லண்டன்: இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கும் 12ஆவது உலகக் கோப்பை (World cup) கிரிக்கெட் தொடரில், கிரிக்கெட் வெறியர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் கிரிக்கெட் போட்டிக்காண ஒரு டிக்கெட்டின் விலை ரூ.62 ஆயிரத்தை தொட்டுள்ளது.
இப்போட்டியைக் காண வேண்டி கடந்த மே மாதத்திலேயே உலகெங்கும் இருந்தும் கிரிக்கெட் ரசிகர்களும் பார்வையாளர்களும் இங்கிலாந்துக்கு படையெடுத்து வந்துவிட்டார்கள். இந்தியாவிலிருந்து மட்டும் சுமார் 77 ஆயிரம் பேர் வரை வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இவ்விரு நாடுகளும் மோதும் போட்டிக்கான விளம்பர வருவாயும் அதிக அளவில் இருக்கும் என்று தெரிகிறது.
நிலைமை இப்படி இருக்க நாளைய தினம் போட்டி நடக்குமா இல்லையா என்பதே பெருத்த சந்தேகமாக உள்ளது. காரணம் தினமும் அங்கே மழை பெய்து வருவதால் தினசரி நடக்கும் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 13ஆம் தேதியன்று இந்திய நியுஸிலாந்து நாடுகளுக்கு இடையில் நடைபெறவிருந்த போட்டி பலத்த மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டு இரு நாடுகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது கவனிக்கத்தக்கது
மயான அமைதி
சாதாரணமாகவே, இந்தியாவும் பாகிஸ்தானும் கிரிக்கெட் விளையாட்டில் மோதிக் கொண்டால், அது எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதிக்கொள்வது போலத்தான் இருக்கும். அன்றைக்கு இரு நாடுகளிலும் பெரும்பாலான அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்படும். அதோ போல் தெருக்களிலும் ஆள் அரவம் இருக்காது. நாடு முழுவதும் உள்ள அனைத்து சாலைகளும் எந்தவித சப்தமும் இல்லாமல் ஏதோ சுனாமி தாக்கியது போல் அமைதியாக இருக்கும்.
நாடே திருவிழா கொண்டாட்டம் தான்
கிரிக்கெட் போட்டியில் ஏதாவரு ஒரு அணி வெற்றிபெற்றால் அந்த நாட்டில் அன்றைக்கு தீபாவளிதான். நாடெங்கும் பட்டாசு வெடித்து அமர்க்களப்படுத்துவார்கள். அதுவும் உலகக் கோப்பை கிரிக்கெட் என்றால் கேட்கவே வேண்டாம். ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே அதைப் பற்றியே பேச்சு இருந்து கொண்டிருக்கும். அலுவலகத்திற்கு சென்றால் வேலையே ஓடாது. எப்போது கிரிக்கெட் மேட்ச் நடைபெறும் நாள் வரும் என்று நகத்தைக் கடித்துக்கொண்டு காத்திருப்போம்.
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
கடந்த உலகக் கோப்பை போட்டிகளில் இரு அணிகளின் செயல்பாடு எப்படி இருந்தது. இந்தியா எப்படி பாகிஸ்தானை துவம்சம் செய்தது, 1992ஆம் ஆண்டில் இந்திய விக்கெட் கீப்பர் மோரோவை ஜாவித் மியான்டட் கேலி செய்தது, 1996ஆம் ஆண்டில் வெங்கடேஷ் பிரசாத்தை பார்த்து அமீர் ஷோகைல் கிண்டல் செய்தது, பதிலுக்கு அவர் அடுத்த பந்திலேயே அமீர் ஷோகைலை க்ளீன் போல்ட் ஆக்கியது, 2003ஆம் ஆண்டில் சோயப் அக்தர் வீசிய முதல் ஒவரிலேயே சச்சின் டெண்டுல்கர் சிக்ஸர் விளாசியது, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் சேவக் அதிரடி காட்டியது, இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது என திரும்ப திரும்ப அதைப் பற்றியே பேச்சு இருக்கும்.
வருமானம் கொட்டும்
அதேபோலத்தான் இரு அணிகளும் விளையாடும் போட்டிக்கான விளம்பர வருமானமும் ஒளிபரப்பு உரிமமும் கோடிகளைத் தொடும். இவ்விரு அணிகளும் விளையாடவில்லை என்றால் ஐசிசி நிர்வாகத்திற்கு நிச்சயமாக வருமானம் என்பது சொற்ப அளவிலேயே இருக்கும். இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டால் தான் அவர்களுக்கு அதிக அளவில் வருமானம் வரும். இதை சரியாக கணித்துக்கொண்ட ஐசிசி நிர்வாகமும் ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் இந்தியா பாகிஸ்தான் அணிகளை மோத வைத்து கல்லா கட்டுகிறது.
இந்திய ராணுவ வீரர்கள் பலி
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 12ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இது தான் நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா என்ற இடத்தில் ராணுவ வீரர்களுக்கு எதிரான தீவிரவாத தாக்குதலில் 41 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாத முகாம்களை தாக்கி துவம்சம் செய்தது. அப்போது எதிர்பாராத விதமாக இந்தியாவின் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியது, அதைத் தொடர்ந்து இந்தியாவின் பகிரங்க மிரட்டலுக்கு பயந்து அவரை விடுவித்தது என்ற பல விஷயங்கள் நடந்துமுடிந்துள்ளதால், இந்தியா பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டிக்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாகிஸ்தானின் கோமாளித்தனம்
போதாக்குறைக்கு பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றும் விதமாக, அங்குள்ள ஒருவருக்கு அபிநந்தனைப்போல் மீசையை வைத்து அவரிடம் கேள்வி கேட்பதாக ஒரு வீடியோவை இணையதளத்தில் உலாவ விட்டுள்ளார்கள். அதில் அந்த நபரிடம் ஒருவர், ஜூன் 16ஆம் தேதி நடைபெறம் போட்டியில் இந்தியாவின் சார்பாக யார் யார் விளையாடுவார்கள் என்று கேட்கிறார். அதற்கு அந்த மீசை நபர், அது ரகசியம், அதை என்னால் கூற முடியாது என்று பதிலளிக்கிறார். உடனே இந்தப் பக்கம் உள்ள நபர், சரி சரி தேநீர் எப்படி உள்ளது என்று கேட்க, மீசை நபர் ஃபெண்டாஸ்டிக் என்று சொல்லிவிட்டு நடக்கிறார். தற்போது இந்த வீடியோ இந்திய ரசிகர்களை ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
உணர்ச்சி பூர்வமான விளையாட்டு
இரு அணிகள் மோதிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அனைத்து போட்டியிலும் இந்தியாவே வெற்றி வாகை சூடியதால், இந்த முறை எப்படியாவது அதை தகர்க்க வேண்டும் என்று பாகிஸ்தானம் கங்கனம் கட்டிக்கொண்டு காத்திருக்கிறது. அதேபோல் இரு நாட்டு ரசிகர்களும் பார்வையாளர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இரு நாட்டு ரசிகர்களும் போட்டியை விளையாடு மனப்பான்மையுடன் பார்க்காமல் இரு நாடுகளுக்கு இடையில் நடக்கும் போராகவே உணர்ச்சி பூர்வமாக பார்க்கிறார்கள். இதன் காரணமாகவே இந்திய ரசிகர்கள் அனைவருமே, இந்தியா மற்ற அனைத்து அணிகளிடமும் தோற்றுப்போனால் கூட எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் எங்கள் மண்ணின் பரம வைரியான பாகிஸ்தானிடம் மட்டும் தோல்வி என்ற வார்த்தையே ஆகாது என்று மீசையை முறுக்குகிறார்கள்.
அடிவயிற்றில் சுரக்கும் அட்ரினலின்
இரு நாடுகளுக்கு இடையில் நடைபெறவிருக்கும் போட்டி நாள் நெருங்க நெருங்க ரசிகர்களுக்கு அடிவயிற்றில் அட்ரினலின் சுரக்க ஆரம்பித்துவிடும். இதயத்துடிப்பு அதிகரிக்க ஆரம்பித்துவிடும். இது இப்படி இருக்கையில் ஜூன் 16ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்தியா பாகிஸ்தான நாடுகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிக்கான ஒரு டிக்கெட்டின் விலையோ 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஏற்கனவே டிக்கெட்டை மலிவு விலையில் வாங்கியவர்கள் அனைவரும் கள்ள மார்கெட்டில் தற்போது 20 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்றுத் தள்ளுகிறார்கள். பிளாட்டினம் பிரிவில் உள்ள டிக்கெட்டுகள் அதிக பட்சமாக 62 ஆயிரத்து 610 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
77 ஆயிரம் இந்தியர்கள்
இப்போட்டியைக் காண மட்டுமே உலகம் முழுவதும் இருந்தும் ரசிகர்களும் பார்வையாளர்களும் இங்கிலாந்துக்கு படையெடுத்துள்ளார்கள். அதிலும் இந்தியாவிலிருந்து மட்டுமே சுமார் 77 ஆயிரம் பேர் முன்கூட்டியே விமான டிக்கெட் எடுத்து லண்டனுக்க பறந்து சென்றுவிட்டார்கள். இதன் காரணமாகவே இரு நாடுகளும் மோதும் போட்டிக்கான டிக்கெட் விலை அநியாயத்திற்கு ஏறிக்கிடக்கிறது.
மழையால் போட்டி ரத்து
நிலைமை இப்படி இருக்க நாளை ஜூன் 16ஆம் தேதியன்னு போட்டி நடக்குமா இல்லையா என்பதே பெருத்த சந்தேகமாக உள்ளது. காரணம் தினமும் அங்கே மழை பெய்து வருவதால் தினசரி நடக்கும் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 13ஆம் தேதியன்று இந்திய நியுஸிலாந்து நாடுகளுக்கு இடையில் நடைபெறவிருந்த போட்டி பலத்த மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டு இரு நாடுகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன.
கொட்டும் விளம்பர வருவாய்
தற்போது அதே நிலைமை இந்தியா பாகிஸ்தான் நாடுகள் மோதும் போட்டியன்றும் ஏற்பட்டால் இரு நாட்டு ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமாக இருக்கக்கூடும். இரு அணிகளும் மோதவிருக்கம் ஓல்டு ட்ராஃபோர்டு மைதானம் அமைந்துள்ள மான்செஸ்டர் நகரத்தில் தினசரி மழைபெய்து வருகிறது. அதேபோல், ஜூன் 16ஆம் தேதியன்றும் 55 சதவிகிதம் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. இந்த இரு நாடுகளின் போட்டிக்கான விளம்பரதாரர்களாக கோகா-கோலா, உபேர். ஒன்ப்ளஸ் மற்றும் எம்ஆர்ஃஎப் போன்ற நிறுவனங்கள் உள்ளன.
இந்தியாவை நம்பித்தான் போட்டியே
ஒரு வேளை இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுவிட்டால். மேற்கண்ட விளம்பரதாரர்களுக்கு சுமார் 137.5 கோடி ரூபாய் வரையிலும் வருவாய் இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு வர்த்தக ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கும் பலத்த அடி கிடைக்கும் என்று தெரிகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட்டைப் பொறுத்த வரையிலும் ஒட்டு மொத்தமாக கிடைக்கும் விளம்பர வருவாயில் சுமார் 50 சதவிகிதம் வரையில் இந்தியா பாகிஸ்தான் நாடுகள் மோதும் போட்டியிலேயே கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் வேண்டுதல்
இது குறித்து கருத்து தெரிவித்த ஐசிசியின் தலைமை நிர்வாகியான தேவ் ரிச்சர்ட்சன், போட்டி நடைபெறும் அனைத்து நாட்களுக்கும் ரிசர்வ் நாள் வைத்திருக்கிறோம், ஆனால் அன்றைக்கும் மழை வந்து குறுக்கிடுகிறதே என்ன செய்வது என்று அங்கலாய்க்கிறார். எப்படி இருந்தாலும் ஜூன் 16ஆம் தேதியன்று இங்கிலாந்து முழுவதும் மழை பெய்து கொட்டோ கொட்டு என்று கொட்டித் தீர்த்தாலும் இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெறவிருக்கும் ஓல்டு ட்ராஃபோர்டு மைதானம் அமைந்திருக்கும் மான்செஸ்டர் நகரத்தில் மட்டும் வெயில் அடியோ அடி என்று அடிக்கவேண்டும் என்று இந்திய ரசிகர்கள் வேண்டாத தெய்வமில்லை.