பெங்களூரு: அசீம் பிரேம்ஜியின் (Azim Premji) இன்றைய சொத்து மதிப்பு சுமார் ரூ.1.60 லட்சம் கோடியாகும். கடந்த 2013ஆம் ஆண்டில் தனது சொத்தில் பாதியை இந்திய மக்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக தானமாக அளித்துள்ளார்.
மிகப்பெரும் தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனமா விப்ரோ நிறுவனத் தலைவரான அசீம் பிரேம்ஜி வரும் ஜூலை மாதத்தோடு தலைவர் பதவியில் இருந்து விலகி எந்த பொறுப்பும் இல்லாத சாதாரண இயக்குநராக தொடரப்போகும் அதே வேளையில் அவரைப் பற்றிய சில சுவராஸ்யங்களை நாம் அறிந்துகொள்ளலாம்.
கடந்த 1945ஆம் ஆண்டில் விப்ரோ நிறுவனத்தை தொடங்கி பின்னர் படிப்படியாக வளர்ந்து 1980ஆம் ஆண்டில் இந்தியப் பங்குச்சந்தையில் நுழைந்து அதன்பிறகு தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆதிக்கம் செலுத்தியதோடு இந்தியாவின் 2ஆவது பணக்காரராக உருவெடுத்ததோடு ஆயிரக்கணக்கானவர்களை கோடிகளுக்கு அதிபதியாக ஆக்கிய பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவார்.
தலைவர் பதவியிலிருந்து விலகுவதோடு தனது மூத்த மகனான ரிஷத் பிரேம்ஜியை தலைவர் பதவிக்கு முன்மொழிந்துள்ளார். இவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு முழுநேர இயக்குநராக பதவி வகிப்பார் என்றும் விப்ரோ நிறுவனம் தனது அறிக்கையை நேற்று பங்குச் சந்தை வர்த்தகம் முடிந்த பிறகு செபிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு வந்துவிடு
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு 1945ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் சியா முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவர். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு சிறுவனாக இருந்த அசீம் பிரேம்ஜியை பாகிஸ்தான் தலைவரான முகம்மது அலி ஜின்னா, பாகிஸ்தான் வந்துவிடும்படி கேட்டும் மறுத்துவிட்டு இந்தியாவிலேயே வளர்ந்து தனது வியாபார சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தினார்.
தனி சாம்ராஜ்யம்
அசீம் பிரேம்ஜி பிறந்த ஆண்டிலேயே அவருடைய தந்தை முகம்மது ஹசீம் பிரேம்ஜி வெஸ்டர்ன் இந்தியா வெஜிடபிள் புராடக்ட்ஸ் (Western India Vegetable Products-WIPRO) என்னும் நிறுவனத்தையும் தொடங்கிவிட்டார். பின்னாளில் தனது மகன் விப்ரோ என்ற பெயரில் தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி இந்தியாவின் 2ஆவது பணக்காரராக ஆவார் என்று தெரியாமலேயே.
சிறந்த தொழில் முனைவோர்
அசீம் பிரேம்ஜி வளர்ந்து ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த கையோடு தந்தை உருவாக்கிய தொழிலை தன் கையில் எடுத்துக்கொண்டு தனது தொலைநோக்கு பார்வை மற்றும் தலைமை பண்பினால் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களுள் ஒன்றாக விப்ரோவை உருவாக்கியதற்காக மிகச் சிறந்த தொழில் முனைவோர்களில் ஒருவராக பிரபல பிசினஸ் வீக் (Business week) இதழ் பட்டம் தந்து பெருமைப்பட்டுக்கொண்டது.
விப்ரோவின் அடையாளம்
விப்ரோ நிறுவனம் ஆரம்பத்தில் சோப்பு, சீயக்காய் பவுடர், காய்கறிகள், வனஸ்பதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், ஷாம்பு, என வீட்டு உபயோகப் பொருட்கள் ஒன்றையும் விடாமல் அனைத்தையும் விற்று வந்தது. தனது குழுமத்தின் அடையாளச் சின்னமாக சூரியகாந்திப் பூவை வைத்தது. அன்றிலிருந்து இன்று வரையிலும் தனது நிறவன தயாரிப்புகள் அனைத்திலும் இந்த சூரியகாந்திப் பூ இருப்பது குறிப்பிடத்தக்கது.
பங்குச் சந்தையில் நுழைவு
1966ஆம் ஆண்டில் தனது 21ஆவது வயதில் தந்தையின் மறைவிற்கு பின் தான் பொறுப்பேற்றவுடன் பழைய யுக்தியை மாற்றியமைக்க தொடங்கினார். அதோடு புதியதாக மென்பொருள் நிறுவனத்தை தொடங்கி இந்தியப் பங்குச் சந்தையின் தொடக்க காலமான 1980ஆம் ஆண்டில் பங்குச் சந்தையிலும் நுழைந்தார். முதலில் அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து சிறிய அளவிலான கணினிகளை தயாரித்து வந்துள்ளார்.
இலவச விற்பனை
இந்த இடத்தில் ஒரு விசயத்தை குறிப்பிடவேண்டியது மிக மிக அவசியமாகும். அசீம் பிரேம்ஜி விப்ரோ மென்பொருள் நிறுவனத்தை 1980ஆம் ஆண்டில் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிட்ட பின்பு அந்த நிறுவனத்தை விளம்பரப்படுத்துவதற்கும், பங்குகளை விற்பதற்கும் மற்ற வீட்டு உபயோகப் பொருட்களை விற்கும் விற்பனைப் பிரதிநிதிகளிடம் விப்ரோ நிறுவன பங்குகளுக்கான பத்திரங்களையும் கொடுத்து விற்பனை செய்வதற்கு உக்கமளித்துள்ளார்.
அன்று 10000 இன்று 740 கோடி சார்
அன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு பங்குகள் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் மனநிலையில் தான் இருந்துள்ளனர். அன்றைக்கு அவர்கள் சுமார் ரூ.10 ஆயிரம் கொடுத்து விப்ரோ நிறுவன பங்குகளை வாங்கி இருந்தார்களென்றால், இன்றைக்கு அதன் மதிப்பு கொஞ்சம் இல்லை சார். மயக்கம் போட்டுவிடாதீர்கள். அதிகமில்லை சுமார் 740 கோடி ரூபாய் தான். கொஞ்சம் மூச்சை இழுத்துவிடுங்கள் சார்.
லாபத்தை கொட்டிக்கொடுத்த பங்குகள்
அன்றைக்கு விப்ரோ நிறுவன பங்குகளை வாங்கியவர்கள் எல்லாம் இன்றைக்கு 740 கோடி ரூபாய்க்கு அதிபதியாக உள்ளனர். வாங்காதவர்கள் எல்லாம், ஐயோ போச்சே போச்சே என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள். இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் தொடக்க காலம் முதல் இன்றைக்கு வரையிலும் மிக மிக மிக அதிக லாபத்தை கொட்டிக்கொடுத்த பங்கு விப்ரோ மட்டுமே. கொடுக்குற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பார்களே, அது இதுதான் சார்.
எனக்கு மகிழ்ச்சி கிடையாது
இன்றைக்கு இந்தியாவின் இரண்டாவது பணக்காரராகவும் உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 36ஆவது இடத்திலும் இருக்கும் அசீம் பிரேம்ஜி, தான் கோடீஸ்வரராக இருப்பதில் தனக்கு எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அதனால் தானோ என்னவோ தன்னுடைய சொத்தில் 25 சதவிகிதத்தை கல்விக்காகவும் சமூக முன்னேற்றத்திற்காகவும் தானமாக வழங்கி உள்ளார்.
கொடை கொடுத்தது 1.45 லட்சம் கோடி ரூபாய்
அசீம் பிரேம்ஜி இதுவரையிலும் சுமார் 1.45 லட்சம் கோடி ரூபாயை தொண்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்திருக்கிறார். இதைப்பார்த்த மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ், தானமளிப்பதில் தனக்கு அசீம் பிரேம்ஜி முன்மாதிரியாக உள்ளார் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறார். பையோகான் நிறுவன தலைவரான கிரன் மஜூம்தார் கொடை வள்ளல் என்று புகழ்ந்து தள்ளினார்.
மகா கஞ்சன் சார்
கொடை கொடுப்பதில் கர்ணனுக்கு வாரிசு என்றாலும், பணத்தை செலவழிப்பதில் ஆற்றில் போட்டாலும் அளந்துதான் போடவேண்டும் என்று என்பதைப்போல், கஞ்சனுக்கு இவர் தான் டியூசன் எடுத்தார் என்று சொல்வதைப்போல் எந்த செலவானலும் கிள்ளித்தான் தருவார். அந்த அளவுக்கு மகா கஞ்சன். கறார் பேர்வழி.
டாடா பைபை
இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையில் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனமாக விப்ரோ வளர்ந்துள்ளது என்றால் அதற்கு அசீம் பிரேம்ஜியின் அசாத்திய திறமை மற்றும் அர்பணிப்போடு கூடிய அசராத உழைப்பும் தான் என்றால் அது பொய்யில்லை. இவ்வளவு பெருமைக்கும் சொந்தக்காரரான இவர் வரும் ஜூலை மாதத்தில் தன்னுடைய பதவியில் இருந்து ஓய்வு பெறப்போகிறார்.
வாரிசுக்கு வழிவிடு
ஜூலை மாத இறுதியில் விப்ரோ நிறுவன தலைவர் பொறுப்பிலிருந்து விலகி தன்னுடைய மூத்த வாரிசான ரிஷத் பிரேம்ஜியை தலைவர் பதவிக்கு முன்மொழிந்துவிட்டு தான் ஓரு சாதாரண இயக்குநராகவே தொடரப்போகிறார்.
சொத்து மதிப்பு ரூ1.60 லட்சம் கோடி
இவ்வளவு பெருமைக்கு சொந்தக் காரராண அசீம் பிரேம்ஜியின் இன்றைய சொத்து மதிப்பு சுமார் ரூ.1.60 லட்சம் கோடியாகும். கடந்த 2013ஆம் ஆண்டில் தனது சொத்தில் பாதியை இந்திய மக்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக தானமாக அளித்துள்ளார்.
இந்திய அரசின் உயரிய விருதுகள்
கடந்த 2005ஆம் ஆண்டில் நமது இந்திய அரச இவருக்கு நாட்டின் உயரிய பத்ம பூசன் விருதை அளித்து கவுரவித்தது. அதேபோல் கடந்த 2011ஆம் ஆண்டில் பத்ம விபூசன் விருதையும் அளித்து கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.