இந்திய இரும்பு தொழிற்துறை, Budget 2019-ல் நிர்மலா சீதாராமனிடம் நிறைய கேட்கிறது. தங்கள் தொழிலை இந்தியாவில் இன்னும் வலுவாக நடத்திக் கொள்வதில் தொடங்கி, ஜிஎஸ்டி-யில் உள்ளீட்டு வரி கேட்பது வரை பட்டியலைப் போடுகிறார்கள் இந்திய இரும்புத் துறையில் தொழில் செய்பவர்கள். ஜிஎஸ்டி முழுக்க முழுக்க ஜிஎஸ்டு கவுன்சிலின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் நாம் பட்ஜெட்டில் என்னவெல்லாம் கேட்டிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.
இந்திய இரும்புச் சங்கம், மத்திய அரசின் 2019 - 20-ம் ஆண்டுக்கான முழு ஆண்டு கால பட்ஜெட்டில் தங்களுக்கு சாதகமான சில அறிவிப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இந்த இந்திய இரும்புச் சங்கம் இந்தியாவில் இரும்பு தயாரிக்கும் பொதுத் துறை நிறுவனம் தொடங்கி தனியார் நிறுவனங்கள் வரை அனைவருக்குமான பிரதிநிதியாக இருக்கிறது.
தற்போது மத்திய அரசிடம், அத்தியாவசியம் இல்லாத hot rolled items, colour coated steel போன்ற இரும்பு இறக்கும்திகளை ஊக்குவிக்கக் கூடாது. இது போன்ற இரும்புப் பொருட்களை இந்தியாவிலேயே தயாரிக்க முடியும். இந்தியா முழுமைக்கும் தேவையான இரும்பை இந்தியாவிலேயே தயாரித்துக் கொடுக்க முடியும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம். இப்படி இந்தியாவுக்கு அத்தியாவசியம் இல்லாத இரும்புகளை எல்லாம் இறக்குமதி செய்வதால் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை (Current Account Deficit) அதிகரித்து, பொருளாதாரத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் தொடர்ந்து வர்த்தகப் போர் நடந்து கொண்டிருப்பதால் ஐரோப்பிய ஒன்றியம், கனடா, துருக்கி போன்ற நாடுகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள். அதனால் கூடுதலாக உற்பத்தி ஆகும் இரும்பு, உலக இரும்பு சந்தையை பாதித்துக் கொண்டிருக்கிறது எனவும் மத்திய அரசிடம் சொன்ன பரிந்துரைகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இப்படி இரும்பு இறக்குமதிக்கு தடை கேட்கும் அதே இந்திய இரும்பு சங்கம் தான் தங்கள் மூலப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். இரும்பு உற்பத்திக்கு அதிகம் பயன்படும் இரும்புத் தாது, ஜிங்க், பெயிண்ட், எண்ணெய், லூப்ரிகேஷன் எண்ணெய்கள் போன்றவைகளுக்கு முழு இறக்குமதி வரி விலக்கு கொடுக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்கள்.
மேக் இன் இந்தியா கொள்கைப் படி இந்தியாவில் மதிப்பு கூட்டப்பட்டு வியாபாரம் செய்ய, இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் இறக்குமதி வரி 0% ஆக குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்களாம். பெட் கோக், ஆந்த்ராசைட் என்கிற உயர் ரக நிலக்கரி போன்ற பொருட்களுக்கு தற்போது விதிக்கும் 2.5 சதவிகித சுங்க வரிக்கு பதிலாக முழு விலக்கு அளிக்கும் படி கேட்டிருக்கிறார்களாம். இது மட்டுமின்றி Budget 2019-ல் பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு, மின்சாரம் போன்றவைகளை எல்லாம் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.