டெல்லி: புதிய சாதனை படைத்திருக்கிறார் நிர்மலா சீதாராமன் (Nirmala sitharaman). இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் இந்திரா காந்தியாக இருந்தாலும், அவர் அரசு பொறுப்பேர்கும் போதே அந்தப் பதவியை அலங்கரிக்கவில்லை.
ஆனால் நிர்மலா சீதாராமன் இந்த 17-வது மக்களவைத் தேர்தல் முடிந்து அரசு பொறுப்பேற்கும் போதே முழுமையாக, முறையாக நிதி அமைச்சர் மற்றும் கார்ப்பரெட் விவகாரத் துறை அமைச்சராக பதவி வகித்திருக்கிறார். அப்படிப் பார்த்தால் முறையாக அரசு பதவி ஏற்கும் போதே நிதி அமைச்சராக பதவிக்கு வந்த முதல் பெண் நிர்மலா சீதாராமன் தான்.
ஆர் கே சண்முகம், டி டி கிருஷ்ணமாச்சாரி, கோவை சிதம்பரம் சுப்ரமணியம், ஆர் வெங்கட்ராமன், ப சிதம்பரம் என தமிழகம் இதுவரை ஐந்து நிதி அமைச்சர்களைக் கொடுத்திருக்கிறது இந்தியாவுக்கு. இப்போது நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக பொறுப்பேற்று இருப்பதால், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஆறாவது நிதி அமைச்சர் என்கிற பெருமையையும் தட்டிச் சென்று இருக்கிறார்.
கடந்த மோடி ஆட்சிக் காலத்திலேயே நிர்மலா சீதாராமன் கார்ப்பரெட் விவகாரத் துறையைக் கையில் வைத்திருந்தார். அதோடு வணிகம் மற்றும் தொழிற்சாலைத் துறையையும் நிர்வகித்து வந்தார். அதன் பின் தான் சில அமைச்சகங்கள் மாறி கடைசியாக பாதுகாப்புத் துறையில் தன் முதல் அமைச்சர் பதவி காலத்தை முடித்துக் கொண்டார்.
இவர் படித்தது பொருளாதாரம், ஆகையால் கொஞ்சம் பொருளாதாரம் சார்ந்த பிரச்னைகளை சிறப்பாகக் கையாள்வார் என பாஜக தலைமை எதிர்பார்த்து, அவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்களாம்.
ஏற்கனவே நிதி அமைச்சகத்தை, பட்டயக் கணக்காளர் (Chartered Accountant) மற்றும் வழக்கறிஞரான பியுஷ் கோயலிடம் கொடுக்கப்படலாம் என்கிற யூகங்களை எல்லாம் தாண்டி, நிர்மலா சீதாராமன் கைக்கு நிதி அமைச்சகம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நிர்மலா சீதாராமனுக்கு பணி அனுபவம் என்று பார்த்தால் இங்கிலாந்தின் Agricultural Engineers Association-ல் பொருளாதார உதவியாளராகப் பணியாற்றி இருக்கிறார். அதன் பின் சில பல சர்வதேச நிறுவனங்களில் பொருளாதாரம் சார்ந்து பணியாற்றி இருக்கிறார்.அதிக விவரங்கள் இணையத்தில் இல்லை.
நம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி போல ராஜ்ய சபா உறுப்பினராகவே இந்த நிதி அமைச்சர் பதவியில் நிர்மலா சீதாராமன் அமர்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.