டெல்லி: இந்தியாவின் தகவல் தொழில் நுட்பத் துறையில், புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள் (பணிக்கு எடுக்கப்பட்டவர்கள்) எண்ணிக்கை கடந்த மே 2019-ல் 11 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக நாக்ரி ஜாப் ச்பீக் இண்டெக்ஸ் (Naukri Job Speak Index) சொல்கிறது. கடந்த மே 2019-ம் ஆண்டில் 2,346 பேர் புதிதாக இந்திய ஐடி துறையில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்களாம். ஆனால் கடந்த மே 2018-ம் ஆண்டில் 2,106 பேர் மட்டுமே புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தார்களாம்.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை மட்டுமின்றி, பிசினஸ் பிராசஸ் அவுட் சோர்ஸிங் என்று சொல்லப்படும் பிபிஓ (BPO) துறையிலும் மே 2018-வை விட மே 2019-ல் 11 சதவிகிதம் அதிக நபர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதே போல கல்வித் துறையிலும் மே 2018-வை விட மே 2019-ல் 11 சதவிகிதம் பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். கல்வித் துறையைத் தொடர்ந்து கன்ஸ்யூமர் கூட்ஸ் துறையில் 4 சதவிகிதம் பேர் மே 2018-வை விட மே 2019-ம் ஆண்டில் பணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்களாம்.
ஆனால் இந்தியாவையே தூக்கி நிறுத்த வேண்டிய நிதி மற்றும் வங்கிகள் துறையில் பணியில் அமர்த்தப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவே இல்லை. ஆக இந்த நிதி மற்றும் வங்கிகள் சார்ந்த துறைகள் ஒட்டு மொத்தமாகவே ஒரு தேக்கத்தில் இருப்பதை பகிரங்கமாகப் பார்க்க முடிகிறது. இந்தியாவின் ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைல் துறை சார்ந்த துணைத் துறைகள், ஃபார்மாசியூட்டிகள் துறைகளில் புதிதாக பணிக்கு ஆள் எடுக்கும் வேலைகளில் பெரிய சுணக்கத்தைப் பார்க்கிறார்களாம்.
ஆட்டோமொபைல் மற்றும் அதனைச் சார்ந்த துணைத் துறைகளில் கடந்த மே 2018-வை விட மே 2019-ல் புதிதாக பணிக்கு எடுக்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை 16 சதவிகிதம் சரிந்திருக்கிறதாம். அதே போல ஃபார்மாசியூட்டிக்கள் துறையில் 6 சதவிகித புது ஊழியர்களின் எண்ணிக்கை சரிந்திருக்கிறதாம்.
அனுபவரீதியாகப் பார்த்தால் 0 - 3 வருட பணி அனுபவமுள்ளவர்களை பணிக்கு அமர்த்தப்படுபவர்கள் எண்ணிக்கை 13 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. அதே போல 4 - 7 வருட பணி அனுபவம் கொண்டவர்களை பணிக்கு அமர்த்துவதில் கூட 14 சதவிகிதம் பேர் கூடுதலாக அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். 8 - 12 வருட அனுபவம் கொண்டவர்களை வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை கூட 8 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதாம்.
ஆனால் 13 வருடத்துக்கு மேல் அனுபவம் கொண்ட மூத்த நிர்வாக ஊழியர்கள் மற்றும் தலைவர் பொறுப்புகளில் பணிக்கு அமர்த்தப்படுவர்களின் எண்ணிக்கை அதே நிலையில் தான் இருக்கிறதாம்.