அலிபாபா. அமேஸானையே விரட்டி அடித்த பிரம்மாண்ட இ காமர்ஸ் நிறுவனம். இதன் நிறுவனர் ஜாக் மாவிடம் பிசினஸ் பற்றிக் கேட்டால் எப்போதும் ஒரு உதாரணத்தைச் சொல்வார்.
"ஒரு குழந்தைக்கு முன்னால் ஒரு ஐஸ்க்ரீமையும், 2000 ரூபாய் நோட்டையும் காட்டினால், அது ஐஸ்க்ரீமைத் தான் எடுத்துக் கொள்ளும். அந்தக் குழந்தைக்கு 2,000 ரூபாயில் எத்தனை ஐஸ்க்ரீம்களை, எத்தனை வகையான ஐஸ் க்ரீம்களை வாங்க முடியும் எனத் தெரியாது".
"அதே போல, இன்றைய உலகில் இருக்கும் இளைஞர்களிடம் ஒரு நல்ல வேலைக்கான அப்பாயிண்ட்மென்ட் லெட்டர் மற்றும் ஒரு நல்ல Business-க்கான ஐடியாவைக் கொடுத்தால், அவர்கள் நல்ல வேலையைத் தான் தேர்வு செய்கிறார்கள், அந்த பச்சைக் குழந்தயைப் போல" என்கிறார் ஜாக் மா.
நான் பிசினஸ் மேன்
இப்போது நாம் பார்க்கப் போகும் லஷ்மணன் ஆதிகேசவன், ஜாக் மா சொன்ன குழந்தைகளில் ஒருவர் அல்ல. அவர் ஜாக் மா ரகம் தான். இல்லை என்றால் சென்னைக்கு பிழைப்பு தேடி வர முடியுமா..? அப்படியே வந்தாலும் வெறும் 150 ரூபாய் கையில் வைத்துக் கொண்டு பிழைக்கத் தொடங்கியவர் இன்று 13 வாகனங்களை வைத்து லாஜிஸ்டிக்ஸ் பிசினஸ் நடத்த முடியுமா..? முடியும் என 13 வாகனங்களை ஓட்டிக் காட்டுகிறார் லஷ்மணன் ஆதிகேசவன்.
லஷ்மணன் ஆதிகேசவன்
ஏழைகளுக்கே இருக்கும் க்ளிஷேவான பின்னணி. ஏழு பேர் கொண்ட ஏழை விவசாயக் குடும்பம். எப்போதும் அரை வயிற்றுக் கஞ்சியுடனேயே வாழ்க்கை. மாடு போல் உழைத்தால் கூட பொருளாதார ரீதியாக முன்னுக்கு வர முடியாத, கூகுள் மேப்ஸால் கண்டு பிடிக்க முடியாத கிராமப் பின்னணி. வீட்டில் பிரச்னைகளுக்கு பஞ்சம் இல்லை. இந்த நிலையை மாற்ற 10-ம் வகுப்பு முடித்த உடன் சென்னைப் பேருந்து படியேறுகிறார்.
எங்கய்யா போர..?
தன்னை நம்பி வந்தவன் வட இந்தியனோ, கிழக்கிந்தியனோ, நேபாளியோ, பெங்காளியோ... வழக்கம் போல வாழ்வு கொடுக்கும் சென்னைக்கு 80 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்தார் நம் லஷ்மணன் ஆதிகேசவன். பேருந்து கட்டணம் போக சில்லறை எல்லாம் பொறுக்கி எண்ணினால் 150 ரூபாய். இவ்வளவு தான் நம் லஷ்மணன் ஆதிகேசவன் கையில் வைத்திருந்த பணம்.
சென்னை வருகை
அரை தூக்கத்துடனும், எதிர்காலம் குறித்த வலுவான பதற்றத்துடனும், பேருந்து குலுக்கத்துடனும் லஷ்மணன் ஆதிகேசவன் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த போது அவருக்கு வயது சுமார் 15. 2004-ம் ஆண்டு தன் 10-ம் வகுப்பு, பள்ளி இறுதித் தேர்வை முடித்த கையுடன் பஸ் ஏறிவிட்டார். அடுத்த நாள் விடியலிலேயே வேலை தேட ஆரம்பித்துவிட்டார் லஷ்மணன் ஆதிகேசவன்.
எடுபுடி
ஏர் பிடித்தோட்டிய வலுவான கைகள் என்றாலும், பார்த்தாலே குழந்தைத் தொழிலாலர் என சத்தியம் செய்யும் பிள்ளை முகம். இருப்பினும் சாப்பாடு வேண்டுமே. சின்ன சின்ன ஹோட்டல்களில் வேலை, சின்ன சின்ன கடைகளில் வேலை என ஒரு வேலை சாப்பாடு கிடைத்தாலே அவ்வளவு சந்தோஷப்பட்டார் லஷ்மணன் ஆதிகேசவன்.
மார்ஜின் இல்லை
சென்னைக்கு வரும் பலரும் இப்போது வாங்கும் சம்பளத்தை விட இன்னும் கொஞ்சம் கூடுதல் சம்பளம் என்கிற சைக்கிளில் தான் சவாரி செய்வார்கள். ஆனால் "வேலை என்னை உயர்த்தாது" என சென்னை பட்டவர்த்தனமாகப் புரிய வைத்தது ஆதிகேசவனுக்கு. ஆக பிசினஸ் செய்ய வேண்டும். இதில் மாற்றம் இல்லை. ஆனால் காசு..? சம்பாதிப்போம்... என ராப் பகலாக உழைக்கத் தொடங்கினார். காலையில் வழக்கம் போல ஒரு கடையில் வேலையை முடித்து விட்டு, ஓட்டமும் நடையுமா தன் இரவு வேலைக்கு ஓடினார்.
முதல் முதலீடு
ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 20 மணி நேரத்துக்கு மேல் உழைத்து சம்பாதித்த கூலியை, மதிய சாப்பாட்டை மிச்சம் பிடித்த பணத்தை, டிப்ச் கிடைத்த நான்கு ருபாய்... என எல்லாவற்றையும் தன் கசங்கிய, அழுக்கேறிய மஞ்சப் பைக்குள் வைக்கும் போது நம் அண்ணன் ஆதிகேசவனுக்கு வரும் சந்தோஷம் தான், அடுத்த நாளுக்கான சத்து டானிக்.
ஒரு நல்ல நாள்
2005 வாக்கிலேயே மனிதர் தான் சேமித்த பணத்தை வைத்து, ஒரு மளிகைக் கடை போடுகிறார். எப்படியும் இந்த பிசினஸ் தன் பொருளாதார நிலையை உயர்த்திவிடும் என முதல் நாள் ஆரத்தி எடுத்து வியாபாரத்தை ஆரம்பித்தார். அடுத்த 3 மாதங்களிலேயே "மளிகைக் கடை சரிப்படாதுங்க. இதுல வர்ற வருமானம் தான்னா என்னாலேயே வாழ முடியல. சைட்ல ஏதாவது தொழில் பண்ணனும்" எனக் காத்திருக்கிறார்.
வாட்டர் கேன்
அப்போது சென்னையில் வாட்டர் கேன் கலாச்சாரம் பெரிய அளவில் பரவுகிறது. "சென்னை மக்களுக்குத் தேவையான தண்ணீரை தயாரித்துவிட்டோம். ஆனால் அதை வீட்டுக்கு வீடு டெலிவரி செய்ய ஆள் இல்லை, விற்றுக் கொடுக்க ஆள் இல்லை" என ஒரு வார்த்தை நம் லஷ்மணன் ஆதிகேசவன் காதில் விழ, தண்ணீர் கேன் கம்பெனியோடு கை குலுக்குகிறார்.
வாட்டர் கேன்
மளிகைக் கடை பிசினஸ் செய்து கொண்டிருக்கும் போதே சைடில் வாட்டர் கேன் பிசினஸையும் பார்த்தார். சில மாதங்களிலேயே மளிகை கடை கொடுக்கும் மெல்லிய மார்ஜினை விட, வாட்டர் கேன் கொடுக்கும் லாபம் கொஞ்சம் இனிப்பாக இருந்தது. வாரங்கள் உருள மளிகைக் கடை சைட் பிசினஸாக உருண்டது. நம் லஷ்மணன் ஆதிகேசவன் பிசினஸ் தடம் வாட்டர் கேன் பக்கம் புரண்டது.
மொக்க ஆட்டோ
மளிகை கடைக்கே மாதக் கணக்கில் ஓவர் டைம் பார்த்து, முதல் போட்ட நம் லஷ்மணன் ஆதிகேசவனிடம் தண்ணீரை டெலிவரி செய்ய நல்ல வாகனம் இல்லை. தேர்ட் ஹேண்டில் ஒரு ஆட்டோவை வாங்கினார். அந்த ஆட்டோவின் டயர்களை மூன்று மாதங்களுக்கு 3 டயர்களை மாற்றக் கேட்டது. ஆக்ஸிலரேட்டரை ஒரு நிமிடம் தொடர்ந்து பிடித்தால் தான் பிக் அப்பே ஆனது. வெறுத்துவிட்டார் லஷ்மணன் ஆதிகேசவன்.
செலவுகள் அதிகம்
இப்போது தண்ணீர் வியாபாரம், மளிகை வியாபாரம் என இரண்டையும் சேர்த்து வரும் வருவாயில் பெரும் பகுதியை லஷ்மணன் ஆதிகேசவன் சாப்பிடுவதற்குள், இந்த ஆட்டோ முந்திக் கொண்டு சாப்பிட்டது. டயர், கியர் பாக்ஸ், க்ளெட்ச், பஞ்சர், ஆயில் என பல ஐட்டங்களை அடுக்கிக் சாப்பிட்டது ஆட்டோ. ஆனால் இன்னமும் ஆதியின் உணவில் மாற்றமில்லை. அத்தனை பராமரிப்புச் செலவுகள், பிரச்னைகள். 2006 புது வருடம் பிறந்தது. பல புதிய நண்பர்களும் ஆதிகேசவனுக்குக் கிடைத்திருந்தார்கள். ஆதி எதார்த்தமாக தன் ஆட்டோவைப் பற்றிச் சொல்ல, நண்பர்கள் பலரும் டாடா ஏஸ்-ஐ ட்ரை பண்ணச் சொல்கிறார்கள்.
அது சின்ன யானை
நம் லஷ்மணன் ஆதிகேசவனுக்கு பரிந்துரைக்கப்பட்டது டாடா ஏஸ் என்கிற சின்ன யானை. பலரிடமும் விசாரித்து ஒரு வழியாக பணத்தைத் தயார் செய்து 2006-ல் சொந்த டாடா ஏஸ் வாங்கிவிட்டார். இப்போது தண்ணீர் பிசினஸ் டாப் கியரில் தட்டித் தூக்குகிறார். மளிகைக் கடை, தண்ணீர் என இரண்டையும் சேர்த்து செய்தால் என்ன லாபம் வருமோ அந்த லாபத்தை தண்ணீரில் இருந்து மட்டுமே எளிதில் எடுத்துவிட்டார்.
பைபை
இனியும் மெல்லிய மார்ஜின் கொடுக்கும் மளிகை வேண்டும், என் லாப தாகம் தணிக்கும் தண்ணீர் போதுமென முழு மூச்சாக தண்ணீர் பக்கம் இறங்கினார். 2008 வரை மரண லாபம். 2004-ல் ரெண்டு இட்லிக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவர், 2008-ல் சரவணபவனில் சென்று, ஏசி அறையில் உட்கார்ந்து இட்லி சாப்பிடும் அளவுக்கு தன்னை உயர்த்திக் கொண்டார். ஆனால் சாப்பிடவில்லை. இன்னும் சிக்கனம் அவர் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. ஆனால் மூன்று வேளை தானும், தன்னைச் சுற்றி இருப்பவர்களையும், வாட்டர் கேன் வருமானத்தில் சாப்பிட வைத்தார்.
ஒரு சடன் பிரேக்
கூடுதல் சிந்தனை என்பதாலோ என்னவோ நம் லஷ்மணன் ஆதிகேசவனுக்கு முடி கொட்டி விட்டது போல மனிதருக்கு. வாட்டர் கேன் சப்ளை செய்யும் போது அவருக்கான லாபம் மினரல் வாட்டரில் இருந்து வருவதாக நம்பிக் கொண்டிருந்தார். திடீரென ஆதிக்கு ஒரு 1000 வாட்ஸ் பல்ப் பளிச்சிட்டது. வாகனத்துக்கு செய்யும் குறைந்த செலவினால் தான், வாட்டர் கேன் வியாபாரத்தில் தன்னால் லாபம் பார்க்க முடிகிறது என கண்டு கொண்டார். பிறகென்ன..?
லாஜிஸ்டிக்ஸ்
வழக்கம் போல வாட்டர் கேனை சைடில் தள்ளிவிட்டார். அப்ப எது மெயின் பிசினஸ்..? லாஜிஸ்டிக்ஸ் என்கிற டிரான்ஸ்போர்ட். மளிகைக் கடை போல வாட்டர் கேனும் மார்ஜின் வியாபாரம் தான். ஆனால் மளிகையை விட வாட்டர் கேனில் மார்ஜின் அதிகம் அவ்வளவு தான். ஆக வாட்டர் கேனை அதிக நாள் நம்ப முடியாது. நம் மார்ஜினை நாமே உயர்த்திக் கொள்ள லாஜிஸ்டிக்ஸ் தான் சரி என மீண்டும் தன் வியாபார தடத்தை லாஜிஸ்டிக்ஸ் பக்கம் பிரட்டினார்.
எப்படி
ஒரு பொருளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் அது ஒரு முழு சேவை ஆகி விடுகிறது. அந்த பொருளை லோடிங், அன் லோடிங் செய்வது, பொருளின் தன்மை (கண்ணாடி, மர சாமான், இரும்பு...) பொருத்து கூடுதல் ரேட் பேசுவது, பாதுகாப்பாக சேதாரம் இல்லாமல் கொண்டு வந்து சேர்ப்பது, வாடிக்கையாளர்களிடம் நேரடியாக நல்ல பெயர் எடுப்பது என லாஜிஸ்டிக்ஸை ஒரு முழு பிசினஸாகப் பார்த்தார் லஷ்மணன் ஆதிகேசவன். அப்போது மற்றொரு வித்தியாசமும் நம் ஆதிக்கு புரிய வருகிறது.
அப்ப இது வரை
இது வரை செய்தது வணிகம் அல்லது வியாபாரம். மளிகைக் கடையோ அல்லது வாட்டர் கேனோ இரண்டையுமே ஒருவரிடம் இருந்து வாங்கி ஒரு நல்ல விலைக்கு விற்பது தான் வேலை. ஆக அந்த பொருளுக்கான தரம், நல்ல பெயர் என எதையுமே தான் முழுமையாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் இந்த லாஜிஸ்டிக்ஸ் பிசினஸில் அந்த நல்ல பெயர், வாடிக்கையாளரின் திருப்தி என அனைத்தையும் எடுத்துக் கொள்ளலாம். தனக்கென் தனி சாம்ராஜ்யத்தைக் கட்டிக் கொள்ளலாம் என ஐஐஎம் மாணவர் ரேஞ்சுக்கு திட்டம் போட்டார் இந்த 10-வது வரை படித்த பிசினஸ் ஞானி.
விரிவாக்கம்
ஆக எந்த பொருளாக இருந்தாலும் அதை குறைந்த செலவில் டெலிவரி செய்ய முடிந்தால், தன் புதிய லாஜிஸ்டிக்ஸ் பிசினஸை வைத்து தட்டித் தூக்கலாம் என முடிவே செய்து விட்டார். அவ்வளவு தான் மளிகை கடையை மூடிவிட்டார். வாட்டர் கேன் பிசினஸை சைடில் ஒதுக்கிவிட்டார். லாஜிஸ்டிக்ஸை முழுமையாக கையில் எடுத்துக் கொண்டார். ஆதிகேசவன் டிரான்ஸ்போர்ட்ஸ் என பெயர் வைத்து ஓட்டத் தொடங்குகிறார்.
பசி
இன்று சுமார் 25 குடும்பங்கள் நம் ஆதியால் வாழ்ந்து கொண்டிருக்கிறர்கள். என்ன தான் சின்ன முதலாளியாக வளம் வந்தாலும், தன் சுய சம்பாத்தியத்தில் இருந்தாலும் நம் லஷ்மணன் ஆதிகேசவனுக்கு 2004-ம் ஆண்டு சில பலமான பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. பிசினஸ் லாபத்தைத் தாண்டி இந்த பாடங்கள், அவரை எப்போதும் நெறிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அந்த சப்ஜெக்டின் பெயர் பசி...!
பசி
"2004-ல சென்னைக்கு வந்தப்பா சாப்பாடு கஷ்டம் ரொம்ப பெரிய விஷயம். தங்குறதுக்கு நல்ல இடம் இல்லாம கூட இருக்கலாம், ஆனா சாப்பாடு இல்லாமல் நிறைய நாள் வேலைக்கு ஓடி இருக்கேன். ஒரு வேகத்துல பல நாள் ஒரே ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு, மிச்ச காச சேத்து வெச்சிருக்கேன். அது மாதிரி யாரும் பசியோட போராடக் கூடாதுங்க" என தன் பசியை பகிர்கிறார்.
லட்சியம்
"நான் மளிகை கடை வெச்சிருக்குறப்ப ரெண்டு குடும்பத்தை என்னால பசில இருந்து காப்பாத்த முடிஞ்சிது. மினரல் வாட்டர் பிசினஸ் பண்ணிக்கிட்டு இருந்தப்ப 4 - 5 குடும்பத்தை பசில இருந்து காப்பாத்த முடிஞ்சிது. இன்னக்கி நேரடியா 25 குடும்பத்தை என்னால காப்பாத்த முடியுது. இப்படி ஒரு 200 குடும்பத்தையாவது பசிக்கு சாப்பாடு இல்லங்குற பிரச்னையில இருந்து காப்பாத்தணும். அவங்களுக்கான வாழ்கைய சென்னையில ஓரளவுக்காவது அமைச்சிக் கொடுக்கணும், அந்த குடும்பம் பசியில என்ன மாதிரி தவிக்கக் கூடாதுங்குறது தாங்க என்னோட சுய நலம். இதுல என்னோட வளர்ச்சியும் இருக்கு தானே. அதாங்க பிசினஸ்" என தன் வாகன ரெஜிஸ்டரை புரட்டி வேலை பார்க்கத் தொடங்குகிறார் நம் லஷ்மணன் ஆதிகேசவன்.
சரிங்க இன்னக்கி நைட்டுக்கு என்ன சாப்படு..?
மிளகு ரசம்-ங்க, சாப்புட வர்றீங்களா..?
சரித் தான்..!