சியோல்: இதுவரை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் சுமார் 22 விமானங்களை வாங்கி இருக்கிறோம். சுமார் 1,000 ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு வேலை கொடுத்திருக்கிறோம். இனியும் சுமார் 2,000 ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு வேலை கொடுக்க இருக்கிறோம் என அசால்ட் செய்திருக்கிறார் ஸ்பைஸ் ஜெட் முதன்மைச் செயல் அதிகாரி (CEO) அஜய் சிங்.
சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஸ்பைஸ் ஜெட் சிஇஓ அஜய் சிங் "இந்தியாவில் 100 விமானங்களைக் கொண்ட நிறுவனங்களில் ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், இண்டிகோவுக்குப் பிறகு நாங்கள் (ஸ்பைஸ் ஜெட்) இடம் பிடித்திருக்கிறோம். இப்போதைக்கு எங்கள் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் சுமார் 14,000 பேர் வேலை பார்க்கிறார்கள். இனியும் இந்த ஊழியர்கள் எண்ணிக்கை மற்றும் விமானங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க இருக்கிறோம்" எனச் சொன்னார்.
அதோடு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் இருந்து, இதுவரை 1,100-க்கும் மேற்பட்ட ஊழியர்களை (விமான பராமரிப்புப் பொறியாளர்கள், விமானிகள், விமானத்தில் பயணிகளுக்கு உதவும் கேபின் குழுவினர்கள்) வேலைக்கு எடுத்திருக்கிறார்களாம். ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் ஒரு தேர்ந்த ப்ரொஃபஷனல்கள். இன்னும் 2,000 ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களை, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் வேலைக்கு எடுக்கப் போகிறோம், எனவும் சொல்லி இருக்கிறார் அஜய் சிங்.
தற்போதைக்கு ஸ்பைஸ் ஜெட் போயிங் 737 ரக விமானங்கள் பாம்பார்டர் (Bombardier Q - 400S) ரக விமானங்கள் என சில வகை விமானங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு 575 விமான சேவைகள், 62 நகரங்களுக்கு பறக்கின்றன. இந்த 62 நகரங்களில் 9 வெளிநாடும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் புதிய விமானங்கள் மற்றும் விமான ரகங்களைக் குறித்துப் பேசிய போது "தற்போதைக்கு ஸ்பைஸ் ஜெட் குறுகிய உடல் கொண்ட விமானங்களைத் தான் அதிகம் இயக்கி வருகிறார்களாம். கடந்த மே 28, 2019-ல் தான் ஸ்பைஸ் ஜெட் தன் மார்ச் 2019 காலாண்டு முடிவுகளை வெளியிட்டார்கள். அதில் 22 சதவிகித நிகர லாபம் அதிகரித்திருக்கிறதாம்.
ஆக ஜெட் ஏர்வேஸின் வெற்றிடத்தை ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ, கோ ஏர் என தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு நிரப்பிக் கொண்டிருப்பதை அவர்களின் மார்ச் 2019 காலாண்டு முடிவுகள் சொல்கின்றன.