டெல்லி : லட்சக் கணக்கில் கல்விக்காக பணத்தைக் கொடுத்து படித்து பின்னர் வேலை தேடி அலையும் மாணவர்களுக்கு மத்தியில் பள்ளி படிப்பு முடித்த மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பு உள்ளது என்றும், அதுவும் ஹெச்.சி.எல்லில் இந்த வாய்ப்பு என்கிற போது யாருக்கு தான் பிடிக்காது.
அட ஆமாங்க.. நிஜம் தான். ஹெச்.சி.எல் டெக்னாலாஜீஸ் பள்ளி படிப்பு முடித்த மாணவர்கள், கல்லூரியில் ஏதேனும் இளங்கலையோ, முதுகலையோ முடித்திருந்தாலோ போதும் என்கிறது.
அதோடு அவர்களுக்கு எந்த முன் அனுபவமும் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறது. குறிப்பாக 10000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேண்டும் என்றும் கூறியுள்ளது இந்த ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனம்.
கல்வி தகுதி அவசியமில்லை?
ஐ.டி துறையில் ஜாம்பாவான இருக்கும் இந்த நிறுவனத்தில் பணியில் சேர முன்னர் பல தகுதிகள் இருக்க வேண்டும். அதிலும் சாப்ட்வேர் துறையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் நிலவி வந்தது. ஆனால் கல்வித் தகுதி பெரிதில்லை. திறமை ஒன்றே போதும் என்கிறது ஹெச்.சி.எல் நிறுவனம். இதுபோல நொய்டாவில் 3000 புதியவர்களை (freshers) வேலைக்கு எடுத்திருக்கிறோம். அவர்களில் 1000 பேர் தற்போது தான், அதாவது நடப்பு ஆண்டில் 12ம் வகுப்பு முடித்தவர்கள் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்
இவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களில் பள்ளி மாணவர்கள் என்றால் ஒரு வருடமும், இதுவே கல்லூரி மாணவர்கள் என்றால் ஆறு மாதமும் பயிற்சி அளிக்கப்படும். இவர்கள் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்த பயிற்சிக்குஅனுப்பப்படுவார்கள் என்றும், இதற்கு ரூ.2 லட்சம் கட்டணம் என்றும் கூறியுள்ளது இந்த நிறுவனம்.
பயிற்சி முடிந்த பின்னர் வேலை?
ஒரு புறம் பயிற்சியை கொடுத்து, பயிற்சி முடிந்தவுடன் ஆரம்பகட்ட ஊழியர்களுடன் இவர்களும் சேர்க்கப்படுவார்களாம். அதோடு பயிற்சி காலத்தில் இவர்களுக்கு கட்டணமும் உதவி தொகையும் உண்டு என்று ஹெச்.சி.எல் நிறுவனத்தின் துணைத் தலைவரும் திட்ட இயக்குனருமான சஞ்சய் குப்தா கூறியுள்ளாராம்.
இந்த வருடம் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு!
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பள்ளிப்படிப்பை முடித்த 500 மாணவர்கள் இந்த பயிற்சியை முடித்தவர்கள், தற்போது வேலை செய்கிறார்கள் என்கிறது இந்த நிறுவனம். இதில் என்ன குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் இவர்கள் பட்டதாரிகளுக்கு இணையாக வேலை பார்க்கிறார்களாம். இதனால் தான் இந்த வருடம் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை சேர்க்க முடிவெடுத்துள்ளதாம் இந்த நிறுவனம்.