உலகில் அதிவேகமாக வளர்ச்சி காணும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் பட்டியலில் சீனாவிடம் தோற்றுவிட்டது இந்தியா.
அதிகாரபூர்வமாக இந்தியாவின் 2018 - 19 நிதி ஆண்டின் மார்ச் 2019 காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.8 சதவிகிதமாக மட்டுமே இருக்கிறது.
ஆனால் அதே 2018 - 19 நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டு மார்ச் 2019-ல் சீனாவின் ஜிடிபி வளர்ச்சி 6.4 சதவிகிதமாக இருக்கிறது.
சர்வதேச அங்கீகாரம்
மோடி பதவிக்கு வந்த உடனேயே, இந்தியாவுக்கு இத்தனை நாள் கிடைத்து வந்த ஒரு சர்வதேச அங்கீகாரம் இப்போது இல்லாமல் போய் இருக்கிறது. கடந்த 17 காலாண்டுகளாக (சுமார் நான்கு ஆண்டுகளாக) உலகிலேயே வேகமாக பொருளாதார வளர்ச்சி காணும் நாடாக காலரை தூக்கிவிட்டுக் கொண்டு திரிந்து கொண்டிருந்தது இந்தியா.
இரண்டாவது முறை
ஆனால் இப்போது மோடி இரண்டாவது முறை பதவி ஏற்கும் போதே, இந்தியா, உலகில் வேகமாக வளரும் பொருளாதாரம் என்கிற பட்டத்தை, சீனாவிடம் பறி கொடுத்திருக்கிறது. பிரதமர் மோடியும், புதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இந்திய பொருளாதார ஜிடிபி வளர்ச்சிப் பிரச்னையை அவ்வளவு எளிதில் ஒதுக்க முடியாத படி சர்வதேச அளவில் இந்த சரிவு பேசப்பட்டு வருகிறது.
இதுநாள் வரை
கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து, இன்று வரை, இந்தியப் பொருளாதாரம், உள்நாட்டு நுகர்வினால் மேலே பறந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது உள்நாட்டில் போதுமான நுகர்வு இல்லை. உள்நாட்டில் போதுமான நுகர்வு இல்லை என்பதை இருசக்கர வாகன விற்பனை மற்றும் கார் விற்பனை சரிவு கடந்த சில மாதங்களாக காட்டிக் கொண்டே இருக்கிறது.
ஏன்..? ஏன்..?
ஏன் நுகர்வு இல்லை, பொருட்கள் எல்லாம் விற்கப்படாமல் அப்படியே இருக்கிறது எனப் பார்த்தல், மக்கள் வாங்கத் தயாராக இல்லை.
ஏன் மக்கள் வாங்கவில்லை எனப் பார்த்தால், மக்களிடம் வாங்க போதுமான பணம் இல்லை.
ஏன் பணம் இல்லை எனப் பார்த்தால், பணமதிப்பிழப்பும், சரக்கு மற்றும் சேவை வரியும் பலரின் வேலையை காலி செய்துவிட்டது.
வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு அதிகமாக இருப்பதை அலட்சியமாக தேர்தலில் வெற்றி பெற்ற பின் ஒப்புக் கொண்டிருக்கிறது பாஜக.
முதலீடு சரிவு
கடந்த டிசம்பர் 2018 காலாண்டில் வெளிநாடுகளில் இருந்து வந்த முதலீடுகளின் அளவு அதற்கு முந்தையை செப்டம்பர் 2018 காலாண்டை விட 10.6 சதவிகிதம் அதிகரித்திருந்தது. ஆனால் இப்போது மார்ச் 2019-ல் வந்த மொத்த முதலீடு டிசம்பர் 2018 காலாண்டில் பெற்ற முதலீட்டை விட 3.6 சதவிகித மட்டுமே அதிகரித்திருக்கிறது.
ஒப்புக் கொள்ளும் அரசு
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறித்துப் பேசிய நிதி அமைச்சக செயலர் சுபாஷ் சந்திர கார்க் "2019 - 20 நிதி ஆண்டில் ஜூன் 2019 காலாண்டு கூட கொஞ்சம் மந்தமாகத் தான் இருக்கும். ஆனால் அதற்கு அடுத்த காலாண்டில் இருந்து இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும். கொஞ்சம் பொருத்திருங்கள்" எனச் சொல்லி இருக்கிறார். ஆனால் சீனாவை விட இந்தியாவின் ஜிடிபி நல்ல வளர்ச்சியைக் காணுமா..? மீண்டம் உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடுகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்குமா..? எனக் கேட்டால் பதில் இல்லை.
வேலையில்லா திண்டாட்டம்
இருக்கும் பிரச்னை போதாதென்று வேலையில்லா திண்டாட்டம் வேறு. நேற்று (மே 31, 2019) புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் (Ministry of Statistics and Program Implementation) வெளியிட்டிருக்கும் ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரையான வேலைவாய்ப்பு தொடர்பான அறிக்கையில், இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் 6.1 சதவிகிதமாக அதிகரித்திருப்பதை ஒப்புக் கொண்டார்கள் பாஜகவினர்கள்.
அதிக அடி சம்பள ஏழைகள்
கிராம புறங்களில் வேலையில்லா திண்டாட்டம் 5.3 சதவிகிதமாகவும், நகர் புறங்களில் வேலையில்லா திண்டாட்டம் 7.8 சதவிகிதமாகவும் இருப்பதையும் பெருமையாகச் சொல்லி இருக்கிறார்கள் பாஜக தலைமையிலான புதிய அரசு. கிராமங்களில் இருப்பதை வைத்து எதையாவது வாழ்ந்துவிடலாம். ஆனால் நகர் புறங்களில் மாத சம்பளத்தை நம்பி இருப்பவர்கள் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் கடந்த ஆண்டு வேலை வாய்ப்பு தரவுகளுடன் இந்த ஆண்டை ஒப்பிடக் கூடாது என சண்டை வேறு போடுகிறார்கள் பாஜகவினர்கள்.
பிரச்னை இருக்கே
National Institute of Public Finance and Policy என்கிற புகழ் பெற்ற டெல்லி பொருளாதார பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கும் பேராசிரியர் ஒருவர் "இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பதை இது தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறதே. பலரும் வேலை இழந்து தங்கள் அன்றாடத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்களே..? பிறகு என்ன" என காட்டமாகச் சொல்கிறார். ஆனால் நரேந்திர மோடி மட்டும் இன்னும் வேறு ஏதோ வேலையில் பிசியாக இருக்கிறார்.