மின் உற்பத்தி திட்டங்களுக்கான காப்பீடு கட்டணம் உயர்வு, மின் உற்பத்தி நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு.
மின் உற்பத்தி திட்டங்களுக்கான காப்பீடு கட்டணம் மூன்று மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை மின் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக எதிர்த்துள்ளன. மின் உற்பத்தி நிறுவனங்கள் ஏற்கெனவே பெரும் நஷ்டத்தைச் சந்தித்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காப்பீடு கட்டணமும் அதிகரிக்கப்பட்டிருப்பது மின் உற்பத்தி நிறுவனங்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இழப்பில் இருக்கும் நிறுவனங்களை நஷ்டத்திலிருந்து காப்பாற்றும் வழிகளை ஆராயாமல் காப்பீடுகளின் செலவையும் மேலும் அதிகரித்தால் எப்படி என இந்த நிறுவனங்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
நாட்டின் மிகப்பெரிய ரீ-இன்ஷூரன்ஸ் நிறுவனமான ஜென்ரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் கடந்த பிப்ரவரியில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியது. அந்த சுற்றறிக்கையில் எந்தெந்த துறைகளிலெல்லாம் அதிக அளவில் இழப்பீடு கேட்கப்படுகிறதோ அந்தத் துறைகளுக்கு பிரீமியத் தொகையை அதிகபட்சமாக நிர்ணயிக்க வேண்டும் என கூறியிருந்தது.
இதையடுத்து ரப்பர், பிளாஸ்டிக், டெக்ஸ்டைல், கெமிக்கல், உருக்கு ஆலைகள் மற்றும் மின் உற்பத்தி ஆகிய துறைகள் அதிக அளவு இழப்பீடு கேட்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த துறைகளுக்கு அதிக பிரீமியம் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மின் உற்பத்தி நிலையங்களுக்கான காப்பீடு கட்டணம் 200 % உயர்த்தப்பட்டுள்ளது. காப்பீடுக்கான பிரீமியத்தை மூன்று மடங்கு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ளாத நிறுவனங்கள் இதை எதிர்த்து மின் உற்பத்தி நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் மின் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில் 'ஆயிரம் மெகா வாட் அளவுக்கு அதிகமாக திறன் படைத்த மின் உற்பத்தி நிலையங்களுக்கான காப்பீடு திட்டத்துக்கான பிரீமியம் 200% உயர்த்தப்பட்டுள்ளது. 2018-19-ல் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான காப்பீடுக்கு பிரீமியம் ரூ.2.60 கோடியாக இருந்தது. அதுவே இப்போது ரூ.7.77 கோடியாக உயர்த்தப் பட்டுள்ளது.
இதில் தீ விபத்து, இயந்திர பழுது ஆகியவற்றினால் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட இயற்கையாக நடக்கும் இழப்புகளுக்குக் கூட அதிகபட்ச பிரீமியம் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், இதுபோன்ற இழப்புகள் மிக அரிதாகவே நடக்கின்றன. இவற்றுக்கான பிரீமியத்தை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை 30% - 40% என்ற அளவில் உயர்த்தினால் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இப்படி ஒரே அடியாக 200% உயர்த் துவது ஏற்கெனவே நிதி நெருக்கடியில் இருக்கும் மின்துறைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்” என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அதோடு இழப்பீட்டுத் தொகையில் செய்யப்படும் கழிவுகளிலும் கடுமையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
பொருள் சேதத்துக்கான கழிவு 150 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது ரூ.50 லட்சத்திலிருந்து 1.25 கோடியாக உயர்ந்துள்ளது. புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் தொழில் முடக்கத்துக்கான கழிவு ரூ.42 கோடியிலிருந்து ரூ.100 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பிரீமியம் அதிகரிப்பு ஒன்றிரண்டு மின் உற்பத்தி நிலையங்களை மட்டுமே நம்பியுள்ள நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் மின் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.