டெல்லி: சில வாரங்களுக்கு முன் ஜப்பானின் Kokuka Courageous என்கிற கச்சா எண்ணெய் டேங்கர், மற்றும் உலக அமைதி விரும்பியான நார்வேயின் Front Altair கச்சா எண்ணெய் டேங்கரையும் (Oil Tankers) சில தீவிரவாதிகள் பெர்ஷிய வளைகுடா, ஹொர்முஸ் ஜலசந்தி, ஓமன் வளைகுடா பகுதிகளில் வைத்து தாக்கினார்கள்.
உலகின் 30% கச்சா எண்ணெய் வளங்கள் இந்த ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகத் தான் மிதந்து உலகம் முழுக்க பயணித்துக் கொண்டிருக்கிறது.
இந்த 30 சதவிகித கச்சா எண்ணெய் போக்குவரத்தில் இந்தியாவின் பங்கும் பெரியது. எனவே இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் சரக்கு கப்பல்களைப் பாதுகாக்க இந்திய கப்பற்படை தன் இரண்டு போர் கப்பல்கள் மற்றும் சில கப்பற்படை விமானங்களை பாதுகாப்புக்கு அனுப்பி இருக்கிறது.
போர் கப்பல்கள்
INS Chennai மற்றும் INS Sunanya என இரண்டு போர் கப்பல்கள் இந்தியாவின் கச்சா எண்ணெய் சரக்கு கப்பல்களின் கடல் வழித் தடங்களை பாதுகாத்து கப்பலை இந்தியாவுக்கு கொண்டு செல்லும். இந்திய கப்பற்படை விமானங்கள் இந்திய கச்சா எண்ணெய் கப்பல் மற்றும் இந்திய போர் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய கப்பற்படை விமானங்களும் ஆகாயத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறதாம்.
அமெரிக்காவுக்கே அடி
சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தையே ஈரான் தன் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தி சர்வதேச அளவில் தலைப்புச் செய்தி ஆக்கிவிட்டது. எனவே நம் பாதுகாப்பையும், நம் நாட்டின் எரிசக்தி தேவையையும் பாதுகாக்க இந்திய பாதுகாப்புத் துறை கப்பற்படையை அனுப்பி இருக்கிறார்களாம்.
கண்காணிப்பு
இந்தியாவின் குருகிராமில் இருக்கும் The Information Fusion Centre கடந்த டிசம்பர் 2018-ல் தொடங்கப்பட்டது. இந்த மையத்தில் இருந்து இந்திய போர் கப்பல்களின் போக்குவரத்தை மிக நெருக்கமாக கவனிக்க முடியுமாம். இப்போது ஹொர்முஸ் ஜலசந்திக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் 2 இந்திய போர் கப்பல்களையும் இந்த மையத்தில் இருந்து இந்திய கடற்படையினர் கவனித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
இந்தியப் பெருங்கடல்
இந்தியப் பெருங்கடலில் ஒரு விபத்து ஏற்பட்டு, இந்தியா வெறுமனே கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், நாளை எந்த நாடு வேண்டுமானாலும் இந்தியப் பெருங்கடலை சொந்தம் கொண்டாடலாம். இது இந்தியாவுக்கு நாளை பெரிய ராணுவ பாதுகாப்பு பிரச்னை ஆகிவிடும். எனவே இப்போதே இந்திய கச்சா எண்ணெய் கப்பலுக்கு பாதுகாப்பு கொடுக்கும் சாக்கில் ஒட்டு மொத்த இந்தியப் பெருங்கடலையும் சொந்தம் கொண்டாடும் விதத்தில் நம் 2 போர் கப்பல்களை திட்டமிட்டு இறக்கி இருக்கிறாது இந்திய அரசு.
எரிசக்தி பாதுகாப்பு
அதோடு இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய் வரவில்லை என்றாலும் இந்தியா செயல்பட முடியாமல் ஸ்தம்பித்துவிடும். எனவே இந்தியாவின் எரிசக்தித் தேவையை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தையும் உணர்ந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு வரும் கப்பலை பாதுகாக்க, போர் கப்பல்களை களம் இறக்கி இருக்கிறார்கள்.