அமெரிக்க ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் தன் S-125 Neva/Pechora ஏவுகணையால் தாக்கி வீழ்த்தி விட்டது. நேற்று (ஜூன் 20, 2019 வியாழக்கிழமை) நடந்த சம்பவம் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் பெரிய பதற்றத்தை கொண்டு வந்திருக்கிறது.
இந்த பிரச்னையை, இன்று ட்விட்டர் வாசிகள் us drone shotdown என பல டேக் எடுத்து டிரெண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் தாக்கிய செய்தி கிடைத்த சில மணி நேரங்களிலேயே கச்சா எண்ணெய் விலை சுமாராக 4 - 6 சதவிகிதம் வரை விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.
ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை, ஈரானின் தாக்குதலுக்கு முன் சுமார் 61 டாலருக்கு வர்த்தகமாகி வந்தது. ஆனால் இப்போது தாக்குதலுக்குப் பிறகு சுமார் 64.5 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.
கடுப்பான ட்ரம்ப்
அமெரிக்க உளவு விமானத்தை தாக்கி, ஈரான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாக உறுமிக் கொண்டிருக்கிறார் ட்ரம்ப். ஆனால் ஈரானோ, உளவு பாக்க வந்தவங்களுக்கு என்ன விருந்தா போட முடியும், அதான் குண்டு போட்டு காலி பண்ணோம் என அசால்டாக பதிலடி கொடுத்திருக்கிறது. அமெரிக்கா தங்களை உளவு பார்க்கத் தான் வந்தது என்கிற வாதத்தில் இருந்து ஈரான் பின் வாங்குவதாகத் தெரியவில்லை.
அமெரிக்க அரசு
அமெரிக்க உளவு விமானம், ஈரானின் தெற்கு பகுதியில் ஹொர்மூஸ் ஜலசந்தி (Strait Hormuz)-ல் தான் தாக்கப்பட்டிருக்கிறது. அதுவும் சர்வதேச வான் எல்லைகளில் தான் தாக்கப்பட்டிருக்கிறது என அமெரிக்கா சொல்லி வருகிறது. அதே நேரத்தில் ஈரானின் தெற்கு வான் எல்லைகளில் பறந்து கொண்டிருந்ததையும் ஒரு மாதிரியாக மென்று முழுங்கி ஒப்புக் கொண்டிருக்கிறது.
அமெரிக்கா பழி
சில வாரங்களுக்கு முன் இதே ஹொர்முஸ் ஜலசந்தியில் சில எண்ணெய் டேங்கர்கள் பயங்கர ஏவுகணைகளால் தாக்கப்பட்டன. அதற்கு ஈரான் தான் பொறுப்பு என அமெரிக்கா பழி போட்டது. காரணம் ஈரான் மீதான அமெரிக்க பொருளாதாரத் தடை காரணமாக ஈரான் எவருக்கும் தன் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்ய முடியவில்லை.
எண்ணெய் இல்லைன்னா
அப்படி செய்ய வேண்டும் என்றால் ஈரானின் கச்சா எண்ணெய் சந்தைக்கு வந்தால் தான் சரிப்படும் என சர்வதேச அமைப்புகளில் இருந்து வார்த்தைகள் வர வேண்டும் என்பதால் இந்த தாக்குதல்களை நடத்தியதாக ஒரு தியரியைச் மனதில் வைத்து, ஈரான் மீது பழி போட்டது அமெரிக்கா. அமெரிக்காவின் வார்த்தைகளுக்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. நாங்கள் எண்ணெய் டேங்கர்களைத் தாக்கவில்லை என தீர்மானமாகச் சொன்னது ஈரான்.
நிலையான எண்ணெய் விலை
எண்ணெய் டேங்கர் தாக்குதல், அமெரிக்க உளவு விமான தாக்குதல் போன்ற காரணங்களால் அவ்வப்போது எண்ணெய் விலை திடீர் ஏற்றம் கண்டு கொண்டிருக்கிறது. இப்படி கச்சா எண்ணெய் விலை ஏறினால் பல நாடுகளும் அமெரிக்காவைத் தான் கேள்வி கேட்கும். "என்னங்க நீங்க சொன்ன படி ஈரான் கிட்ட எண்ணெய் வாங்கள, ஆனா இப்ப ஏறி இருக்குற எண்ணெய் விலைக்கு ஈரான் கிட்ட சமாதானமா போனாத் தான் வேலைக்கு ஆகும் போலருக்கே" என பேசிவிட்டால் அமெரிக்க பொருளாதாரத் தடை உதிர்ந்து விடுமல்லவா...!
ஒபெக்+
இதனால் விலையை நிலையாக வைக்க அமெரிக்கா வரும் ஜூலை 01, 02 தேதிகளில் ஒபெக்+ (OPEC+) கூட்டமைப்பைக் கூட்ட இருக்கிறது. ஜூன் 2019 வரை அனைத்து எண்ணெய் வள நாடுகளும், தங்களின் ஒரு நாளுக்கான மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 1.2 மில்லியன் பேரல்களைக் குறைத்து உற்பத்தி செய்வதாக எடுத்த முடிவைப் பற்றி விவாதிக்க இருக்கிறார்களாம். இருப்பினும் சில பிரச்னைகளால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள். அதில் முதல் விஷயம் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதம்.
இன்னும் விலை ஏறலாம்
கடந்த ஜூன் 18, 19 தேதிகளில் நடந்து முடிந்த அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் வங்கிக் கூட்டத்தில், இப்போதைக்கு வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை. ஆனால் அடுத்த மாதம் ஜூலை 30, 31 தேதிகளில் நடக்க இருக்கும் கூட்டத்தில் குறைக்க அதிக வாய்ப்பிருப்பதை வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறது அமெரிக்க ஃபெட் வங்கி. அதோடு உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் பயன்படுத்தும் நாடான அமெரிக்காவின் எண்ணெய் கை இருப்பும் குறைந்திருக்கிறதாம். எனவே கச்சா எண்ணெய் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.
உதாரணம்
அமெரிக்காவின் தற்போதைய ஃபெட் ரேட் 2.5 சதவிகிதமாக இருக்கிறது. ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் பணம் இருக்கிறது என்றால், அவர்கள் தங்கள் பணத்தைப் பெருக்க, வழி தேடுவார்கள். அமெரிக்க ஃபெட் ரேட் என்பது நம்மூர் வங்கி வட்டி விகிதம் போல வைத்துக் கொள்ளுங்கள். இந்த வட்டி விகிதம் அதிகரித்தால், அமெரிக்க நிறுவனங்கள் ரிஸ்க் எடுத்து வெளிநாடுகளில் தங்கள் பணத்தை முதலீடு செய்யாமல், அப்படியே அமெரிக்க வங்கிகளில் போட்டு வட்டிக் காசில் லாபம் பார்ப்பார்கள். ஒருவேளை ஃபெட் வட்டி குறைந்தால் அதிக வருமானத்துக்காக மற்ற நாடுகளில் முதலீடு செய்வார்கள்.
டாலர் வலுவடையலாம்
இப்போது இந்தியா, சீனா போன்ற பெரிய நாடுகளே வெளிநாட்டு முதலீடுகளில் பெரிய ஆர்வம் காட்டிக் கொண்டிருப்பதால் டாலர் தேவை உலக அளவில் அதிகரித்திருக்கிறது. இதனால் டாலர் விலை நிலையாக ஏற்றம் காண வாய்ப்பிருக்கிறது. இப்படி டாலர் விலை ஏற்றம் கண்டால், அதற்கு இணையாக, இந்திய ரூபாய் மதிப்பில் கச்சா எண்ணெய் விலையும் அதிகரிக்கும் தானே. உதாரணமாக 1 டாலர் = 70 ரூபாயில் இருக்கிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 60 டாலர் இருக்கிறது. இப்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய்க்கு 4200 ரூபாய் கொடுப்போம்.
டாலர் பயங்கரம்
டாலர் தேவை அதிகமாக இருப்பதால், டாலர் விலை வலுவடைந்து அதே 1 டாலர் = 75 ரூபாயாகிறது. இப்போதும் கச்சா எண்ணெய் விலை அதே 60 டாலருக்கு இருக்கிறது. இப்போது அதே ஒரு பேரல் கச்சா எண்ணெய்க்கு 60 டாலர் * 75 ரூபாய் என = 4,500 ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கும்.
ஆக கச்சா எண்ணெய் விலை ஏறினாலும், ஏறாவிட்டாலும் நாம் அதிக இந்திய ரூபாய் கொடுத்து தானே எண்ணெய் வாங்க வேண்டி இருக்கும்.
தலையெழுத்து
ஆக இந்த அமெரிக்க - சீன வர்த்தகப் போர் போல, இனி அமெரிக்க - ஈரான் போரும் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது. வழக்கம் போல இதற்கு அப்பாவி பொது மக்கள் பலியாக வேண்டும். அதிக விலை கொடுத்து பெட்ரோல், டீசல் வாங்க வேண்டும். பெட்ரோல் டீசலால் விலைவாசி அதிகரிக்கும். வாங்கும் சம்பளம் வீட்டுக்கே பத்தாக் குறையாக ஒரு அரைகுறை வாழ்க்கையை வாழ வேண்டும். என்ன கொடுமை சார்.