தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே, தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே, தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை...
ஏறத்தாழ இந்த வரிகளுக்கு அனைத்து தகப்பன்மார்களும் தகுதியானவர்களே. இருப்பினும், தன்னால் இயலாத அசாத்தியமான சூழலில் கூட தன் மகனுக்கானதைச் செய்து கொடுக்கும் போது... அது இன்னும் ஸ்பெஷலாகிறது.
அதை நாமும் பேசிப் பாராட்ட வேண்டி இருக்கிறது. தன் தந்தையின் தியாகத்தால் தான் இன்று ஒலிம்பிக் வீரனாக உலக சாதனை படைத்த வெற்றி வீரனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஒரு இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங். இனி அவர் மொழியில்...
கண்ணீர்
"சுமார் 20 வருஷத்துக்கு முன்ன, நான் வழக்கமா ஷூட்டிங் ரேஞ்சுக்கு போய் பயிற்சி எடுக்குற துப்பாக்கிய கேட்டேன். நான் வழக்கமா பயன்படுத்திக்கிட்டு இருந்த துப்பாக்கி இன்னொரு ஷூட்டரோடது. அந்த துப்பாகிய அவர் வேற ஒருத்தருக்கு வித்துட்டாரு. அதனால நான் ஷீட்டிங் ரேஞ்சுல இருந்து வீட்டுக்கு அழுதுக்கிட்டே வந்தேன். அப்பா என்ன ஏதுன்னு விசாரிச்சாரு"
எதுவும் தெரியாது
"இந்த மனுசன் (எங்க அப்பா) தன்னோட உழைப்புல சம்பாதிச்சு வாங்குன வீட்ட வித்து எனக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்தாப்புல்ல. இந்த மனுஷனுக்கு நான் பெரிய ஆளா வருவேன், இந்தியாவுக்காக பதக்கம் வாங்குவேன், இந்த துப்பாக்கி சுடுதல்லயே நிறைய முன்னேறுவேன், ஒரு நாள் உலக சாதனை படைப்பேன், உலகின் நம்பர் 1 துப்பாக்கிச் சுடும் வீரரா வருவேன்னு எல்லாம் தெரியாதுங்க. நான் அழுதுக்கிட்டே வீட்டுக்கு வந்தேன், விஷயத்த சொன்னேன், வீட்ட வித்து வந்த காசுல துப்பாக்கி வாங்கிக் கொடுத்து என் அழுகைய நிறுத்திட்டாரு. அவ்வளவு தான்"
அடுத்த 20 வருஷம்
அடுத்த 20 வருஷம் எங்க அப்பாவோட, நாங்க எல்லாரும் வாடகை வீட்ல தான் குடி இருந்தோம். இன்னக்கி உலக துப்பாக்கி சுடுதல் போட்டில ஒரு உலக சாதனை படைச்சிருக்கேன், இந்தியாவுக்காக 2012 லண்டன் சம்மர் ஒலிம்பிக்ஸ்ல ஒரு வெண்கலம் வாங்கிட்டேன், பல சர்வதேச போட்டிகள்ள தங்கம் வாங்கி இருக்கேன் எல்லாத்துக்கும் காரணம் இந்த மனுஷனோட தியாகம் தாங்க. வீட்ட வித்து வாங்குன அந்த முதல் துப்பாக்கி தாங்க" என பூரிக்கிறார் ககன் நரங்.
நன்றி அப்பா
"அன்னக்கி நீங்க பண்ண விஷயத்துக்கு என்னிக்குமே நன்றிக் கடனையோ அன்புக் கடனையோ என்னைக்கும் அடைக்க முடியாதுப்பா... என்றும் அன்புடன் இனிய தந்தையர் தினம்" என வாழ்த்து சொல்லி உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்க்க வைத்திருக்கிறார் இந்திய ஒலிம்பிக் ஷூட்டர் ககன் நரங். தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே, தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே, தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை...!