வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியேறவும், வேலை பார்ப்பதற்கும், உயர் கல்வி கற்பதற்கும் செல்பவர்களும் (Immigrant), சுற்றுலா செல்பவர்களும் (Non Immigrant) விசா (Visa) வேண்டி விண்ணப்பிக்கும் போது கண்டிப்பாக தங்களின் சமூக வலைதள கணக்குகளான, ஃபேஸ்புக், ட்விட்டர், மின்னஞ்சல் மற்றும் அனைத்து விதமான கணக்குகளையும் விசா விண்ணப்பத்துடன் சமர்பிக்க வேண்டியது கட்டாயமாகும். அதோடு கடந்த ஐந்து ஆண்டுகளில் சமூக வலைதளங்களில் மேற்கொண்ட அனைத்துவிதமான நடவடிக்கைகளைப் பற்றிய விவரங்களையும் ஒளிவு மறைவில்லாமல் விசா விண்ணப்பத்துடன் சமர்பிக்கவேண்டியது கட்டாயம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அதோடு நில்லாமல் விசா கேட்பவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் சமூக வலைதளங்களில் பதிவு செய்த அனைத்து பதிவுகள் மற்றும் மின்னஞ்சல் என ஒட்டுமொத்த தகவல்களையும் அமெரிக்க அரசாங்கம் கேட்டுள்ளது. சில குறிப்பிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி விளக்கமளித்த அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள், எங்கள் நாட்டவர்களின் தனித் தன்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காகவும், கண்காணிப்புகளை தீவிரப்படுத்தவும் இந்த விவரங்களை நாங்கள் கேட்டுள்ளோம். அதோடு அமெரிக்காவிற்கு சட்டபூர்வமாக வருபவர்களை அங்கீகரிக்கவும் இது உதவும் என்றும் குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்தனர்,
விட்டுவிடுங்கள் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்.. இந்த பேர கேட்டாலே ச்சும்மா அதிருதில்லே. இன்றைக்கு உலகின் அநேக நாடுகளுக்கும் எட்டிக்காயாக கசக்கும் பெயர் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு அனைவரையும் போட்டு வதைத்துக் கொண்டிருக்கிறார். முடியலடா சாமீ, என்று அனைவரையும் கதற வைத்துக் கொண்டுள்ளார்.
நானே வருவேன்
அமெரிக்காவை காப்பாற்ற வந்த ரட்சகனாகவே ட்ரம்ப் தன்னை நினைத்துக் கொண்டு நம்மூர் அரசியல்வாதிகளைப் போல் தினந்தோறும் புதிய புதிய அறிவிப்புகளையும், உத்தரவுகளைப் போட்டு அண்டை நாடுகள் முதல் அனைத்து நாடுகளையும் கடுப்பேற்றிக் கொண்டிருக்கிறார். இவருடைய பதவிக்காலம் எப்போது முடியுமோ என்று அனைவரும் ஏக்கப்பெருமூச்சு விடுகின்றனர். ஆனால் அவரோ அடுத்த அதிபர் தேர்தலிலும் நானே போட்டியிடுவேன் என்று இப்போதே துண்டைப் போட்டுவிட்டார்.
விரட்டியடிப்பேன்
சரி, நாம் விசயத்திற்குள் நுழையலாம். கடந்த 2016ஆம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ட்ரம்ப், தன்னுடைய நோக்கமே, தான் அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்டால், அமெரிக்க மக்களுக்கு உரிய பாதுகாப்பும், அமெரிக்க இளைஞர்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பேன் என்றும் அமெரிக்காவில் வேலை பார்க்கும் பிற நாட்டவர்களை விரட்டியடிப்பேன் என்று மார் தட்டினார்.
எச்-1பி விசா கெடுபிடி
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக வந்த உடனே, தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார். அமெரிக்காவில் நிலவிய வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முக்கிய காரணம், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்களே. அவர்கள் தான் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை தட்டிப் பறிக்கின்றனர் என்று சொல்லி எச்-1பி விசா விதிமுறைகளில் அதிக கெடுபிடிகள் காட்ட ஆரம்பித்தார்.
ஆண்டுக்கு 95000 டாலர் சம்பளம்
எச்-1பி விசா வேண்டுமானால், குறைந்தபட்ச சம்பளம் ஆண்டுக்கு 95000 டாலர்களாக இருக்க வேண்டும் என்று முதல் முட்டுக்கட்டையை போட்டார். அடுத்ததாக எச்-1பி விசாவில் அமெரிக்கா சென்று வேலை பார்ப்பவர்கள், வேறு வேலைக்கு நினைத்த நேரத்தில் மாற முடியாது. எந்த வேலையைக் குறிப்பிட்டு அமெரிக்கா சென்றாரோ அதே வேலை, வேறு நிறுவனத்தில் இருந்தால் மட்டுமே மாற முடியும். இல்லாவிட்டால் முடியாது என்று அடுத்த குண்டைப் போட்டார்.
மனைவிக்கு தடா
அடுத்ததாக, எச்-1பி விசாவில் அமெரிக்கா செல்பவர்கள் தங்களுடன் தங்களின் மனைவியையும் அழைத்துச் செல்வதற்காக எச்-4 விசாவை பயன்படுத்தி வருகின்றனர். ட்ரம்ப் தற்போது இதிலும் முட்டுக்கட்டை போட ஆரம்பித்து விட்டார். எச்-4 விசாவில் அமெரிக்கா செல்பவர்கள் அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கான சிறப்பு விதிமுறையை நீக்க முடிவு செய்துவிட்டார். இதற்கான தீர்மானத்தை அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்துவிட்டார்.
ஃபேஸ்புக் ட்விட்டர் கணக்குகள்
இந்நிலையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இனிமேல் அமெரிக்காவில் குடியேறவும், வேலை பார்ப்பதற்கும், உயர் கல்வி கற்பதற்கும் செல்பவர்களும் (Immigrant), சுற்றுலா செல்பவர்களும் (Non Immigrant) விசா வேண்டி விண்ணப்பிக்கும் போது கண்டிப்பாக தங்களின் சமூக வலைதள கணக்குகளான, ஃபேஸ்புக், ட்விட்டர், மின்னஞ்சல் மற்றும் அனைத்து விதமான கணக்குகளையும் விசா விண்ணப்பத்துடன் சமர்பிக்க வேண்டியது கட்டாயமாகும். அதோடு கடந்த ஐந்து ஆண்டுகளில் சமூக வலைதளங்களில் மேற்கொண்ட அனைத்துவிதமான நடவடிக்கைகளைப் பற்றிய விவரங்களையும் ஒளிவு மறைவில்லாமல் விசா விண்ணப்பத்துடன் சமர்பிக்கவேண்டியது கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளார்.
லைக், ஷேர் சிக்கல்
ட்ரம்ப் போட்ட உத்தரவு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுவிட்டால், அதன்பின்னர் அமெரிக்கா செல்வதற்கான விசா நடைமுறைகள் கடுமையாக்கப்படும். மேலும், சமக வலைதளங்களில் ஏதாவது மோசமான பதிவுகளை குறிப்பிட்டிருந்தாலோ, விரும்பியிருந்தாலோ (Like) அல்லது மற்றவர்களுக்கு பகிர்ந்திருந்தாலோ (Share), விசா கேட்டவர்களிடம் மிகத் தீவிரமான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. இதற்கான நடைமுறைகள் அனைத்தும் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதமே தொடங்கப்பட்டுவிட்டது.
பாதுகாப்பு முக்கியம்
இது பற்றி விளக்கமளித்த அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள், எங்கள் நாட்டவர்களின் தனித் தன்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காகவும், கண்காணிப்புகளை தீவிரப்படுத்தவும் இந்த விவரங்களை நாங்கள் கேட்டுள்ளோம். அதோடு அமெரிக்காவிற்கு சட்டபூர்வமாக வருபவர்களை அங்கீகரிக்கவும் இது உதவும் என்றும் குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்தனர்,
1.40 கோடி பேர் பாதிப்பு
கடந்த ஆண்டே இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஆண்டு தோறும் அமெரிக்காவில் குடியேறுவது, வேலை பார்ப்பது, உயர் கல்வி கற்றல் போன்றவற்றுக்கு உலகம் முழுவதும் இருந்து விண்ணப்பிக்கும் சுமார் 7.10 லட்சம் விண்ணப்பதாரர்களும், சுற்றுலா, தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக தற்காலிக விசா கேட்டு விண்ணப்பிக்கும் சுமார் 1.40 கோடி விண்ணப்பதாரர்களும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று தெரிகிறது. முக்கிய விருந்தினர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக குடியேற்ற அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சந்தேக சமூக வலைதள கணக்குகள்
முன்னர் தீவிரவாதக் குழுக்களோடு தொடர்புடையதாக சந்தேகப்படுபவர்களின் விசா விண்ணப்பதாரர்களின் சமூக வலைதளக் கணக்குகளைப் பற்றி மடடுமே அமெரிக்க விசா குடியேற்ற அதிகாரிகள் கேட்டு வந்தனர். தற்போது அனைத்து விண்ணப்பதாரர்களிடம் இருந்தும் சமூக வலைதள கணக்கு பற்றிய விவரங்களை கேட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எங்களுக்கு தெரியும்
அதே சமயத்தில், அமெரிக்காவின் சிவில் உரிமைக் குழுவைச் (Civil rights group) சேர்ந்த சிவில் லிபர்டீஸ் யூனியன் (American Civil Liberties Union) இது பற்றி கூறியபோது, சமூக வலைதள கணக்குகளை ஆராய்ந்து பார்ப்பது நியாயமானது மற்றும் உண்மையானது என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. அதோடு மக்கள் சமூக வலைதளங்களால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து தங்களை காத்துக்கொள்ளவும் தெரியும் என்று தெரிவித்தது.