டெல்லி: கடந்த மூன்று நாட்களாக மத்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பணக் கொள்கி முடிவுகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தை மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமை ஏற்று நடத்தினார். ஜூன் 03-ம் தேதி முதல் ஜூன் 06-ம் தேதி வரை நடந்த இந்த கூட்டத்தில், ஆர்பிஐ ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்திருக்கிறது.
இப்படி கடந்த 2013-ம் ஆண்டில் தான், ஆர்பிஐ (RBI) தொடர்ச்சியாக தன் ரெப்போ வட்டி விகிதத்தை மூன்ரு முறை குறைத்துக் கொண்டது.
கடந்த ஏப்ரல் 2019-ல் இரண்டாவது முறையாக 0.25 சதவிகிதம் குறைத்து ரெப்போ வட்டி விகிதத்தை 6.00 சதவிகிதமாக நிர்ணயித்தது ஆர்பிஐ. இப்போது மேலும் 0.25 சதவிகிதம் குறைத்து ரெப்போ வட்டி விகிதத்தை 5.75 சதவிகிதமாக நிர்ணயித்திருக்கிறது ஆர்பிஐ.
உர்ஜித் படேல் கடந்த டிசம்பர் 2018-ல் ராஜினாமா செய்த பின் சக்தி காந்த தாஸ் அரசியல் நெருக்கடியில் பொறுப்பேற்றார். அப்படி பொறுப்பேற்ற மனிதர் தொடர்ந்து பிப்ரவரி 2019, ஏப்ரல் 2019, ஜூன் 2019 என மூன்று பணக் கொள்கை முடிவுக் கூட்டங்களிலும் ரெபோ வட்டி விகிதத்தைத் தலா 0.25 சதவிகிதம் என இதுவரை 0.75 சதவிகிதம் குறைத்து இருக்கிறார் சக்தி காந்த தாஸ்.
இந்த வட்டி விகித குறைவு முடிவுக்கு ஆறு உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்து, ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்திருக்கிறார்கள். Dr. Chetan Ghate, Dr. Pami Dua, Dr. Ravindra H. Dholakia, Dr. Michael Debabrata Patra, Dr. Viral V. Acharya and Shaktikanta Das ஆகிய ஆறு பேர் தான் இந்த முறை வட்டி விகித தீர்மானக் குழுவில் இடம் பிடித்தவர்கள்.
2019 - 20 நிதி ஆண்டில் நடக்கும் இரண்டாவது வட்டி விகிதக் கூட்டம் இது. இன்னும் நான்கு வட்டி விகிதக் கூட்டங்கள் இந்த நிதி ஆண்டில் நடக்க இருக்கின்றன. 2019 ஆகஸ்டு 5, 6, 7., 2019 அக்டோபர் 1, 3, 4., 2019 டிசம்பர் 3,4,5 மற்றும் 2020 பிப்ரவரி 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்றன.
பொருளாதார வல்லுநர்கள் இந்தியா ரெப்போ ரேட் விகிதத்தைக் குறைக்க பல முக்கிய பொருளாதார அழுத்தங்களைக் குறிப்பிடுகிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். அதில் இரண்டு விஷயங்களை அடிக் கோடிட்டுக் காட்டுகிறார்கள். 1. இந்தியாவின் பொருளாதா வளர்ச்சி தேங்கி நிற்பது, 2. இந்தியாவில் நுகர்வு பெரிய அளவில் குறைந்திருப்பதால் பொருளாதார மந்த நிலையில் தவிப்பது.இதனால் தான் தொடர்ந்து வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்கிற நிர்பந்தத்தில் வட்டியைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
RBI மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கு வசூலிக்கும் வட்டி ரெப்போ ரேட். இப்போது ரெப்போ ரேட் 5.75 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. வங்கிகளிடம் ஆர்பிஐ கடன் வாங்கினால் வங்கிகள் வசூலிக்கும் கடனுக்கான வட்டியை ர்வர்ஸ் ரெப்போ ரேட் என்பார்கள். அந்த ரிவர்ஸ் ரெப்போ ரேட் 5.50 சதவிகிதமாக இருக்கிறது.
இந்தியப் பொருளாதாரத்தில் இருக்கும் மந்த நிலையைப் போக்க எடுக்கும் பொருளாதார நடவடிக்கைகளால் எப்படியும் நுகர்வோர் பணவீக்கம் சுமார் நான்கு சதவிகிதம் வரை அதிகரிக்கும் எனவும் கணித்திருக்கிறார்கள். இனி இந்தியப் பொருளாதாரத்தில் எடுக்கும் பொருளாதார சீர் திருத்த நடவடிக்கைகளால் நுகர்வோர் பணவீக்கம் சுமார் 2 சதவிகிதம் வரை கூட மாறுபடலாம் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.
ஆர்பிஐ கடந்த பிப்ரவரி மற்றும் ஏப்ரல் 2019-ல் தன் வட்டி விகிதத்தைக் 0.50 சதவிகிதம் குறைத்துக் கொண்ட போதிலும் வங்கிகள் தங்கள் கடன்களுக்கான வட்டி விகிதங்களை சுமார் 0.05 சதவிகிதம் தான் குறைத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் ஆர்பிஐ கண்டு பிடித்திருக்கிறதாம்.
ஒரு பக்கம் அனலிஸ்டுகள், பொருளாதார வல்லுநர்கள், தொழில்முனைவோர்கள் என பலரும் எதிர்பார்த்தது போல ஆர்பிஐ தன் வட்டி விகிதத்தை குறைத்துக் கொண்டிருக்கின்ற போதிலும், வங்கிகள், இந்த வட்டிக் குறைப்பை தங்கள் வாடிக்கையாளர்களுக்கும், குறிப்பாக தொழில் முனைவோர்களுக்கு வட்டி குறைவாக கடன் கொடுக்காததும், இந்திய பொருளாதாரத்தில் நிலவும் வர்த்தக மந்த நிலையை எளிதில் குறைக்காது எனவும் பல அனலிஸ்டுகள் எச்சரித்திருக்கிறார்கள்.
ஆக இந்த முறையாவது வங்கிகள் தங்கள் கடன்களுக்கான் வட்டி விகிதங்களைக் குறைத்துக் கொண்டு இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவார்களா..? மோடியின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்திய வங்கிகள் உதவுமா..?