டெல்லி: முன்னுரிமை வர்த்தக நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவை அமெரிக்கா நீக்கியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தகப் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று அமெரிக்காவுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது
அமெரிக்கா தங்களின் இறக்குமதிப் பொருட்களுக்கான வரி உயர்வை குறைக்குமாறு கடந்த ஆண்டிலிருந்து தொடர்ந்து மிரட்டல் விடுத்துவந்தது. ஆனால், அமெரிக்காவின் மிரட்டலை இந்தியா கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்தி வந்ததால் வேறு வழியில்லாமல் அமெரிக்கா தனது முன்னுரிமை வர்த்தக நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிவிட்டதாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பான பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவேதான் வேறு வழியில்லாத இந்தியாவும் தற்போது வர்த்தகப் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக்கொள்ள அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
உடும்புப்பிடி
ஆடம்பரப் பொருளான ஹார்லி டேவிட்சன் பைக்குக்கு கூடுதலாக இறக்குமதி வரி விதிக்க போட்ட பிள்ளையார் சூழி இன்றைக்கு இரு நாடுகளுடனான வர்த்தக உறவில் விரிசல் விழும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேரடியாகவே தொலைபேசியில் அழைத்து பேசியும், இந்தியா தனது நிலையை மாற்றிக்கொள்ளாமல் உடும்புப்பிடியாக இருந்தது.
மீண்டும் வரியை உயர்த்திய இந்தியா
ஏற்கனவே இந்தியாவுடன் மேற்கொண்ட வர்த்தகத்தில் பற்றாக்குறை ஏற்பட்ட கடுப்பில் இருந்த ட்ரம்புக்கு கோபம் தலைக்கேறியது. இதனால் ஆத்திரமடைந்த அவர் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியப்பொருட்கள், மருத்துவ உபகரணப் பொருட்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் போன்றவற்றுக்கு கூடுதல் இறக்குமதி வரியை போட்டுத் தாக்கினார். அதற்கு எதிர்வினையாக இந்தியாவும் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் முதல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகம் பாதாம் பருப்பு, வாதாங்கொட்டை உள்பட சுமார் 29 வகையான பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்துவதாக அறிவித்தது.
இறுதி எச்சரிக்கை
வரி உயர்வை அறிவித்தாலும், அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்துகொண்டு வரி உயர்வை தொடர்ந்து ஒத்திப்போட்டுக்கொண்டே வந்தது. கடைசியில் தங்களது பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்வை திரும்பப் பெறவேண்டும் என்றும், இந்தியாவில் உள்ள தங்கள் நாட்டு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை நீக்க வேண்டும் என்றும் அதற்கான காலக்கெடுவானது கடந்த மே 2ஆம் தேதி என்றும் அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதத்தில் இறதி எச்சரிக்கை விடுத்தது.
வரி உயர்வு ஒத்திவைப்பு
இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடைமுறைகளை முன்னிட்டு இரு தரப்பு பேச்சுவார்த்தையை இந்தியா கடந்த மே மாதம் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டது. கூடவே இறக்குமதி வரி உயர்வையும் மே 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
இடைஞ்சலை தூக்கு
இதனையடுத்து கடந்த மே 6ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு இந்தியா வந்த அமெரிக்க வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸிடம் இந்தியப் தரப்பினர், தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றுக்கொண்டுள்ளதால், தங்களால் இது குறித்து எந்தவிதமான உத்தரவாதமும் தரமுடியாது என்று தெளிவாகக் கூறினர். இதனால் எரிச்சலடைந்த வில்பர் ரோஸ் இறக்குமதிப் பொருட்களுக்கான வரியை குறைப்பதோடு இங்குள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள அசவுகரியங்களை நீக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.
வில்பர் ரோஸ் ஏமாற்றம்
வில்பர் ரோஸ் வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்தியா மீண்டும் இறக்குமதி வரி உயர்வை வரும் 16ஆம் தேதி வரையிலும் தள்ளிப்போட்டது. அதோடு தேர்தல் முடிந்து புதிய ஆட்சி வந்தவுடன் இது குறித்து உறுதியான முடிவு எடுக்கப்படும் என்றும் இந்தியத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனால் வில்பர் ரோஸ் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.
புது வெளியுறவு அமைச்சர்
தற்போது லோக்சபா தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணியே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துவிட்டது. பிதாமகராக (பிரதமராக) மீண்டும் மோடியே வந்துவிட்டார். கூடவே வெளியுறவுத் துறை அமைச்சராக அமெரிக்காவுடன் நல்ல முறையில் நட்புறவில் இருக்கும் சுப்ரமணியன் ஜெய்சங்கரே நியமிக்கப்பட்டுள்ளார்.
சந்தோசம் போச்சு
வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டதை அடுத்து இந்திய அமெரிக்க வர்த்தக உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று இந்தியாவும் நம்பியது. ஆனால் இந்த நேரத்தில கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் யாரும் எதிர்பார்க்காத ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அவர் போட்ட குண்டால், இந்தியாவில் ஆளும் பாஜக தனது தேர்தல் வெற்றியை முழுசாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சலுகை பறிப்பு
அதாவது நாங்களும் எத்தனையோ முறை உங்களிடம் கேட்டுப்பார்த்துவிட்டோம். ஆனால், நீங்கள் இன்னமும் அது பற்றி உறுதியான நடவடிக்கை எதையும் எடுத்ததாக தெரியவில்லை. எனவே, இதுகாரும் நாங்கள் உங்களுக்கு அளித்துவந்த முன்னுரிமை வர்த்தக நாடு என்ற சலுகையை நாங்கள் திரும்பப் பெற்றக்கொண்டுவிட்டோம். இனிமேல் நீங்கள் எங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதாக இருந்தால் மற்ற நாடுகளைப் போலவே கூடுதல் வரியை செலுத்திவிட்டு பொருட்களை உள்ளே எடுத்துச்செல்லுங்கள் என்று ட்ரம்ப் கூலாக சொல்லிவிட்டார்.
உறவுகள் புதுப்பிக்கப்படும்
ட்ரம்ப் இப்படி சொல்லிவிட்டதால், இனிமேல் இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றமதி செய்யும் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2000த்துக்கும் மேற்பட்ட பொருட்களுக்கு கூடுதலாக வரி செலுத்தவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்த வர்ததகத்துறை அமைச்சக அதிகாரிகள் இரு நாடுகளின் உறவுகள் மேம்பட தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.
நம்பிக்கையான கூட்டாளி
அதோடு, இது வரையிலும் அமெரிக்காவின் நம்பிக்கையான கூட்டாளியாக இருந்ததால் இந்தியா அதிக அளவில் ராணுவ விமானங்கள் மற்றும் பிற உபகரணங்களையும் வாங்கி வந்தது. கடந்த 2017ஆம் ஆண்டுவரையிலும் அமெரிக்கா சுமார் 550 சதவிகிதம் ராணுவ தளவாடப் பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளது.
2ஆவது இடத்தில் இந்தியா
உலகிலேயே ராணுவப் பொருட்களை அமெரிக்காவிடம் வாங்குவதில் இந்தியா தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது அமெரிக்கா முன்னுரிமை வர்த்தக நாடு என்ற அங்தஸ்தை நீக்கி விட்டதால் இனிமேல் இதிலும் சிக்கல் ஏற்படும் என்று தனியார் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த காஷிஷ் பாரிபியனி தெரிவித்தார்.
உடைந்த கண்ணாடி
இந்தியாவின் நிலைமை தற்போது உடைந்த கண்ணாடியை கையில் வைத்துக்கொண்டு கண்ணைக் கட்டிக்கொண்டு கயிற்றில் நடப்பது போல் உள்ளது. இதை வரும் நாட்களில் ஒழுங்காக ஒட்ட வைக்குமா அல்லது கயிற்றில் இருந்து கீழே விழுந்து காயமாகுமா என்பது தான் பெரிய கேள்விக்குறியாக உள்ளது என்றும் பாரிபியனி தெரிவித்தார்.
இந்தியாவின் நிலை என்ன
அதோடு, ஆசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் விதத்தில் இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உடன் கூட்டு ராணுவ பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா தற்போது எடுத்துள்ள நிலைப்பாட்டால் இந்தியாவின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
பேச்சுவார்த்தைக்கு தயார்
இந்தியாவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலை குறித்து வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் தெரிவிக்கப்பட்டது. அவரும் வர்த்தக அமைப்புகளிடமும் மத்திய அரசு அதிகாரிகளிடமும் வரும் 6ஆம் தேதி இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளதாகவும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சீர்செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளதாக வர்த்தகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.