டெல்லி: நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற உடன் தனது முதல் வேலையாக விவசாயிகளுக்கு வழங்கும் மானிய உதவித் தொகையை நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கும் வகையில் பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதித் திட்டத்தை விரிவு படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்டதுதான்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலமாக இதுவரையிலும் 3.11 கோடி விவசாயிகளுக்கு முதல் தவணையாக சுமார் ரூ.2000 ரூபாயும், அடுத்ததாக 2.75 கோடி விவசாயிகளுக்கு இரண்டு தவணைகளும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதோடு கூடுதலாக விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் மத்திய அரசுக்கு கூடுதலாக சுமார் 10774 ரூபாய் செலவாகும் என்று விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்
திருவிழா முடிந்தது
கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த 17ஆவது லோக்சபா தேர்தல் திருவிழா முடிந்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விட்டது. இதனையடுத்து, பிரதமராக நரேந்திர மோடி தலைமையில் 57 பேர் கொண்ட மத்திய அமைச்சரவை கடந்த 30ஆம் பதவியேற்றுக் கொண்டது.
இலாக்க ஒதுக்கீடு
அனைத்து அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட பின்னர், முதல் அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ஏற்கனவே அளித்து வந்த கல்வி உதவித் தொகையை உயர்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்திலுள்ள ஆண் குழந்தைகளுக்கு ரூ.2,500 பெண் குழந்தைகளுக்கு ரூ.3000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
ராணுவ வீர்களின் குடும்பத்திற்கு சல்யூட்
முன்னதாக, நக்சலைட் தாக்குதலில் உயிர் தியாகம் செய்யும் மாநில காவல் துறையினரின் குடும்பத்திலுள்ள குழந்தைகளுக்கும் உதவித் தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது இதையடுத்து அவர்களுடைய குழந்தைகளின் கல்விக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் மோடி தனது முதல் கையெழுத்திட்டார்,
பிஎம்-கிஷான் உதவித் திட்டம்
கடந்த பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதித் திட்டத்தின் (PM-KISAN) கீழ், 2 ஏக்கர் வரை விவசாய நிலம் வைத்துள்ள சுமார் 12 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இதுவரையிலும் சுமார் 3.11 கோடி விவசாயிகளுக்கு முதல் தவணையாக 2000 ரூபாயும், பின்னர் 2.75 கோடி விவசாயிகளுக்கு 2 தவணைகளும் வழங்கப்பட்டுவிட்டன.
87ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும்
தற்போது இந்த திட்டத்தை விரிவு படுத்தி நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிதி உதவி வழங்குவதற்கு கேபினட் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 14.5 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும் இதற்காக மத்திய அரசுக்கு கூடுதலாக சுமார் 87 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம்
அதோடு, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான திட்டத்தையும், விவசாயிகளுக்கு சுமார் 1 லட்சம் ரூபாய் வரையிலும் வட்டியில்லாக் கடன் வழங்கும் திட்டத்தையும் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்தார். விவசாயிகளின் ஓய்வூதியத் திட்டத்திற்காக சுமார் 10774 கோடி ரூபாய் செலவாகும் என்றும், இத்திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கூலித் தொழிலாளிகள் ஓய்வூதியத் திட்டம்
மற்றொரு புதிய திட்டமாக, சுயதொழில் செய்பவர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான திட்டம் இக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட அனைவரும் உறுப்பினராக சேரலாம். இதற்கு இவர்கள் தினசரி 2 ரூபாய் செலுத்தினால் போதுமானது. 60 வயது முடிந்தபின்னர், மாதந்தோறும் 3000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். இதனால் நாடு முழுவதும் சுமார் 3 கோடி பேர் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கால்நடைகள் பாதுகாப்பு திட்டம்
கால்நடைகளை பாதுகாக்கும் வகையில், அவற்றுக்கு சுமார் 13343 கோடி ரூபாய் செலவில் தடுப்பூசி போடுவதற்கான திட்டதிற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தற்போது நடைமுறையில் உள்ள இத்திட்டத்திற்கு மத்திய அரசும் மாநில அரசுகளும் 60:40 என்ற விகிதத்தில் பங்களித்து வருகின்றன. இனிமேல் மத்திய அரசே முழுத் தொகையையும் அளிக்க முடிவெடுத்துள்ளது என்றும், இன்னும் 5 ஆண்டுகளில் இத்திட்டம் மேலும் விரிவு படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர்பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.