டெல்லி: இணையதள வங்கி சேவையில் RTGS மற்றும் NEFT கட்டணங்களை நீக்க ஆர்பிஐ முடிவு செய்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி தலைமையிலான நாணய கொள்கை கூட்டம் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. அதில் இணையதள வங்கி சேவையில் பணம் பரிமாற்றம் செய்ய விதிக்கப்பட்டு வரும் RTGS மற்றும் NEFT கட்டணங்களை மத்திய அரசு நீக்க முடிவு செய்துள்ளது. டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கப்படுவது மட்டுமல்லாமல் வங்கி வாடிக்கையாளர்களுக்கான செலவும் குறையும்.
ரியல் டைம் குரோஸ் செட்டில்மெண்ட் (RTGS) என்பது இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் ஒரு ஆன்லைன் பணபரிமாற்ற யுக்தியாகும். ஆர்டிஜிஎஸ்ஐ (RTGS) பயன்படுத்தி எந்த விதமான தாமதம் இல்லாமல் ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு நிதியை மாற்றிக் கொள்ளலாம். மேலும், இந்த ரியல் டைம் குரோஸ் செட்டில்மெண்டில், பரிவர்த்தனைகள் அனைத்தும் மொத்தமாக மேற்கொள்ளப்படாமல், ஒவ்வொரு பரிவர்த்தனையாக பரிசீலிக்கப்படுகின்றது. ஆர்டிஜிஎஸ்ஐ பயன்படுத்தி ஆன்லைன் மூலம் குறைந்த பட்சம் சுமார் 2 லட்சம் ருபாயை ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்றலாம். எனினும், இதில் உட்ச பட்ச எல்லை என்பது வரையறுக்கப்படவில்லை.
ஆர்டிஜிஎஸ் மூலம் பணபரிமாற்றம் செய்ய ஒரே ஒரு நிபந்தனை தான் உள்ளது. அதாவது பணத்தை அனுப்பும் மற்றும் பணத்தை பெறும் வங்கிகள் இரண்டும் ஆர்டிஜிஎஸ் வசதியை பெற்றிருக்க வேண்டும்.
ஆர்டிஜிஎஸ் மூலம் பணபரிவர்த்தனை செய்ய 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரைக்கும் ரூ. 25 கட்டணம் வரை வசூலிக்கப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் எச்டிஎப்சி வங்கியில் ஆர்டிஜிஎஸ் மற்றும் என்இஎப்டி பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
RTGS மற்றும் NEFT பரிவர்த்தனைகள் மீதான கட்டணத்தை ஆர்பிஐ நீக்க முடிவு செய்துள்ளதால், விரைவில் வங்கிகள் இந்த நன்மையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் போது நல்ல பயன் கிடைக்கும்.
ஆன்லைன் வங்கி சேவையில் NEFT மூலமாகப் பணம் அனுப்பினால் பரிவர்த்தனை முழுமை பெற குறைந்தது அரைமணி நேரம் முதல் ஒருமணி நேரம் வரை ஆகும். பணப் பரிவர்த்தனை வரம்பு வங்கிகளைப் பொருத்து மாறும். வங்கி வேலை நேரங்களில் மட்டுமே NEFT மூலமாகப் பணம் பரிவர்த்தனையைச் செய்ய முடியும். பரிவர்த்தனைகளுக்குக் குறைந்தது 2.5 முதல் 25 ரூபாய் வரை கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
மேலும் ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதமும் 5 சதவீதத்திலிருந்து 5.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் வீட்டுக் கடன், வாகன கடன் மீதான தவணை குறைய வாய்ப்புள்ளது.