டெல்லி: இந்தியாவின் மத்திய பயணிகள் விமான போக்குவரத்து அமைச்சகம், வரும் ஜூலை முதல் விமானப் பயணிகளிடம், விமான பயணச் சீட்டுக் கட்டணத்துடன் 150 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப் போகிறார்களாம்.
காரணம் CISF - Central Industrial Security Force ஜவான்கள் தானாம். இந்தியாவின் முக்கியமான 61 விமான நிலையங்களை இந்த மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினர் தான் பாதுகாத்து வருகிறார்கள். இந்த வீரர்களுக்கான சம்பளச் சுமையும் மத்திய அரசின் பயணிகள் விமான சேவை அமைச்சகத்தின் பொறுப்பில் தான் இருக்கிறதாம்.
தற்போது மார்ச் 2019 வரை மட்டும் சுமார் 600 கோடி ரூபாய் இந்த மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியாம். இந்த சம்பள பாக்கியைக் கொடுக்க முடியாததால் தான் இப்போது பயணிகள் தலையில் கூடுதல் கட்டணத்தை வசூலித்து சம்பளத்தைக் கொடுக்கப் போகிறார்களாம்.
இதற்கு முன் இந்திய பயணிகளுக்கு பாதுகாப்புக் கட்டணமாக 130 ரூபாய் வசூலித்து வந்தார்கள். ஆனால் இப்போது 20 ரூபாய் உயர்த்தி, 150 ரூபாய் வசூலிக்க இருக்கிறார்கள். அதே போல சர்வதேச பயணிகளுக்கு பாதுகாப்புக் கட்டணமாக 3.25 அமெரிக்க டாலர் வசூலித்து வந்தார்கள். அதை வரும் ஜூலை 01, 2019-ம் தேதியில் இருந்து 4.85 அமெரிக்க டாலராக வசூலிக்கப் போகிறார்கள்.
2001-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த போது தான், இந்த விமான பயணச் சீட்டுக் கட்டணத்தோடு, பாதுகாப்புக் கட்டணமாக 130 ரூபாய் வசூலிக்கத் தொடங்கினார்களாம். அதை இப்போது 2019-ம் ஆண்டில், மீண்டும் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்து தான் 150 ரூபாயாக உயர்த்தி இருக்கிறார்களாம்.
இதற்கு மத்தியில் இடைப்பட்ட 18 வருடங்களில் ஒரு முறை கூட பயணிகளிடம் பாதுகாப்புக் கட்டணத்தை உயர்த்தவே இல்லையாம். இந்த அறிவிப்பு வரும் ஜூலை 01, 2019 காலை 12.01 மணியில் இருந்து புறப்படும் விமானங்களில், விமான பயணச் சீட்டுகளுடன் பாதுகாப்புக் கட்டணமாக 150 ரூபாய் வசூலிக்கத் தொடங்குவார்கள் என மத்திய பயணிகள் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சொல்லி இருக்கிறார்கள்.
ஏற்கனவே இந்திய விமானப் பயணிகளுக்கு போதிய விமானங்கள் இல்லை. அப்படியே விமானங்கள் கிடைத்தாலும், அதிக விலை கொடுத்து பயணச் சீட்டுகளை வாங்க வேண்டி இருக்கிறது. அதோடு இப்போது இந்த கூடுதல் பாதுகாப்புக் கட்டணம் வேறு செலுத்த வேண்டும் என்றால் எப்படி..?