டெல்லி: வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் விதத்தில், இஎஸ்ஐ (ESI) பங்களிப்பு தொகையை 6.5 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, வரும் ஜூலை மாதந்தோறும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யும் 1.75 சதவிகிதத்திற்கு பதிலாக இனிமேல் 0.75 சதவிதிமும், நிறுவனங்களின் பங்களிப்பான 4.75 சதவிகிதத்திற்கு பதிலாக 3.25 சதவிகிதம் என மொத்தத்தில் இனி 4 சதவிதிமே பிடித்தம் செய்யப்படும் என்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவால், குறைந்த பட்ச சம்பளம் வாங்குபவர்களுக்கு நிதிச்சுமை குறைவதோடு இனி வரும் காலங்களில் இஎஸ்ஐயில் சிறிய நிறுவனங்களும் தாமாகவே முன்வந்து சந்தாதாரர்களாக இணையும் வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் இஎஸ்ஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
தன்னாட்சி அமைப்பு
சுதந்திர இந்தியாவில் உழைக்கும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கவும், அவர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் எதிர்பாராத மருத்துவச் செலவுகளுக்காகவும் ஓர் அமைப்பு வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் இஎஸ்ஐ அமைப்பாகும். கடந்த 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி தன்னாட்சி நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டதுதான் தொழிலாளர் மாநில காப்பீட்டு நிறுவனம் (Employee State Insurance Corporation-ESIC) என்னும் இஎஸ்ஐ ஆகும்.
அம்பேத்கார் உருவாக்கிய சட்டம்
இஎஸ்ஐ திட்டத்திற்காக முதன்முதலில் திட்டம் வகுத்தவர் சட்டமேதையான அம்பேத்கர் ஆவார். இவர் 1943ஆம் ஆண்டில் இந்திய அரசால் நியமிக்கப்பட்டு அப்போதிருந்த நிறுவனங்களில் வேலை செய்த தொழிலாளர்களின் நிலைமையை ஆய்வு செய்து அவர்களின் மருத்துவச் செலவுகளுக்காக ஒரு அமைப்பு வேண்டும் என்று தயாரித்து அளித்த அறிக்கையின் அடிப்படையில், சுதந்திர இந்தியாவில் 1948ஆம் ஆண்டில் இஎஸ்ஐ சட்டம் இயற்றப்பட்டது.
மருத்துவச் செலவுகள்
இஎஸ்ஐ என்பது மத்திய தொழிலாளர் நலத்துறையின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். இதில் தொழிலாளர்களின் நலனே முக்கியமாகும். இஎஸ்ஐ அமைப்பில் தற்போதைய நிலவரப்படி 3.6 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இதன்படி இதன் உறுப்பினர்களும், அவர்களுடைய குடும்ப அங்கத்தினர்களும் இஎஸ்ஐ மருத்துவமனைகளிலும், பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளிலும் தங்களின் அத்தியாவசிய மருத்துவச் செலவுகளையும், மேற்கொள்ளலாம்.
சம்பளம் 21ஆயிரம்
இஎஸ்ஐ சட்டதிட்டங்களின் படி இதன் சந்தாதாரர்காளக வேண்டுமெனில் ஒரு நிறுவனம் குறைந்த பட்சமாக 10 உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டியது கட்டாயமாகம். அதோடு அதிகபட்ச சம்பளமாக ரூ.21ஆயிரம் இருக்கவேண்டும். அதற்கு மேற்பட்டு இருந்தால் அவர்கள் இஎஸ்ஐயில் சந்தாதாரராக முடியாது. இஎஸ்ஐ நிறுவனப்பட்டதில் இருந்து இஎஸ்ஐ பங்களிப்பு என்பது 1.75 சதவிகிதம், நிறுவனங்களின் பங்களிப்பாக 4.75 சதவிகிதமும் இருந்தது. இந்த பங்களிப்பில் இருந்தே சந்தாதாரர்களின் அனைத்து அத்தியாவசிய மருத்துவச் செலவுகள் மற்றும் கர்ப்பகால செலவுகள், மாற்றுத் திறனாளிகளுக்கான செலவுகள் என அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
4 சதவிகிதமாக குறைப்பு
இஎஸ்ஐ அமைப்பு தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரையிலும் சுமார் 67 ஆண்டகளாக பின்பற்றப்பட்டு வந்த தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பான 6.5 சதவிகிதம் அதாவது தொழிலாளர்களின் 1.75 சதவிகிதம் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பான 4.75 சதவிகிதம் என 6.5 சதவிகித பங்களிப்பை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் 4 சதவிகிதமாக குறைத்துள்ளது. அதாவது தொழிலாளர்களின் பங்களிப்பாக 0.75 சதவிகிதம் மற்றும் நிறுவனங்களின் பங்காக 3.25 சதவிகிதம் என மொத்தத்தில் 4 சதவிகிதம் மட்டுமே பிடித்தம் செய்யவேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் விரிவாக்கம்
மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்கவும், தொழிலாளர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கிவிட்டார். ஆட்சியில் அமர்ந்த அன்றே முதலில் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் நலனை காக்கும் வகையில், அவர்களுக்கு அளித்து வந்த 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை நாடு முழுவதும் விரிவுபடுத்த உத்தரவிட்டார்.
கூலித் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்
அடுத்ததாக தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான திட்டத்திலும் கையெழுத்திட்டார். இத்திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள உள்ள அனைவரும் உறுப்பினராக சேரலாம். இதற்காக இவர்கள் தினசரி 2 ரூபாய் செலுத்தினால் போதும். 60 வயது எட்டியதும் இவர்களுக்கு மாதம் தோறும் 3 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 3 கோடி பேர் பயனடைவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நிதிச்சுமையை குறைக்க முடிவு
தற்போது நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் நலனைக் காக்கவும், அவரிகளின் நிதிச்சுமையை குறைக்கவும் மத்திய அரசு முன்வந்துள்ளது. இதற்காக தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து பிரதி மாதம் செலுத்தும் இஎஸ்ஐ பங்களிப்பை 6.5 சதவிகிதத்தை வரும் ஜூலையில் இருந்து 4 சதவிகிதமாக குறைக்க மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் குறுக்கீடு
கடந்த பிப்ரவரி மாதத்திலேயே இஎஸ்ஐ அமைப்பு தொழிலாளர்கள் செலுத்தும் இஎஸ்ஐ பங்களிப்பை 6.5 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைக்க பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கம் பொருட்டு இஎஸ்ஐ பங்களிப்பை குறைக்க முன்வந்தது. இடையில் லோக்சபா தேர்தல் குறுக்கிட்டாதால் இஎஸ்ஐ பங்களிப்பை குறைக்க முடியாமல் போனது.
புதிய ஆட்சி புதிய பங்களிப்பு
தற்போது புதிய ஆட்சி அமர்ந்து விட்டதால், உடனடியாக இஎஸ்ஐ பங்களிப்பு சதவிகிதத்தை 6.5 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், கடந்த செவ்வாயன்று சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்க செல்லும் முன்பாக இஎஸ்ஐ பங்களிப்பை குறைப்பதற்கான அனுமதியை அளித்துவிட்டு சென்றார்.
ஊழியர்களின் பங்களிப்பு 0.75 சதவிகிதம்
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டதை அடுத்து வரும் ஜூலை முதல் இஎஸ்ஐ சந்தாதாரர்கள் பிரதி மாதம் செலுத்தும் பங்களிப்பானது 6.5 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது தொழிலாளர்கள் செலுத்தும் 1.75 சதவிகிதத்திற்கு பதிலாக இனிமேல் 0.75 சதவிகிதமும், நிறுவனங்கள் செலுத்தும் பங்களிப்பான 4.75 சதவிகிதத்திற்கு பதிலாக இனிமேல் 3.25 சதவிகிதமும் செலுத்தினால் போதுமானது.
9ஆயிரம் கோடி மிச்சம்
மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவால் நாடு முழுவதும் உள்ள 13 லட்சம் தொழில் நிறுவனங்கள் பயனடையும். பிரதி மாதமும் செலுத்தும் இஎஸ்ஐ சந்தாவில் 40 சதவிகிதம் வரை சுமை குறையும். அதாவது தொழில் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலும் பணம் மிச்சமாகும். அதே போல் தொழிலாளர்கள் இது வரையிலும் செலுத்தி வந்த பங்களிப்பு சுமார் 85 சதவிகிதம் வரையிலும் குறையும். அதோடு கூடுதலாக லட்சக்கணக்கான தொழில் நிறுவனங்களும் தொழிலாளர்களும் புதிதாக இஎஸ்ஐ சந்தாதாரராக சேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
13 லட்சம் நிறுவனங்கள்
இது குறித்து விளக்கமளித்த இஎஸ்ஐ உயரதிகாரிகள், இஎஸ்ஐ சந்தா குறைக்கப்பட்டதால் சுமார் 13 லட்சம் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 8 ஆயிரம் கோடி முதல் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலும் மிச்சமாகும். கடந்த 2018-19ஆம் ஆண்டில் நிறுவனங்கள் செலுத்திய இஎஸ்ஐ சந்தா சுமார் 22 ஆயிரத்து 279 கோடி ரூபாயாகும். இனிமேல் இந்த நிதிச்சுமை கணிசமாக குறையும் வாய்ப்புள்ளது, என்று தெரிவித்தனர்.
குறைந்த பட்சம் 10 ஊழியர்கள்
தற்போது இஎஸ்ஐயில் சந்தாதாரராக ஆவதற்கு உச்சவரம்பு ஊதியமாக 21 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 10 ஊழியர்களோ அதற்கு மேற்பட்ட ஊழியர்களை கொண்டுள்ள அனைத்து நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், திரையரங்குகள், ஹோட்டல்கள், போக்குவரத்து நிறுவனங்கள் என அனைத்தும் இஎஸ்ஐயில் உறுப்பினராகலாம். முன்னதாக 20 ஊழியர்களுக்கு அதிகமாக இருந்தால் தான் இஎஸ்ஐ சந்தாதாரராக ஆக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
1952ஆம் ஆண்டில் 300 ரூபாய்
இஎஸ்ஐ தொடங்கப்பட்ட 1952ஆம் ஆண்டில் இஎஸ்ஐயில் சந்தாதாரராக அதிகபட்ச சம்பளமாக 300 ரூபாய் என்றிருந்தது. பின்னர் படிப்படியாக அதிகரித்து 2001ஆம் ஆண்டில் 5000 ரூபாயாகவும், 2001ஆம் அண்டு ஜூன் முதல் 2014ஆம் ஆண்டு ஆகஸ்டு வரையில் 6500 ரூபாயாகவும் இருந்தது. அதன் பின்பு 2014ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 15000 ரூபாயாக உயர்ந்தது. பின்னர் விலைவாசி உயர்வு, ஊழியர்களின் குறைந்த பட்ச சம்பளம் என மாற்றம் ஏற்பட்டதால் இஎஸ்ஐ பங்களிப்பு தொகையையும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டது. இதனடிப்படையிலேயே தற்போது இஎஸ்ஐயில் சந்தாதாரராக அதிகபட்ச ஊதியம் 21000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பேறுகால சிகிச்சை
இஎஸ்ஐயில் சந்தாதாரராக இருப்பவர்கள், அவர்களை சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மாற்றுத் திறனாளிகள் உட்பட, இஎஸ்ஐ கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து மருத்துவனைகளிலும், இஎஸ்ஐயால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளிலும் மருத்துவ சிகிச்கை, அறுவை சிகிச்சை, பேறுகால சிகிச்சை என அனைத்து விதமான சிகிச்சைகளையும் எடுத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.