டெல்லி: இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக ஓடும் ரயிலில் பயணிகள் அலுப்பு தெரியாமல் போக மசாஜ் சேவையை அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ரயில்வே மண்டலத்தின் ரத்லாம் பிரிவு இதற்கான பரிந்துரையை முன் வைத்துள்ளது. 39 ரயில்களில் மசாஜ் சேவையை தொடங்கலாம் என்று இந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. மசாஜ் சேவைக்கு ரூ.100 முதல் கட்டணமாக வசூலிக்கலாம் என்றும் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓடும் ரயிலில் பயணிகளுக்கு மசாஜ் சேவை செய்து தரப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ஒப்பந்த முறையில் முதலில் இதனை செயல்படுத்தலாம் என்றும், மசாஜ் சேவை மூலம் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், ரயில்வே உயர் அதிகாரி ராஜேஷ் பஜ்பாய் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனமாக உள்ள இந்தியன் ரயில்வே , தினசரி 4 கோடி பேருக்கு சேவை அளித்து வருகிறது. இந்திய ரயில்வே துறை பயணிகளுக்காக பல புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் புதுப்புது சேவைகளை புகுத்தி வரும் நிலையில், தற்போது ஓடும் ரயிலில் மசாஜ் சேவை செய்துதர உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, ரயில்வேயின் வருமானமும் உயரும், அதேசமயம் பயணிகள் வருகையும் அதிகரிக்கும் என, கருதப்படுகிறது.
முதல்கட்டமாக, மேற்கு ரயில்வே மண்டலத்தின்கீழ் வரும் இந்தூரில் இருந்து புறப்படும் 39 ரயில்களில் இந்த மசாஜ் சேவை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த சேவை ஓடும் ரயிலில் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காகவே, ஒவ்வொரு பெட்டியிலும் 4 முதல் 5 மசாஜ் ஊழியர்கள், உரிய அடையாள அட்டையுடன் பணியமர்த்தப்படுவார்கள். இதன்படி நபர் ஒருவருக்கு தலா ரூ.100 கட்டணத்தில் மசாஜ் செய்யப்படும். பயணிகள் அலுப்பு தெரியாமல் பயணிக்கலாம்.
நம்ம ஊருக்கு எப்ப வரும் பாஸ் என்று நீங்க மைண்ட் வாய்ஸ்ல பேசுறது எங்களுக்கு கேட்குது. விரைவில் வரும்.