நியூயார்க் : அமெரிக்காவுக்கும் - ஈரானுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் இந்தியாவுக்கு என்று தான் விடிவுகாலமோ தெரியவில்லை. ஒரு புறம் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் நடந்து கொண்டிருக்கும் வர்த்தக பிரச்சனை. மறுபுறம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் நடந்து கொண்டிருக்கும் பிரச்சனையால் நடுவில் மாட்டிக் கொண்டு விழிபிதுங்க நிற்பது இந்தியா போன்றதொரு வளர்ந்து வரும் நாடுகள் தான்.
ஒரு புறம் அமெரிக்காவின் பேச்சை கேட்காவிட்டால் அமெரிக்கா இந்தியா மீது அதிரடியான நடவடிக்கைகளை எடுக்கும். மறுபுறம் இது ஈரானை கடுபேற்றும் விதமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா - ஈரான் பிரச்சனையால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரான் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது.
அமெரிக்கா – ஈரான் பிரச்சனை
ஒரு புறம் ஈரான், அமெரிக்கா ஈரானை கண்கானித்து வருவதாகவும், ஈரானை தாக்க நினைப்பதாகவும் கூறி வருகிறது. அதோடு அமெரிக்கா அதிபர் டிரம்ப் தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இருந்து வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. மறுபுறம் அமெரிக்காவோ ஈரான் கிளர்ச்சியாளர்களுக்கு மறைமுகமாக நிதியுதவி புரிவதாக கூறி வருகிறது. இந்த நிலையில் ஈரானின் முன்னணி உற்பத்தி நிறுவனங்களுக்கு முன்னரே அமெரிக்கா தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
ஈரானிடம் எண்ணெய் வாங்க கூடாது?
இதனாலேயே இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்க கூடாது என்று அதிரடியாய் கூறியது. இந்த நிலையில் ஈரானின் முக்கிய பொருளாதார அம்சமான எண்ணெய் விற்பனை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியது. இந்த நிலையில் ஈரான் பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஈரான் தான் காரணம்
கடந்த மே 12ம் தேதி, ஈரான் நாட்டின் கடற்கரையை ஒட்டிய ஓமன் வளைகுடாவில் சென்ற 4 எண்ணெய் கப்பல்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் பெரிய அளவில் கப்பல்களுக்கு பாதிப்பு இல்லை என்றாலும், இது முதல் முறை அல்ல என்று ஏற்கனவே அமெரிக்கா செல்லும் எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சவுதி அரேபியா- ஈரான்-அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டது. ஏனெனில் தாக்குதலுக்கு உள்ளான 4 கப்பல்களில் 2 சவுதி அரேபியாவுக்கு சொந்தமானது என்பதால் அமெரிக்கா இந்த விவகாரத்தை கையில் எடுத்து ஈரானை மிரட்டியது குறிப்பிடத்தக்கது.
ஈரான் அமெரிக்கா விமானத்தை தாக்கியது?
அமெரிக்கா விமானம் ஈரானின் வான் எல்லையில் சுற்றிக் கொண்டிருந்ததாகவும், இந்த நிலையில் அமெரிக்கா ராணுவத்தின் ஆளில்லா விமானமான ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இந்த நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்த டிரம்ப் உத்த்ரவிட்டார். ஆனால் திடிரென தனது முடிவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
ஈரான் வான் எல்லைக்குள் போகாதீங்க?
ஒரு புறம் இரு நாடுகளுக்கு இடையே போர் மூலம் அபாயம் நிலவி வருகிறது, மறுபுறம் ஈரான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் அபோல்பாஸ்ல் ஷெகார்ச்சி எங்களின் மீது ஒரு குண்டு பாய்வது, அமெரிக்கா அதன் நட்பு நாடுகளுக்கு தீ வைப்பது போன்று என்றும் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் இந்தியா விமான நிறுவனங்களை ஈரானின் வான் எல்லைக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
விலை அதிகரிக்கும் அபாயம்?
ஒரு புறம் இரு நாடுகளும் சண்டையிண்டுக் கொள்ளும் நிலை. மற்றொரு புறம் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அமெரிக்கா கச்சா எண்ணெய் விலை சுமார் 10 சதவிகிதம் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 5 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. இதே அமெரிக்கா கேசோலின் விலையும் 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
உற்பத்தியை தொடரலாம்?
இந்த நிலையில் அமெரிக்கா ஈரானுக்கு இடையே பிரச்சனை தொடர்ந்த வண்ணம் உள்ளதால், ஓபெக் நாடுகள் உற்பத்தியை தொடர வாய்ப்புள்ளதாக நிபுனர்கள் கருதுகின்றனர். ஜீலை முதல் வாரத்தில் இந்த ஓபெக் கூட்டம் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உற்பத்தி தொடரபடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் என்னவாகும்?
ஏற்கனவே அமெரிக்காவால் ஈரானிடம் எண்ணெய் வாங்குவததை நிறுத்திவிட்டு தற்போது சவுதி அரேபியாவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்த எண்ணெய்யாவது ஒழுங்காக கிடைக்குமா? என்றே பதற்றத்திலேயே இந்தியா இருந்து வருகிறது. ஏனெனில் உலக அளவில் என்ன பிரச்சனையாக இருந்தாலும், அதிலும் வளைகுடா நாடுகளில் ஏதேனும் பிரச்சனை என்றால் அதன் முதல் எதிரொலி கச்சா எண்ணெய் விலையேற்றமாகத்தான் இருக்கும். இந்த நிலையில் இந்த பிரச்சனை இன்னும் நீண்டு கொண்டே போனால், நிச்சயம் இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலையில் அதன் எதிரொலி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.