிள்ளை
ஏற்கனவே ஈரானிடம் இருந்து மாதம் 2.5 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொண்டிருந்த இடத்தில் ஏப்ரல் 2019-ல் வெறும் 1 மில்லியன் டன் மட்டுமே இறக்குமதி செய்கிறோம். அதோடு அமெரிக்காவின் இந்த பொருளாதாரத் தடைக்கு இருக்கும் முக்கியத்துவத்தையும் நாங்கள் அறிவோம். அதற்கு இந்தியா ஒரு விலை கொடுத்திருப்பதையும் நாங்கள் அறிவோம். இப்போது ஈரானுக்கு பதிலாக மற்றொரு கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் நாட்டையும் கண்டு பிடிக்க முயன்று கொண்டிருக்கிறோம் எனவும் பேசி, அமெரிக்காவுக்கு மேலும் நல்ல பிள்ளை பிம்பத்தையே கொடுத்திருக்கிறது இந்தியா.
அதுக்கும் மேல
மேலே சொன்னவைகளை எல்லாம் விட "இந்தியாவுக்காக அமெரிக்கா, கச்சா எண்ணெய் விலையை நிலையாக வைத்திருக்க நடத்தும் பேச்சு வார்த்தைகளையும் இந்தியா கவனித்துக் கொண்டு தான் இருக்கிறது. அமெரிக்காவுக்கு எவ்வளவு பெரிய மனசு" என்கிற ரீதியிலும் இந்தியா சர்வதேச அரங்குகளில் பேசிக் கொண்டிருக்கிறது. மற்றொரு புறம் இந்த கச்சா எண்ணெய் விலை அடுத்த சில மாதங்களுக்கு நிலையாக இருந்தாலே பெரிய விஷயம் என்பதையும் கணித்து உஷாராக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது இந்தியா.
இந்திய கச்சா எண்ணெய்
இந்தியா, தன் மொத்த கச்சா எண்ணெய்த் தேவையில் 80 சதவிகிதத்துக்கு மேல் இறக்குமதி தான் செய்கிறது. அதில் சவுதி அரேபியாவும், ஈராக்கும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துக் கொள்கின்றன. அதற்கு அடுத்து, இந்தியாவுக்கு, அதிக எண்ணெய் சப்ளை செய்யும் நாடு என்றால் அது ஈரான் தான். அதனால் தான் ஈரானிடம் இருந்து முழுமையாக கச்சா எண்ணெய் சப்ளையை நிறுத்திக் கொள்ள முடியாமல் தவிக்கிறது இந்தியா. அதோடு ஈரான் உடனான ராஜ தந்திர அரசியல் உறவுகளும் ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள் அதிகாரிகள்.
மோடி பேச்சு
கடந்த 2014-ல் பதவிக்கு வந்த மோடி, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதித் தேவையை பெரிய அளவில் குறைப்பேன் எனச் சொல்லி இருந்தார். ஆனால் செய்ய முடியவில்லை. அதோடு உள் நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் 2014 - 15 நிதி ஆண்டில் 37.5 மில்லியன் டன் உற்பத்தியான கச்சா எண்ணெய், 2017 - 18-ல் 35.7 மில்லியன் டன் மட்டுமே உற்பத்தியானது.
அதிகரித்த ஏற்றுமதி
இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்ததற்கு நேர் மாறாக, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்திருக்கிறது. கடந்த 2015 - 16-ம் ஆண்டில் 202.85 மில்லியன் டன்னாக இருந்த கச்சா எண்ணெய் இறக்குமதி 2017 - 18-ல் 217.10 மில்லியன் டன்னாக அதிகரித்திருக்கிறது. இதை நாம் சொல்லவில்லை. மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகமே தன் அறிக்கையில் சொல்கிறது.
இந்தியா நிலைப்பாடு
தெற்குப் பக்கம் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க தான் போறேன் என்ன இப்ப..? என ஈரானிய வங்கிகளுக்கு மும்பையில் கிளை வைத்துக் கொள்ள அனுமதி எல்லாம் கொடுத்து விட்டு...
மேற்குப் பக்கம் அமெரிக்காவுக்கு தகுந்தாற் போல "என்னங்க எங்கள போய் சந்தேகப்படுறீங்க" என்கிற ரீதியில் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது இந்தியா.
பிழைத்தால் சரி
தற்போதைக்கு இது கேட்கவும், படிக்கவும் ராஜ தந்திரம் போலத் தோன்றினாலும் முடிவில் அமெரிக்காவிடம் நேருக்கு நேர் மோதாமல், இந்தியப் பொருளாதாரம் டேமேஜ் ஆகாமல் சாதித்துக் கொள்வது தான் சாமர்த்தியமாக இருக்கும். என்ன செய்கிறோம் என தெளிவாக தெரிந்து, திட்டமிட்டு செய்து வெற்றி பெற்றால் சரி தான். மோடிஜி ரெண்டாவது முறையா பிரதமர் ஆகுற வேகத்துல எதையும் தப்பா செஞ்சி மாட்டிக்காதீங்க. ஏற்கனவே இந்தியப் பொருளாதாரச் சங்கம் அபராதத்துல தான் போய்க்கிட்டு இருக்கு.