டெல்லி: நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் தனது முதல் அரசு முறை பயணமாக, வரும் ஜூன் 8ஆம் தேதி ஜப்பானில் நடைபெறும் ஜி-20 என்னும் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் நிதியமைச்சர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டில் பங்கேற்பதற்காக செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 8 மற்றம் 9ஆம் தேதிகளில் நடைபெறம் ஜி-20 மாநாட்டில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலைகுறித்தும், வளர்ந்த மற்றம் வளரும் நாடுகளின் உள்கட்டமைப்புகளில் முதலீடுகளை ஊக்கப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ந்த நாடுகள் ஒன்றிணைந்து ஜி-7 கூட்டமைப்பை உருவாக்கியது போல் இந்தியா போன்று வளரும் நாடுகளும், வளர்ந்த நாடுகளோடு சேர்ந்து ஜி-20 என்ற கூட்டமைப்பினை உருவாக்கியது. கடந்த 1999ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பின் மாநாடு ஒவ்வோர் ஆண்டும் உறுப்பினராக உள்ள நாடுகளின் தலை நகரில் நடைபெறுவது வழக்கம்.
ஆண்டு தோறும் நடைபெறும் மாநாட்டில் சர்வதேச பொருளாதாரம், உறுப்பு நாடுகளில் ஏற்படும் நிதிச் சிக்கல்கள், பயங்கரவாத எதிர்ப்பு, என சர்வதேச நிகழ்வகள் அனைத்தும் அலசப்படும். கடந்த ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
நடப்பு 2019ஆம் ஆண்டில் வரும் ஜூன் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் ரிசர்வ் வங்கிகளின் ஆளுநர்கள் பங்கேற்கும் மாநாட்டில் பங்கேற்க, இந்தியாவின் சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரான சக்தி காந்ததாஸும் செல்கின்றனர்.
ஜி-20 மாநாட்டில் பங்கேற்க முதலில் பிரதமர் மோடி செல்வதாகவும், அதோடு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து இரு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் பிரச்சனைகள் குறித்து பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. மீண்டும் மோடியே பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். நிதியமைச்சராக அமித் ஷா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத நிர்மலா சீதாராமன் அந்தப் பதவியில் அமர்த்தப்பட்டார். இதன் மூலம் சுதந்திர இந்தியாவின் நேரடியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் நிதியமைச்சர் என்ற பெயரை பெற்றள்ளார். இதனால் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது 2019-20ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையிலும், ஜி-20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இவருடன் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸூம் உடன் செல்கிறார்.
நிதியமைச்சராக பதவியேற்ற பின்பு நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் முதல் வெளிநாட்டு பயணமாகும். ஜூன் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறும் மாநாட்டில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை, சர்வதேச நாடுகள் சந்தித்து வரும் நிதிச்சிக்கல்கள், ஜி-20 நாடுகளின் உள்கட்டமைப்பு திட்டங்களில் செய்துள்ள முதலீடுகளை மேலும் அதிகரிப்பது மற்றம் சர்வதேச வரிவிதிப்பு என பல்வேறு விசயங்கள் குறித்து விரிவாக அலசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி-20 உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள் பங்கேற்கும் மாநாட்டில் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் உலகளாவிய வளர்ச்சி, அதோடு அதிகரித்து வரும் சர்வதேச வர்த்தகத்தின் மீதான தாக்கம் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வு பற்றிய விவாதம் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
நிதியமைச்சர்கள் கலந்து கொள்ளம் மாநாட்டின் தொடர்ச்சியாக வரும் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் ஒசாகா நகரில் ஜி-20 உறுப்பு நாடுகளின் தலைவர்களின் மாநாடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund-IMF) 2019ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதார வளர்ச்சியானது முந்தைய ஆண்டைவிட 0.3 குறைந்து 3.3 சதவிகிதமாக மதிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார அபாயங்கள், சர்வதேச ஏற்றத்தாழ்வுகள், அதிகரிக்கும் மக்கள் தொகைப்பெருக்கம், சர்வதேச நிதிச் சந்தையில் சாதகங்கள் மற்றும் சவால்கள் என அனைத்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.