நியூயார்க்: தனிநபர் நுகர்வுத் தன்மை அதிகரிப்பு, அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு போன்ற காரணிகளால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2020ஆம் நிதியாண்டில் எதிர்பார்த்தது போலவே 7.5 சதவிகிதத்தை எட்டும் என்று உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
அதேபோல், 2018-19ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.2 சதவிகிதமாக இருக்கும் என்றும் உலக வங்கி கணித்துச் சொன்னது. ஆனாலும், தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வால் கூடிக்கொண்டு வரும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, இதனைத் தொடர்ந்து உயர்ந்து வரும் பணவீக்க விகிதம் இவற்றின் காரணமாக கடந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவிகிதமாக இருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் இரண்டாவது முறையாக அபார வெற்றிபெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இதன் எதிரொலியாக பங்குச் சந்தையிலும் அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்துவரும் நிலையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிச்சயம் 7.5 சதவிகித இலக்கை எட்டக்கூடும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டின் பணவீக்க விகிதம் தொடர்ந்து கூடிக்கொண்டே வருகிறது. பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கிய மத்திய ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை கடந்த பிப்ரவரி மாதத்தில் 0.25 புள்ளிகளையும், பின்னர் ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது முறையாக 0.25 சதவிகிதத்தையும் குறைத்தது. இதனால் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் பொருளாதார வளர்ச்சி இன்னும் மந்தகதியிலேயே உள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு
நாட்டின் பணவீக்க விகிதத்தை கருத்தில்கொண்டுரெப்போ விகிதத்தை 0.25 அடிப்படைப் புள்ளிகள் குறைப்பதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்றபின், ரெப்போ விகிதம் குறைக்கப்படுவது மூன்றாவது முறையாகும். இந்த ஆண்டில் பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களில் குறைக்கப்பட்ட ரெப்போ விகிதம், மூன்றாவது முறையாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த அறிவிப்பு
நாட்டின் நிதிக்கொள்கையை வகுக்கும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தலைமையிலான நிதிக்கொள்கைக் குழு இரு தினங்களாக விவாதித்தது. லோக்சபா தேர்தல் வெற்றிக்கு பின்னர் நடக்கும் முதலாவது கூட்டம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதில் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்தும் விதமாக மூன்றாவது முறையாக வட்டி விகிதத்தை 0.25 புள்ளிகள் குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.
2018-19 நிதியாண்டில் ஜிடிபி சரிவு
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது கடந்த 2018-19ஆம் ஆண்டில் நிச்சயமாக 7.2 சதவிகிதமாக இருக்கும் என்று உலக வங்கி முதல் அனைத்து பொருளாதார நிபுணர்களும் கணித்து அறிக்கை வெளியிட்டு நம்பிக்கை அளித்திருந்தனர். ஆனால் அத்தனை கணிப்பு மற்றும் எதிர்பார்ப்புகளையும் மீற 6.8 சதவிகிதமாக சரிந்துவிட்டது. இதற்கு முக்கியமாக போதிய மழையின்மையால் விவசாய உற்பத்தி பாதிப்பு, தொழில் துறையின் மந்த நிலை, அதோடு மத்திய அரசின் கட்டுமானத் துறையில் செய்த முதலீடுகள் போன்ற காரணங்களால் இந்த சரிவு ஏற்பட்டதாக உலக வங்கி தெரிவித்தது.
வர்த்தகப் போர்
கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் அண்டை நாடான சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.6 சதவிகிதமாகவே இருந்தது. அதேபோல் 2019ஆம் ஆண்டில் 6.2 சதவிகிதமாக மேலும் குறையக்கூடும் என்றும் உலக வங்கி கணிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு காரணம் அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள வர்த்தகப் போரால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த சரிவு என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
வேகமாக வளரும் பொருளாதாரம்
அதேபோல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் வரும் 2020ஆம் ஆண்டில் 6.1 சதவிகிதமாகவும், பின்னர் 2021ஆம் ஆண்டில் 6 சதவிகிதமாகவும் மேலும் சரிவை சந்திக்கும் என்றும் உலக வங்கி மேலும் சீனாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. சீனாவுடன் ஒப்பிட்டால் இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருக்கும் என்றும் நம்பிக்கை அளித்துள்ளது.
ஜிடிபி 7.5 சதவிகிதம்
தனிநபர் நுகர்வுத் தன்மை, தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தையில் அதிகரித்து வரும் அந்நியா முதலீடுகள் ஆகியவற்றின் காரணமாக, சீனாவைக் காட்டிலும் 1.5 சதவிகிதம் அதிகரித்து காணப்படும் என்றும், நடப்பு 2019ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 சதவிகிதத்தை எட்டும் என்றும் உலக வங்கியின் பொருளாதாரப் பிரிவு தனது ஆய்வறிக்கையை கடந்த 4ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதோடு தனது முந்தைய கணிப்பிலிருந்து மாறுபாடு எதையும் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலக வங்கி ஆய்வறிக்கை
நாம் எதிர்பார்ப்பது போல் இதே நிலை தொடரும். அதேபோல் தனிநபரின் நுகர்வுத் தன்மை, அந்நிய முதலீடுகள், கடன் வளர்ச்சியையும், நாட்டின் நிதிக் கொள்கையையும் வலுவாக்கியுள்ளது. அதேபோல் நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் நுகர்வுத் தன்மையும் நாட்டின் கடன் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது என்றும் உலக வங்கியின் பொருளாதாரப் பிரிவுன் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.