மும்பை: இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பையின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள பிரபலமான பந்த்ரா குர்லா வணிக வளாகத்திலுள்ள மூன்று ஏக்கர் பரப்பளவு கொண்ட பிளாட்டை வாங்குவதற்கு 2 ஆயிரத்து 238 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டு ஜப்பானின் பிரபலமான சுமிடோமோ நிறுவனம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டில் பிரபலமான கட்டுமான நிறுவனமான லோதா குழுமம் மும்பையின் மற்றொரு பிரபலமான ஏரியாவான வாதாலாவில் ஒரு ஏக்கருக்கு 653 கோடி ரூபாய் என்ற விலையில் சுமார் 6.2 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிளாட்டை 4 ஆயிரத்து 50 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதே அதிகபட்சமாக இருந்தது.
ரியல் எஸ்டேட் விற்பனையைப் பொறுத்த வரையில் ஒரு ஏக்கர் என்ற அளவில் விற்பனையைக் கணக்கிட்டால், தற்போது நடந்துள்ள இந்த ஏல விற்பனையின் மதிப்பானது இந்தியாவில் இதுவரையில் நடந்துள்ள ஏல விற்பனையில் அதிகபட்ச ஏல விற்பனை என்ற சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புத்த துறவி டு பிசினஸ் மேன்
ஜப்பானின் பிரபலமான வணிக குழுமம் சுமிடோமோ (Sumitomo Group). இந்நிறுவனத்தை நிறுவியவர் மசடோமோ சுமிடோமோ (Masatomo Sumitomo) என்பவர். 1615ஆம் ஆண்டில் புத்தமதத் துறவியாக இருந்து பின்னாளில் அன்றாட சமூக வாழ்க்கைக்கு திரும்பியர். இந்தியாவில் டாடா குழுமம் எப்படி பாரம்பரியம் மிக்க நிறுவனமோ அதேபோல் ஜப்பானில் சுமிடோமோ குழுமம் பாரம்பரியப் புகழ்பெற்ற நிறுவனமாகும்.
மஸ்டா மோட்டார்ஸ்
சுமிடோமோ குழுமத்திற்கு சொந்தமாக மஸ்டா மோட்டார்ஸ் (Mazda Motor Corporation) என்னும் சொகுசு கார் உற்பத்தி நிறுவனமும் உள்ளது. இந்தியாவிலும் தனது விற்பனை கிளைகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சுமிடோமோ குழுமம் ஜப்பானில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்துறை, உள்கட்டமைப்புத்துறை, மின்னணு மற்றும் ஊடகவியல் துறை, கனிமவளத்துறை, எரிசக்தி, இரசாயன உற்பத்தி ஆகிய துறைகளில் முன்னணியில் இருக்கும் நிறுவனமாகும்.
இந்தியாவில் கால் பதிப்பு
சுமிடோமோ குழுமத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையானது சுமார் 74 ஆயிரத்து 638 பேர். இந்நிறுவனம் தற்போது இந்தியாவிலும் தனது தொழில்களை விஸ்தரிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதிலும் குறிப்பாக கட்டமைப்பு மற்றும் கட்டுமானத்துறையில் கால்பதிக்கும் வேலையை தொடங்கியுள்ளது.
பந்த்ரா-குர்லா வணிக வளாகம்
சுமிடோமோ குழுமம் ஜப்பான், அமெரிக்கா மற்றும் இந்தோனேஷியாவில் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு கட்டுமானத் திட்டங்களை உருவாக்கி வருகிறது. இந்தியாவிலும் அதேபோல் கட்டுமானத்திட்டங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதன் முதல் கட்டமாக இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தின் வர்த்தக நகரமான மும்பையில் கட்டுமானத் திட்டத்தை ஏற்று நடத்த தயாராகி வருகிறது. மும்பையில் மத்தியில் பிரபலமான பந்த்ரா-குர்லா வணிக வளாகத்தில் (Bandra-Kurla Complex) உள்ள 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிளாட்டை ஏல விற்பனையின் மூலம் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
3 ஏக்கர் விலை 2238 கோடி ரூபாய்தான்
3 ஏக்கர் பரப்பளவிலான பிளாட்டுக்கு ஏலத்தொகையாக ஒரு ஏக்கருக்கு 745 கோடி ரூபாய் என்ற விலையில் 3 ஏக்கருக்கு சுமார் 2 ஆயிரத்து 238 கோடிக்கு வாங்க விருப்பமுள்ளதாக ஏலத்தில் கேட்டுள்ளது. பொதுவாக ஒரு இடத்தையோ அல்லது ஏதாவது ஒரு சொத்தினையோ ஏலத்தில் கேட்க நினைத்தால் மற்றவர்களைக் காட்டிலும் சிறிய அளவிலான தொகையை மட்டுமே கூடுதலாக வைத்து ஏலம் கேட்பது சகஜம். சுமிடோமோ குழுமமோ எடுத்த எடுப்பிலேயே ஏலத்தில் கலந்து கொண்ட மற்றவர்களை விட கூடுதல் தொகையை மதிப்பிட்டு ஏலத்தில் வாங்க விருப்பமுள்ளதாக தெரிவித்துள்ளது.
யாரும் முன்வரவில்லை
சுமிடோமோ குழுமம் ஏலத்தில் கேட்டுள்ள பந்த்ரா-குர்லா வணிக வளாகத்தில் உள்ள 3 ஏக்கர் இடமானது பல மாதங்களாக ஏலம் போகாமல் கிடப்பிலேயே போடப்பட்டிருந்தது. இதற்கு அப்போது நிலவிய கடும் பண நெருக்கடியே முக்கிய காரணமாகும். இதனாலேயே அந்த இடத்தை வாங்குவதற்கு அப்போது யாருமே முன்வரவில்லை. இப்போது ஏலத்தில் விற்பனை செய்வதாக அறிவித்த உடனே சுமிடோமோ குழுமம் ஏலத்தில் யாருமே நினைத்து பார்க்கவே முடியாத அதிக விலையை ஏலத்தில் கேட்டுள்ளது.
எம்எம்ஆர்டிஏ
இது பற்றி விளக்கிய மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணைய (Mumbai Metropolitan Region Development Authority) உயரதிகாரி கூறுகையில், சுமிமோடோ நிறுவனம் பிகேசி(BKC) யில் 3 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பிளாட்டை ஏல விற்பனையின் மூலம் வாங்கி வர்த்தகத்தை தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே நாங்களும் தற்போது ஏலத்தை செயல்படுத்த முடிவெடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.
ஏல விற்பனையில் சாதனை
ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்த வரையிலும் கடந்த 2010ஆம் ஆண்டு பிரபலமான லோதா குழுமம் மும்பையின் வாதாலா ஏரியாவில் ஒரு ஏக்கர் 653 கோடி ரூபாய் என்ற மதிப்பில் 6.2 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிளாட்டை சுமார் 4 ஆயிரத்து 50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்ததே அதிகபட்ச விலையாக இருந்தது. தற்போது அதைவிட கூடுதலாக விலை ரூபாய் 2238 கோடி கொடுத்து 3 ஏக்கர் பிளாட்டை ஏலத்தில் எடுத்துள்ளது அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் இதுவரையில் நடந்துள்ள ஏல விற்பனையில் அதிகபட்ச ஏல விற்பனை என்ற சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.