டெல்லி: மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் (BSNL), ஜீன் மாத சம்பளம் கொடுக்க முடியாது, கையில் செயல்பாட்டு செலவுக்கும்(operational expenses) காசில்லை என்றும் ஏற்கனவே மத்திய அரசை நாடியது.
இந்த நிலையில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) ஜூன் மாதம் சம்பளமாக கொடுக்க வேண்டிய தொகையான ரூ.850 கோடி சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும், மற்ற செலவுகளுக்கும் காசில்லை என்று கூறி வந்தது.
இதற்காக தொடர்ந்து போராடி வருவதாகவும், இதனால் மத்திய அரசிடம் அவசர நிதியுதவி கேட்டுள்ளதாகவும் கூறி வந்தது.
பொதுத்துறை நிறுவனமான இது, கிட்டதட்ட 14,000 கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மத்திய அரசு அவசரகால நிதியிலிருந்து 2000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு வழங்கப்பட்டுள்ள நிதியில் 750 கோடி ரூபாய் சம்பளமாகவும், 800 கோடி ரூபாய் கடனுக்கும், மீதமுள்ள தொகை மின்சார கட்டணம் உள்ளிட்ட மற்ற செலவுகளுக்கும் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒரு புறம் மாதாந்திர வருமானம் வரும் வரையில், இடையில் நடைபெறும் செயல் பாட்டுக்கான காசு இல்லை என்று கூறி வந்த நிலையில், செயல்பாடுகளுக்கான மூலதனமும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகின்றது.
கடந்த வாரம் இது குறித்து பி.எஸ்.என்.எல் நிறுவனம், அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் நோய்வாய்ப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல்லின் தலைவிதியை கொஞ்சம் மாற்றி எழுதுமாறும், இதற்கான தக்க நடவடிக்கையை எடுக்குமாறும் அரசிடம் கோரியுள்ளதாம் பி.எஸ்.என்.எல்.
அதோடு அதிகளவு கடனில் சிக்கியுள்ள பி.எஸ்.என்.எல் தற்போது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல், தொலைத் தொடர்பு சேவையை தொடர்ந்து கொடுப்பதிலும் சிக்கல் நீடித்து வருவதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாம்.
ஒரு புறம் தனியார் நிறுவனங்களின் மலிவான விலை குறைந்த பேக்குகளால் பி.எஸ்.என்.எல் மிகுந்த நஷ்டத்தை கண்டது. இதனால் அரசுக்கு சொந்தமான இந்த தொலைத் தொடர்பு நிறுவனம் மிக அதிகமான பொருளாதார நெருக்கடிக்கும் ஆளானது.