இந்திய ரியல் எஸ்டேட் என்பது சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் வியாபாரம் கொண்ட பெரிய துறை. இந்த துறையை நம்பி படித்த பட்டதாரிகள் தொடங்கி படிக்காத சித்தாட்கள், மேஸ்திரிகள் வரை வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்திய ரியல் எஸ்டேட் துறையில் சுமார் 5.2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் மிகப் பெரிய துறை. ஆகையால் இந்த துறையை அசால்டாக கவனிக்காமல் விட முடியாது.
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, ரெரா என பல்வேறு புதிய அரசு திட்டங்கள் இந்திய ரியல் எஸ்டேட் துறையை பெரிதும் நேரடியாக பாதித்திருக்கிறது. இதனால் வீடுகளின் விலையும் கொஞ்சம் அதிகமாகவே எகிறி இருக்கிறது.
சில யோசனைகள்
இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் மட்டும் சுமார் 4.40 லட்சம் வீடுகள் மற்றும் ரியல் எஸ்டேட் திட்டங்கள் விற்கப்படாமல், விற்க முடியாமல் தேங்கி நிற்கிறதாம். தில்லி என்சிஆர் பகுதியில் மட்டும் சுமார் 1.50 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்கப்படாமல் தேங்கி நிற்கின்றன. இதை எல்லாம் வரும் Budget 2019-ல் தீர்க்க சில யோசனைகளை முன் வைக்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.
பணம்
ஜே எல் எல் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ரமேஷ் நாயர் "முன்பு போல நிறைய வீட்டுக் கடன்களை வழங்க வேண்டும். ரியல் எஸ்டேட் துறைக்கு போதுமான பணம் இல்லாததால் தான் பெரிய தேக்கத்தில் இருக்கிறது. ரியல் எஸ்டேட் திட்டங்களுக்குத் தேவையான நிதியும் கிடைக்காமல் இருக்கிறது. வங்கி அல்லாத நிதி சார் நிறுவனங்களில் எற்பட்ட சிக்கல்களால், இந்திய ரியல் எஸ்டேட் துறையில் பெரிய சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. 2017 - 18 முந்தைய காலங்களில் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் இருந்து மட்டும் சுமார் 35,000 - 40,000 கோடி ரூபாய் ரியல் எஸ்டேட் துறைக்கு பணம் புழங்கும். அந்த நிதி 2018 - 19 ஆண்டுகளில் இல்லாததால் ரியல் எஸ்டேட் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
வீடுகள் தேக்கம்
நைட் ப்ராங்க் ரிசர்ச் என்கிற ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின் படி 2013-ல் 4.20 லட்சம் ரியல் எஸ்டேட் திட்டங்கள் தொடங்கப்பட்டன ஆனால் 3.29 லட்சம் திட்டங்கள் தான் விற்கப்பட்டன. 2014-ல் 3.19 லட்சம் திட்டங்கள் தொடங்கப்பட்டு 2.79 லட்சம் திட்டங்கள் விற்கப்பட்டன. இப்படி தொடர்ந்து சரிந்து 2017-ம் ஆண்டில் வெறும் 1.03 லட்சம் திட்டங்கள் மட்டுமே தொடங்கப்பட்டன. அதே 2017-ல் 2.28 லட்சம் திட்டங்கள் விற்கப்பட்டன. 2018-ல் 1.82 லட்சம் திட்டங்கள் தொடங்கப்பட்டு, 2.42 லட்சம் திட்டங்கள் விற்கப்பட்டன. இப்போது தான் மீண்டும் பழைய நிலைக்கு கொஞ்சம் வீடுகள் விற்பனை வந்திருக்கிறது ஆனால் இன்னமும் நிறைய வீடுகள் விற்கப்படாமல் தேங்கிக் கிடக்கிறது.
கோரிக்கைகள்
Budget 2019-ல், மலிவு விலை வீடுகள் திட்டத்தை இன்னும் பரவலாக மக்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பது,
நிலங்களை ரியல் எஸ்டேட் டெவலப்பர்களுக்கு குறைந்த விலையில் அல்லது இலவசமாகக் கொடுத்து கட்டுமானத் துறையில் இருக்கும் கூடுதல் விலைப் பிரச்னையைக் குறைத்து அனைவரையும் வீடு வாங்க வைக்கும் திட்டம்,
ரியல் எஸ்டேட் துறைக்கு அரசு சிங்கிள் விண்டோ க்ளியரன்ஸ்,
வருமான வரிச் சட்டம் பிரிவு 24-ன் கீழ் வட்டிக்கு 3 லட்சம் வரை வரி விலக்கு,
வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை ஆர்பிஐ ரெப்போ ரேட் குறைப்புக்கு தகுந்தாற் போல் குறைப்பது... என பல்வேறு டிமாண்ட்களை வைக்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்கள்.
ரியல் எஸ்டேட் துறையினர் சொல்வதை நிர்மலா சீதாராமன், ப்ட்ஜெட்டில் சொல்லி நம் வயிற்ரிலும், பில்டர்கள் வயிற்றிலும் பால் வார்ப்பார்களா..? Budgt 2019-ல் பார்ப்போம்.