டெல்லி : காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, லண்டனில் 1.9 மில்லியன் பவுண்டுகள் (இந்திய ரூபாயில் 16 கோடியே 68 லட்சமாம்) மதிப்பில் சொத்தை வாங்கி இருப்பதாகவும், இது தொடர்பாக ராபர்ட் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது. இதுகுறித்து அவரிடம் இதுவரை 11 தடவை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அவரது முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி, கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. அதோடு அவர் வெளிநாடு செல்வதற்கும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இருப்பினும், அமெரிக்கா, நெதர்லாந்து நாடுகளுக்கு மட்டும் ராபர்ட் வதேரா செல்ல கோர்ட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாம்.
இதற்கிடையே, லண்டன் உட்பட இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் ராபர்ட் வதேராவுக்கு வேறு சில சொத்துக்கள் இருப்பதாகவும் அமலாக்கத்துறைக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாகவும், குறிப்பாக ரூ.45 கோடி மதிப்புள்ள வீடும், ரூ.36 கோடி மதிப்புள்ள வீடு மற்றும் 6 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் ஆகியவற்றின் உரிமையாளர் ராபர்ட் வதேராவாக இருக்கலாம் என்று சந்தேகம் நிலவி வருகிறதாம். இவற்றை வாங்க சைப்ரஸ், துபாய் ஆகிய நாடுகளிலிருந்து ரகசிய பண பரிமாற்றம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆக மேற்குறிப்பிட்ட சொத்துக்களின் உரிமையாளர்கள் யார்? அந்த சொத்துக்களை வாங்க எங்கிருந்து பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது? உள்ளிட்ட விவரங்களை தங்களுக்கு அளிக்குமாறு இங்கிலாந்து அமலாக்கத்துறைக்கு, இந்திய அமலாக்கத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த விவரங்களின் அடிப்படையில், சொத்துக்களை முடக்கி வைக்க அமலாக்கத்துறை செயல் திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாம். சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பல வலுவான ஆதாரங்களை கொண்டு, ராபர்ட் வதேரா மீது வலுவான வழக்கை தொடுக்கவும் முடிவு செய்துள்ளதாம் அமலாக்க துறை.
அதோடு சமூக வலதளங்களில் ராபர்ட் வதேரா " என்னை சுற்றி தேவையற்ற குற்ற சாட்டுகள் நிலவி வருகின்றன. அதோடு என் வாழ்க்கை தனித்துவமானது நான் குற்றச்சாட்டுகளை எதிர்த்து வருகிறேன் என்றும் கூறியுள்ளாராம்.