சூரிய பகவானின் கோரப் பார்வையில் தந்தூரி சிக்கனாய் தவிப்பது தமிழர்கள் மட்டும் தான் என்பது நம் எண்ணமாக இருக்கிறது. நாளை காலை அத்தியாவசிய வேலைகளைச் செய்து கொள்ள இரண்டு குடம் தண்ணீர் (Water) கிடைத்துவிடாதா..? நாளை குடிக்க சமைக்க ஒரு 20 லிட்டர் குடிநீர் கிடைத்துவிடாதா என மொத்த தமிழகமும் ஒற்றை சிந்தனையில் ஏங்கிக் கொண்டிருக்கிறது.
ஐயோ, தவற விட்டுட்டோமே, மழை தண்ணிய சேமிக்காம விட்டுட்டோமே..? என மக்களும் காது பட புலம்பத் தொடங்கி இருக்கிறார்கள். இன்று சென்னையில் மழை பெய்து கொஞ்சம் மக்கள் மனதில் ஆயிரம் ஐஸ் கட்டி கொட்டி இருக்கிறது இயற்கை. இங்கு கண் குளிர மனம் குளிர மழையைப் பார்க்கும் அதே கண்களால், கொத்து கொத்தாக தண்ணீர் இல்லாமல் செத்துப் போகும் உயிர்களையும் பார்க்க வேண்டி இருக்கிறது. அதுவும் இதே இந்திய தாய் திருநாட்டில் பார்க்க வேண்டி இருக்கிறது.
நம் தமிழகத்தை விட கொ(க)டுமையான வெயிலால் பாதிக்கப்பட்டு 10 லிட்டர் தண்ணீருக்கு 15 கிலோமீட்டருக்கு மேல் நடக்கும் ராஜஸ்தானில் இந்த கொடுமை நடந்திருக்கிறது. ரேஷன் கார்டில் சேர்க்கும் அளவுக்கு செல்லமாக வளர்த்த ஆடு மாடுகளுக்கு எல்லாம் ஒரு குடம் தண்ணீர் கொடுக்க முடியாமல் உரு குலைந்து செத்து விழும் தங்கள் செல்லப் பிள்ளைகளுக்கு கண்களில் கண்ணீர் வராமல் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார்கள் ராஜஸ்தானிகள். காரணம் தண்ணீர் பஞ்சம். இப்படி இந்தியாவின் பல மாநிலங்களிலும் இருக்கும் தண்ணீர் பஞ்சத்தை அப்பட்டமாக வலியோடு காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வந்த வண்ணம் இருக்கின்றன. புகைப்படங்களுக்கு நன்றி இந்தியா டுடே.
புகைப்படக்காரர் மனீஷ் அக்னிஹோத்ரி
உத்திரப் பிரதேசத்தின் புந்தேல்கண்ட் பகுதியில் ஓடும் பண்டா ஆற்றில் தண்ணீரே இல்லை. வெள்ளம் பெருக்கெடுத்து ஓட வேண்டிய ஆற்றில் ஒரு சில சிறு தொட்டிகளில் தண்ணீர் தேங்கி நிர்பது போல கொஞ்சமாக தேங்கி நிற்கிறது. அந்த மண்ணோடு மண்னாக இருக்கும் தண்ணீர் கிடைத்தால் கூடப் பரவாயில்லை என ஒரு சிறுவன் தண்ணீரைக் குடிக்கிறான்.
புகைப்படக்காரர் சதீஷ்
தமிழகத்துக்கு காவிரி தராத கர்நாடகத்திலேயே தண்ணீர் பஞ்சம். கர்நாடகத்தின் கொப்பல் மாவட்டத்தில் முதலபூர் அணைக்கட்டு வறண்டு, பூமி முழுவதும் வறட்சியில் பிளந்து காணப்படுவதைப் பார்க்கும் போது காவிரி கேட்க கஷ்டமாகத் தான் இருக்கிறது. கர்நாடகத்தில் 30-க்கு 23 மாவட்டங்களில் வறட்சி என்றால்... தமிழகத்தில் 33-க்கு 33 மாவட்டமும் வறட்சியில் தான் துடிக்கிறதே பிறகு எப்படி காவிரியை விட முடியும்.
புகைப்படக்காரர் மந்தர் தியோதர்
மகாராஷ்டிரத்தின் நாசிக் மாவட்டத்தின் த்ரம்பகேஷ்வர் பகுதியில் கால்வாயில் தேங்கி இருக்கும் கொஞ்ச நெஞ்ச நீரையும் தங்கள் விவசாயத்துக்காக நூற்றுக்கணக்கான மோட்டார் வைத்து பைப் போட்டு எடுக்கும் காட்சி, நாம் இயற்கையை சீரழித்த கதையைக் கண் முன் காட்டி மறைகிறது.
புகைப்படக்காரர் மந்தர் தியோதர்
மகாராஷ்டிர மாநிலத்தின் பால்கார் மாவட்டத்தில், மொகாடா டவுனில் வற்றிய கிணற்றில் இருக்கும் மிச்ச சொச்ச நிரை கூட அத்தனை அடி ஆழம் பார்க்காமல் இறங்கி தண்ணீர் எடுக்கிறார்கள் மொகாடா டவுன் மக்கள்.
புகைப்படக்காரர் புருஷோத்தம் திவாகர்
காலை நான்கு மணி முதல் அந்த 15,000 லிட்டர் தண்ணீர் டேங்கருக்காக காத்திருக்க வேண்டும். அவனும் ஆடி அசைந்து காலை 10.45-க்கு வருவான். வரும் அந்த வாகனம் தான் அன்றைக்கு என் வீட்டில் அடுப்பேத்தும் சாமி. அவன் கொடுக்கும் அந்த இரண்டு குடம் தண்ணீர் தான் இறைவன் கொடுத்த வரம். இதை எடுத்துக்கிட்டு திரும்ப 6 கிலோமீட்டர் நடக்கணுமே..!
புகைப்படக்காரர் புருஷோத்தம் திவாகர்
என் புள்ளயா அது. எனக்கு சோத்துக்கு வழி இல்லன்னா கூட அவனுக்கு பருத்திக் கொட்டை புண்ணாக்கு எல்லாம் போட்ருவேணுங்க, இப்ப இவனுக்கு தண்ணி வெக்க முடியல, என்னாலயும் தண்ணிய தேடிக் கொண்டு வர முடியலிங்க. குழந்த தாகம் தாங்காம செத்துருச்சுய்யா, செத்துருச்ச்ய்யா, என் குழந்தை மாதிரி பல பேரோட குழந்தைங்க தண்ணி இல்லாம செத்துருச்சுங்கய்யா...!
புகைப்படக்காரர் புருஷோத்தம் திவாகர்
ஐயா எங்க வீட்டு குலசாமி மாதிரி எங்க ஊர்ல பல பேரோட குலசாமி அங்க கருவாடா வண்டீல போகுதுய்யா. எங்களுக்கு இத்தனை நாளா பால் கொடுத்த தாயம்மாவுக்கு தண்ணி கொடுக்க முடியாம செத்துப்போச்சுய்யா, செத்துப்போச்சுய்யா. மாட்டுக்கு ஐந்தறிவு, மனிதனுக்கு ஆறறிவுன்ன்னு சொல்றோம். அந்த வாயில்லா ஜூவன காப்பாத்த வக்கில்ல, நாம எல்லாம் வாழ்ந்து என்னத்த சாதிக்கப் போறோம். எங்க குலசாமி செத்து வண்டீல கருவாடா போற மாதிரி நாளக்கி நம்ம குழந்தைங்களையும் இப்படி வண்டி ஏத்த அனுப்பணுமாயா..? இனியாவது தண்ணி பிரச்னைய பெருசா பாருங்கைய்யா...!
புகைப்படக்காரர் ஜெய்ஷன் ஜி
நாம் சென்னையில் எப்படி தவிக்கிறோம் என்பதற்கு ஒரு மரண சாட்சியாக தன் உயிரை விட்டிருக்கிறது மீன்கள். சென்னையின் நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கத்தில் மீன்கள் உயிர் வாழ கூட குறைந்தபட்ச நீர் இல்லாமல் தவித்து இறந்து கிடந்த மீன்கள் நம்மை பார்த்து சிரிக்கின்றன. என்னவென்று கேட்டால் "இன்னக்கி தண்ணி இல்லாம நாங்க உசுரோட இருக்க போராடி செத்துட்டோம், அதே மாதிரி நாளைக்கி நீங்களும், உன் புள்ளங்களும் இதே தண்ணி இல்லாம தவிச்சு சாவீங்கடா... இனியாவது முழிச்சுக்குங்க. இயற்கைய மதிங்க" என மரண சாட்சியாக மிரட்டுகின்றன, அந்த மீன்களின் கண்கள்.