வாஷிங்டன்: எச்-1பி விசாவில் வேலை செய்யும் சுமார் 594 ஊழியர்களுக்கு விடுமுறை நாட்களுக்கான சம்பளம் வழங்காமல் இருந்ததை கண்டுபிடித்த அமெரிக்காவின் தொழிலாளர் ஊதியப் பிரிவு அவர்களுக்கு பின் தேதியிட்டு சுமார் 7.64 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் உயர் தகுதியின் அடிப்படையில் எச்-1பி விசாவில் பாப்புலஸ் குரூப் என்னும் வெளிநாட்டு ஏஜென்சியின் மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்பவர்கள். இவர்களை வேலைக்கு அமர்த்திய பாப்புலர் குரூப் நிறுவனம் ஊதியப்பட்டியலையும் சரிவர பராமரிக்காமல் ஊழியர்களை ஏமாற்றி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
தொழிலாளர் துறையின் ஊதியப்பிரிவு உத்தரவிட்டதைத் தொடர்ந்து மேற்கண்ட பாப்புலஸ் குரூப் 594 ஊழியர்களுக்கும் விடுமுறை நாட்களுக்கான சம்பள பாக்கியை முழுவதும் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எச்-1பி விசா கனவு
உலகம் முழுவதும் தகவல்தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் எப்படியாச்சும் எச்-1பி விசா வாங்கி அமெரிக்காவில் ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து அங்கேயே செட்டிலாகிவிடலாம் என்பது தான் கனவாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஊழியர்களும், இத்துறையில் கூடுதல் தகுதி பெற்றவர்களும் இந்த வாய்ப்புக்காகவே அமெரிக்க தூதரக வாசலில் நாள் கணக்கில் காத்துக்கிடப்பதும் தொடர்கதையாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.
மோசடி ஏஜென்சிகள்
ஆனால், ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. ஊழியர்களின் அப்பாவித்தனத்தை தங்களின் மூலதனமாக வைத்துக்கொண்டு அவர்களிடம் இருந்து தங்களுக்கு தேவையான வேலையை வாங்கிக்கொண்டு அதற்கான ஊதியத்தை தராமல் ஏமாற்றும் மோசடியான வேலைவாய்ப்பு ஏஜென்சிகள் இருக்கத்தான் செய்கிறது. இவர்களின் மோசடிகளை தடுக்க அந்தந்த நாடுகளின் அரசுகளும் தொழிலாளர் துறையும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இவ்வகையான மோசடிகளை தடுக்க முடியும்.
ட்ரம்ப்பின் அதிரடி
ஒரு வேளை இந்த மாதிரியான ஏமாற்றுக்காரர்களிடம் யாரும் ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காகத்தானோ என்னவோ, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைக்கு வருபவர்களுக்கு வழங்கும் எச்-1பி விசா வழங்குவதற்கான நடைமுறைகளில் அதிக கெடுபிடி காட்ட ஆரம்பித்துவிட்டாரோ என்று நினைக்கத் தோன்றகிறது.
எச்-1பி விசா கெடுபிடி
ட்ரம்ப் அதிபராக பதவிக்கு வந்த உடனேயே எச்-1பி விசா வழங்குவதற்கான நடைமுறையில் கெடுபிடி காட்டத் தொடங்கினார். முதலில் எச்-1பி விசாவுக்கு சம்பளத் தகுதி குறைந்த பட்சமாக ஆண்டுக்கு 95000 டாலராக இருக்கவேண்டும் என்று முதல் விதியை கொண்டுவந்தார். அடுத்ததாக இதில் வேலைத் தகுதியை கொண்டு வந்தார், பின்னர் எச்-1பி விசா பெற்று வந்தவர்கள் வேறு வேலைக்கு மாற வேண்டுமானல், அதே வேலை மாற நினைக்கும் நிறுவனத்திலும் இருக்க வேண்டியது அவசியம் என்றும் இல்லாவிட்டால் மாற முடியாது என்றும் உத்தரவிட்டார்.
லீவு நாளுக்கு சம்பளம் கிடையாது
ட்ரம்ப் அதிலும் திருப்தியடையாமல் அடுத்ததாக எச்-1பி விசாவில் செல்பவர்கள் தங்கள் மனைவியையும் கூடவே அழைத்துச்செல்லும் எச்-4 விசா விதிமுறையிலும் மாற்றம் கொண்டுவந்தார். அடுத்தாக உயர்படிப்பிற்காக அங்கு செல்பவர்களுக்கு வழங்கும் விசா விதிமுறையிலும் மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ட்ரம்ப் இவ்வளவு கெடுபிடியாக இருந்தும் சில ஏமாற்று ஏஜென்சிகள் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்பவர்களிடம் வேலை வாங்கிக்கொண்டும், விடுமுறை நாட்களுக்கும் சம்பளத்தை தராமல் ஏமாற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாப்புலஸ் குரூப்
அமெரிக்காவின் மிக்ஸிகன் மாகாணத்தில் ட்ராய் (Troy) நகரத்தில் உள்ளது பாப்புலஸ் குரூப் (Populus Group). இது நம்ம ஊரில் உள்ளது போல வேலைவாய்ப்பு வழங்கும் ஏஜென்சியாகும். இந்நிறவனம் தகவல் தொழில்நுட்பத்துறையில் உயர் தகுதி பெற்றவர்களை எச்-1பி விசா மூலம் அமெரிக்காவுக்கு அழைத்துசென்று வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது.
594 எச்-1பி ஊழியர்கள்
இந்தியாவிலிருந்து 594 தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள் பாப்புலஸ் குரூப் ஏஜென்சியின் மூலமாக எச்-1பி விசா பெற்று அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்துவருகின்றனர். இவர்கள் அனைவரையும் தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்களுக்கு அனுப்பிய பாப்புலஸ் குரூப் ஏஜென்சியே சம்பளமும் வழங்கிவருகிறது. ஆனால் விடுமுறை நாட்களுக்கான சம்பளத்தை மட்டும் தராமல் ஏமாற்றி வந்துள்ளது.
தொழிலாளர் துறை கண்டுபிடிப்பு
உயர் தகுதியின் அடிப்படையில் எச்-1பி விசாவில் வந்தவர்களை வேலை வாங்கிவிட்டு விடுமுறை நாட்களுக்கு சம்பளம் தராமல் ஏமாற்றியதை அங்குள்ள தொழிலாளர் துறையின் Department of Labour's) சம்பளம் மற்றும் வேலை நேரத்தை ஆய்வு செய்யும் துறை (Wage and Hour Division) கண்டுபிடித்துள்ளது. இதை கடந்த காலங்களில் அவர்கள் பெற்ற சம்பளம் மற்றும் நடப்பு காலகட்டத்தில் அவர்கள் வாங்கும் ஊதியம் மற்றும் பாப்புலஸ் குரூப் ஏஜென்சியின் ஊதியப்பட்டியலை தீவிரமாக ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.
ரூ.7.64 கோடி சம்பள பாக்கி
மிக்ஸிகன் மாகாணத்தின் தொழிலாளர் பிரிவு இதுபற்றி மேலும் தீவிரமாக விசாரித்த போது பாப்புலஸ் குரூப் ஏஜென்சியும் மேற்குறிப்பிட்ட 594 இந்திய தகவல் தொழில்நட்பத்துறை நிபுணர்களுக்கும் விடுமுறை நாட்களுக்கு சம்பளம் வழங்காததை ஒப்புக்கொண்டுள்ளது. இதன்படி 594 எச்-1பி விசா ஊழியர்கள் அனைவருக்கும் மொத்தமாக சுமார் 7.64 கோடி ரூபாய் வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளது.
நிபுணர்களின் பற்றாக்குறை
இது பற்றி விளக்கிய தொழிலாளர் துறையின் சம்பளம் மற்றும் வேலை நேரப் பிரிவின் டெட்ராய்ட் பிரிவு இயக்குநரான டிமோலின் மிட்செல் (Timolin Mitchell) அமெரிக்க நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான திறமையான தகவல் தொழில்நுட்பத்துறை நிபுணர்களின் பற்றாக்குறை இருப்பதை உறுதி செய்தால் மட்டுமே எச்-1பி விசா வெளிநாட்டு தொழிலாளர் சான்றிதழ் திட்டத்தின் (H-1B Foreign Labour Certification Programme) பிற நாட்டவர்களை வேலைக்கு அமர்த்த முடியும் என்று கூறினார்.
வேலை உத்தரவாதம்
இத்திட்டத்தின் படி, அமெரிக்கர்களுக்கு வேலைக்கான உத்தரவாதத்தையும் மற்றும் வேலைக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. அதோடு அமெரிக்க சட்டதிட்டங்களை மதிக்கும் நிறுவனங்கள் அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு, தொழிலாளர் சட்ட விதிகளின் படி நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச சம்பளம் பெறுவதை உறுதி செய்யவேண்டும் என்றம் டிமோலின் மிட்செல் கூறினார்.
அனைவரும் சமம்தான்
அமெரிக்கர்களுக்கு எந்த அளவு வேலை உறுதி செய்யப்படுகிறதோ அதே நிலைமை தான் பிற நாடுகளில் இருந்து வந்து வேலை பார்ப்பவர்களுக்கும் பொருந்தும் என்றும் குறிப்பாக உயர் தகுதியின் அடிப்படையில் குடியுரிமை இல்லாத எச்-1பி விசா பெற்று இங்கு வந்து வேலை பார்க்கும் அனைவருக்கும் பொருந்தும் என்றும் மிட்செல் கூறினார்.
ஆதாரம் முக்கியம்
அமெரிக்க நிறுவனங்கள் அனைத்தும், தங்கள் நிறுவனங்களில் வேலை பார்க்கும் அமெரிக்க ஊழியர்களுக்கு வழங்கம் சம்பளத்தைப் போலவோ, அல்லது அதற்கு நிகராகவோ எச்-1பி விசா ஊழியர்களுக்கும் வழங்குவதற்கான ஆதாரத்தையோ அல்லது தற்போது நடைமுறையில் உள்ள ஊதியம் இவற்றில் எது அதிகமோ அதற்கான ஆதாரத்தை தொழிலாளர் துறைக்கு சமர்பிக்கவேண்டியது அவசியமாகும்.