மும்பை : என்னாது 10 காயின்னா வேண்டவே வேண்டாம்? இது செல்லாது? அப்படி இனி யாரும் சொல்ல முடியாது.. அட ஆமாங்க.. 50 பைசா முதல் 1, 2, 5, 10 ரூபாய் உள்ளிட்ட அனைத்து நாணயங்களும் பணபரிமாற்றின் போது வங்கிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
அதோடு நாணயங்களை வாங்க வங்கிகள் மறுத்தால், வங்கிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி புதுப்புது ரூபாய் நாணயங்களை அந்தந்தக் காலகட்டத்திற்கு ஏற்ப தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நாட்டில் தற்போதுள்ள 50 பைசா, 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் மற்றும் ரூ.10 நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன.
ஆனால் சில இடங்களில் 10 ரூபாய் நாணயம் மற்றும் 50 பைசா உள்ளிட்ட சில நாணயங்கள் செல்லாது எனக்கூறி வாங்க மறுப்பதாக இந்திய ரிசர்வ் வங்கிக்கு பல புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து, இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஏற்ப பொருளாதாரம் மற்றும் சமூகம், கலாச்சாரம் போன்றவற்றை மையமாக வைத்து நாணயங்கள் வெளியிடப்படுகின்றன.
அந்த நாணயங்கள் நீண்டகாலம் புழக்கத்தில் இருக்கும். அதேநேரத்தில் புதிய உருவங்களிலும், புதிய வடிவங்களிலும் நாணயங்கள் வெளியிடப்படும்.
இத்தகைய சூழலில் சில நேரங்களில் நாணயங்கள் மீதான நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.
இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆக இனி யாரும் அப்படி யோசிக்க வேண்டாம்.
பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், புழக்கத்தில் உள்ள அனைத்து நாணயங்களும் சட்டப்படி செல்லும். அதனை யாரும் வாங்க மறுக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வங்கிகளும் அனைத்து நாணயங்களை பண பரிவர்த்தனைவயின் போது பெற்றுக்கொள்ள வேண்டும். மக்களை திருப்பி அனுப்பக் கூடாது.
அதோடு பொதுமக்கள் எவ்வித தயக்கமும் இன்றி, பணபரிவர்த்தனைக்கு சில்லறை நாணயங்களை பயன்படுத்தலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.