டெல்லி: 17-வது மக்களவைத் தேர்தலில் அதி முக்கியமாக பேசப்பட்டிருக்க வேண்டிய, ஆனால் பேசப்படாத விஷயம்... வேலையில்லா திண்டாட்டம் எனப்படுகிற unemployment. இப்போது டிசம்பர் 2018 காலாண்டுக்கான வேலையில்லா திண்டாட்டம் தொடர்பான தரவுகளை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை வெளியிட்டிருக்கிறது.
அந்தத் தரவுகள் படி கடந்த ஒரு வருட காலமாக வேலையில்லாத் திண்டாட்டம், இந்தியாவில் மெல்ல அதிகரித்து வருவதை வெளிப்படையாக அரசே சொல்கிறது. ஒப்புக் கொள்கிறது. இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒவ்வொரு மாதமும் 10 லட்சம் இந்திய இளைஞர்கள், புதிதாக வேலை தேடி கம்பெனிக்கு கம்பெனி, கடைக்கு கடை, ஆலைக்கு ஆலை ஏறி இறங்குகிறார்களாம்.
அப்படி ஏறி இறங்கும் இளம் வயது (15 - 29 வயது) ஆண்கள் மற்றும் பெண்கள், பாலின வித்தியாசம் இன்றி நிராகரிக்கப்படுகிறார்கள். வேலைக்காக தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை கடந்த 3 காலாண்டுகளாக 22.9 சதவிகிதத்தில் இருந்து மெல்ல 23.7 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது.
தற்போது டிசம்பர் 2018 நிலவரப்படி, டிசம்பர் 2018 காலத்தில் வாரத்தின் ஏழு நாட்களில் ஒரு மணி நேரம் கூட வேலை கிடைக்காமல் தவித்தவர்கள் கணக்குப்படி 100-க்கு 22 ஆண்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இதுவே பெண்களை எடுத்துக் கொண்டால் 100-க்கு 29 பேருக்கு வேலை கிடைக்கவில்லை.
கடந்த 2011 - 12-ல் ஆண்களை எடுத்துக் கொண்டால் 100 பேரில் 8 பேருக்கு மட்டுமே வேலை இல்லாமல் இருந்தது. அதுவே இப்போது 2017 - 18 கணக்குப்படி 100 ஆண்களில் 22 பேருக்கு வேலை இல்லை. அதே போல 2011 - 12-ல் 100-க்கு 13 பெண்களுக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனால் இன்று 2017 - 18-ல் 100-க்கு 29 பெண்களுக்கு வேலை இல்லாமல் தவிக்கிறார்கள்.
இதற்கு மேலும் ஒரு அவமானகரமான விஷயம் என்ன தெரியுமா..? இந்தியாவில் உழைக்கத் தயாராக இருப்பவர்கள் (Labour Force) எண்ணிக்கையே 36 சதவிகிதம் குறைந்துவிட்டதாம். இதில் பெண்கள் தான் அதிகம் வேலை பார்க்க வேண்டும் என்கிற விஷயத்தில் இருந்து விலகிச் செல்கிறார்களாம்.
ஆக முதல் விஷயம் ஏற்கனவே 100 பேர் (ஆண்கள் + பெண்கள்) இந்தியாவில் உழைக்கத் தயாராக இருந்தார்கள். அதில் 36 பேர் வேலை கிடைக்காமல், வேலை செய்ய விருப்பமில்லாமல் விலகிவிட்டார்கள்.
ஆக இந்த 64 பேரில் 50 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்திருக்கிறது. மீதமுள்ள 14 பேருக்கு வேலை இன்னும்... வேலை இல்லை. ஏற்கனவே லேபர் ஃபோர்ஸில் இருந்து வெளியேறியவர்கள் நீங்கலாகவே இந்தியாவில் 100 பேருக்கு 23 பேருக்கு வேலை இல்லை என்கிறோம். இதுவே அந்த 36 சதவிகிதத்தினர் வேலை வேண்டும் என இன்னமும் காத்திருந்தால் இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டம் 50 சதவிகிதமாக இருந்திருக்கும். மோடிஜி கொஞ்சம் பாத்து பண்ணுங்க.