ஈரோடு : என்னய்ய சொல்றீங்க.. ஒரு கிலோ கொத்தமல்லி இலை 400 ரூபாயா. அட ஆமாங்க.. ஒரு கிலோ கொத்த மல்லி இலை 300 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறதாம்.
அப்படி 400 ரூபாய் கொடுத்தாலும் கொத்தமல்லி இலை இல்லை என்பது தான் கொடுமையே. முன்னர் எல்லாம் நம்ம அண்ணாச்சி கடைக்கு போய் பொருட்கள் வாங்கிக் கொண்டு அண்ணாச்சி கொஞ்சம் கொத்தமல்லி கருவேப்பிலை கொடுங்கள் என்று கேட்டால் ஃப்ரீயாகவே தருவார்கள்.
ஆனால் பச்சை தங்கம் என்று கூறப்படுகிறது இந்த கொத்தமல்லி. ஆமாங்க நம்ம குடும்ப தலைவிகள் சமைக்கும் சமையலுக்கு கூடுதல் சுவை தருவதும், கம கமவென வாசனைக்காகவும், சிறந்த மருத்துவ குணங்களை கொண்ட இந்த கொத்தமல்லியை சமையலில் சேர்க்காதவர்களே இருக்க மாட்டார்கள்.
கொத்தமல்லி விளைச்சல் இல்லை
இந்த கொத்தமல்லி இலையை கடைக்குப் போறமா? இலையை 5 ரூபாய் கொடுத்து வாங்கினோமா? அதோடு சரி. ஆனால் இதற்கு பின்னால் எவ்வளவு வேலைகள் இருக்கிறது தெரியுமா? வேலை செய்தாலும் பராவாயில்லை, தண்ணீரே இல்லையே. அப்புறம் எப்படி விற்பனை செய்வது. ஆமாங்க.. பருவமழையும் பொய்த்துப் போனாதால் கிணறுகள் வறண்டு காணப்படுகின்றன. இங்கு குடி தண்ணீருக்கே தண்ணீர் பற்றாக்குறை, இதில் விவசாயத்திற்கு தண்ணீர் எங்கிருந்து வரும். இந்த நிலையில் உற்பத்தி 100க்கு 80 சதவிகிதம் இல்லையாம். விளைச்சல் மிக மிக குறைவு தானாம்.
கட்டுகள் தான் கணக்கு
விவசாயிகளிடம், வியாபாரிகள் வந்து, கொத்தமல்லி இலையாகட்டும், கீரைகளாகட்டும், வாங்கும் போது கட்டுகள் எண்ணிக்கை அடிப்படையில் தான் வாங்குவார்களாம். முன்னர் எல்லாம் ஒரு கட்டு கொத்தமல்லி 30 ரூபாய் முதல் 40 ரூபாய்க்கு போய்க் கொண்டிருந்தது. ஆனால் தற்போது அதுவும் 70 -80 ரூபாய் வரை வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் தற்போது எங்களிடம் 100 ரூபாய்க்கு கேட்டாலும் எங்களிடம் கீரை இல்லை என்கிறார்களாம் விவசாயிகள்.
ஒரு இனுக்கு பத்து ரூபா?
என்ன கொடுமையா? இது விவசாயிகளிடம் 30 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டு வரும் கட்டுகளையே 10 - 20 கட்டுகளாக பிரித்து அதையே ஒரு கட்டு 5 ரூபாய்க்கு விற்பார்களாம். ஆனால் இது தற்போது கட்டு 70 ரூபாய்க்கு வாங்கி கொண்டு போகிறார்கள் எனில் கட்டு 30 - 40 வரை விற்பனையாகி வருகிறதாம். அதிலும் கடைகளில் கிராம் கணக்கில் எடை போட்டு தருகிறார்களாம். ஆமாங்க 25 கிராம் இலை 10 ரூபாயாம். அதிலும் முகூர்த்த தினங்களில் இதன் ரேஞ்சே வேற என்கிறார்கள் கடைக்காரர்கள்.
கேட்பாரற்று கிடக்கும் கீரைகள் கூட 10 ரூபா?
சில சமயங்களில் கீரைகள் 10 ருபாய்க்கு 3 கட்டு என கொடுத்தால் கூட வாங்க மாட்டார்கள். ஆனால் தற்போது அது கூட கட்டு 10 ரூபாய். அதிலும் செங்கீரை 10 ரூபாய்க்கு மூன்று கட்டு தருவார்கள், ஆனால் தற்போது ஒரு கட்டு 7 ரூபாய் எனவும், இதுவே சிறுகீரை அரைக்கீரை, வெந்தயக் கீரை, பாலாக்கீரை என முக்கிய கீரை வகைகள் கட்டு 7 - 10 ரூபாய் வரை விற்கப்படுகிறதாம். அதிலும் மணத்தக்காளி எனப்படும் வயிற்றுப்புண்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படும் இந்த கீரையை கண்களால் காண்பதே அரிதாகி விட்டது. ஏனெனில் கீரை வந்ததும் முதலில் காலியாவது இந்த வகை தானாம்.