டெல்லி: 2019-20ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் நிறைவடைந்துவிட்ட நிலையில், இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தயாரித்தது அளித்தது யார் என்பது நாட்டிலுள்ள பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. அவர்தான் தற்போதைய ஸ்டாண்டர்டு சார்டர்டு வங்கியின் நிறுவனரான ஜேம்ஸ் வில்சன் (James Wilson) என்பவர்தான் அந்த பெருமைக்கு சொந்தக்காரர்.
1857ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகத்தை அடுத்து கடும் நிதிச்சிக்கலில் இருந்த பிரிட்டிஷ் இந்தியாவில் நிதிச் சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்காக 1859ஆம் ஆண்டு இந்தியா வந்த ஜேம்ஸ் ஒரு ஆண்டு தீவிரமாக அலசி ஆராய்ந்து 1860ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து பெருமை தேடிக் கொண்டார்.
பட்ஜெட்…! இந்த ஒற்றை ஆவணத்திற்காக நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் ஆவலோடு காத்திருக்கிறோம். காரணம், இதை வைத்துதான் நம்முடைய வீட்டு பட்ஜெட்டையும் தயாரித்து அதற்கேற்ப நிதித் திட்டத்தை செயல்படுத்திக் கொள்ள முடியும். இந்த நேரத்தில் இந்தியாவின் முதல் பட்ஜெட் யாரால் எப்போது தயாரிக்கப்பட்டது என்பது பலரும் அறியாதது.
ஆண்டு தோறும் பட்ஜெட் தயாரிக்கும் பணி என்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளும், கடந்த நிதியாண்டுக்கான, நடப்பு நிதியாண்டுக்கான, திருத்தப்பட்ட நடப்பு நிதியாண்டுக்கான மற்றும் அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் என நான்கு வகையான கணக்குகளை தாக்கல் செய்வது மரபாகும்.
இந்த நான்கு வகையான கணக்குகளை உள்ளடக்கிய பட்ஜெட்டை இந்தியாவில் முதன் முதலில் எப்பொழுது, யாரால், எப்படி தாக்கல் செய்யப்பட்டது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் ஆவலாக இருக்கிறீர்களா. அப்படியானால் மேற்கொண்டு படிக்க ஆரம்பியுங்கள்.
ஜேம்ஸ் வில்சன்…! இவர்தான் பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து பெருமை தேடிக்கொண்டவர். இவர் தான் உலகின் மிகப்பெரிய வங்கியான ஸ்டாண்டர்டு சார்டர்டு வங்கியை நிறுவியவர். அதோடு புகழ்பெற்ற 'The Economist’ என்கிற நிதி மற்றும் பொருளாதாரம் சார்ந்த இதழின் நிறுவனரும் ஆவார். ஆரம்பத்தில் இவர் ஒரு சாதாரண தொப்பி தயாரித்து விற்கும் வியாபாரி தான்.
பின்னர் படிப்படியாக வளர்ந்து நிதி மேலாண்மை மற்றும் பொருளாதாரத்தைப் பற்றி தெளிவாக அறிந்து கொண்டார். கடைசியில் பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினராக சேர்ந்து, பிரிட்டனின் கஜானாவையே நிர்வகிக்கும் நிதிச் செயலாளராகவும், வர்த்தக வாரியத்தின் தலைவராகவும் ஆனார். (அடப்பாவிங்களா, அப்போ வாரியத் தலைவர் பதவி கூட இவர் கொண்டு வந்தது தானா). அப்படியே பிரிட்டிஷ் இந்தியாவில் அப்போது வைஸ்ராயாக இருந்த லார்ட் கன்னிங் பிரபுவின் கவுன்சில் குழுவில் நிதித் துறையை கவனிக்கும் பொறுப்புக்கு உயர்ந்தார்.
இவர்தான் இந்தியாவின் அதாவது பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் பிடியில் இந்தியா இருந்தபோது, கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டதை அடுத்து 1859ஆம் ஆண்டு இந்தியா வந்தார். வந்த கையோடு இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்து இந்தியாவைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டார். இவர் இந்தியாவில் காலடி எடுத்து வைப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான், இந்தியாவின் சுதந்திர வேட்கைக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்த சிப்பாய் கலகம் நடந்து முடிந்திருந்தது. இதனால் கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவத்திற்கே அதிக அளவில் செலவுகள் ஏற்பட்டு, பெருத்த கடனாளியாக நின்றிருந்தது.
ஜேம்ஸ் வில்சனுக்கு நிதித் துறையில் நன்கு அனுபவம் இருந்ததால், அப்போதைக்கு வைஸ்ராய் கன்னிங் பிரபுவிற்கு இவர் தான் தன்னைக் கரை சேர்க்க வந்த கர்த்தராக தெரிந்தார். உடனே நிதித் துறையின் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார்.
இவர்தான் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இந்தியாவின் முதல் பட்ஜெட்டை பிரிட்டிஷ் பாணியில் தயாரித்து அளித்தார். சிப்பாய் கலகத்தால் பெரும் பாதிப்பிலிருந்த நிதித் துறையை புதுப்பிக்கும் விதமாக பல்வேறு சீர் திருத்தங்களையும் கொண்டு வந்தார். ராணுவத்திற்காக செய்யப்படும் செலவீனங்களை மறு ஆய்வு செய்வதற்கான நடவடிக்கையையும் எடுப்பதற்கான திட்டத்தையும் கொண்டு வந்தார். இது பொது மக்களின் மனதில் புது நம்பிக்கையை ஏற்படுத்தியது.
அதோடு நாம் இப்பொழுது அனுபவிக்கும் வருமான வரி சித்ரவதைக்கும் இந்த ஆசாமிதான் பொறப்பு. ஆமாங்க, இவரு தான் முதன் முதலில் வருமான வரிச் சட்டத்தையே கொண்டு வந்த மஹா புண்ணியவான். இது அப்போதே பலத்த எதிர்ப்பலையை ஏற்படுத்தியது. இவர் தயாரித்து அளித்த பட்ஜெட்டின் மூலமாக இந்தியாவுக்கு ஒரு சக்தி வாய்ந்த மதிப்பு மிக்க ஆயுதத்தை கொடுத்த புண்ணியத்தை தேடிக் கொண்டார்.
அந்த ஆயுதம் இன்று வரை நம்மை துளைத்து எடுத்துக் கொண்டிருக்கிறது.