கோயமுத்தூர்: கோயமுத்தூரில் இருக்கும் மக்கள் சாந்தி கியர்ஸ் பற்றி அறியாமல் இருக்க முடியாது. ஏனெனில் இந்த காலத்தில் இப்படியொரு நிறுவனமா? என்று கேட்கும் அளவுக்கும், பிரமிக்கும் அளவுக்கும் உள்ள நிறுவனம். இந்த நிறுவனத்தின் கேன்டீன் மிகப் புகழ் பெற்றது. சாந்தி கியர்ஸ் நிறுவனம் மருத்துவ சேவையிலும் சாதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
நமது தமிழக அரசு கூட அம்மா உணவகத்தை கடந்த 2013ல் தான் செயல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த சாந்தி கியர்ஸ் தனது சேவையை கடந்த 2010ல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
நாளுக்கு நாள் உணவு பொருட்களின் விலை அதிகரித்த வண்ணமே உள்ள நிலையிலும் கூட, சாந்தி கியர்ஸ் கேண்டீனில் வெறும் 5 ரூபாய்க்கு டிபனும், 10 ரூபாய்க்கு மீல்ஸூம் கொடுத்து வருகிறது.
மனைவியின் நினைவாக மக்களுக்கு உணவு!
சாந்தி கியர்ஸ் குழுமத்தின் தலைவர் பழனிசாமி, அவரின் மனைவியின் நினைவாக சாந்தி சோஷியல் சர்வீசஸ் என்ற மக்களுக்கான பொது நல அமைப்பை நிறுவியுள்ளதாகவும், இதன் மூலமே இந்த சாந்தி சோஷியல் சர்வீசஸ் (Shanthi Social Services) கேண்டீனை நடத்தியும் வருகிறது. தரத்திலும், சுவையிலும் உயர் தர சைவ ஹோட்டல்களுக்குச் சவால்விடும் சாந்தி ஷோஷியல் சர்வீசஸ் கேன்டீன், சுற்று வட்டார பகுதிகளில் பல இளைஞர்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது. இங்கு தரம் மட்டும் அல்ல விலையும் மிக மிகக் குறைவு தான்.
மீல்ஸ் 10 ரூபாய்?
ஆமாங்க.. டிபன் வகைகள் வெறும் 5 ரூபாய் தான், இதுவே மீல்ஸ் வெறும் 10 ரூபாய் தான். சாதாரணமாக சென்னை போன்ற நகரங்களில் ஒரு காபி 15 ரூபாய் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இங்கு தோசை, உப்புமா,கிச்சடி, பூரி, இட்லி செட் உள்ளிட்ட பல உணவு வகைகள் வெறும் 5 ரூபாய் தான். இது மட்டும் அல்ல இன்னும் பற்பல உணவுகளுக்கு ரூ.5 முதல் 15 ரூபாய்க்குள் தான் விலை.
இளைஞர்களின் வாழ்வாதாராம்.
கோவையின் வரப்பிரசாதமாக கருதப்படும் சாந்தி கியர்ஸ், கோவை சிங்கா நல்லூரில் இயங்கி வருகிறது. கோவையில் பணிபுரியும் இளைஞர்கள் பெரும்பாலும் சிங்காநல்லூர் அதை சுற்றியுள்ள பகுதிகளிலேயே வசித்து வருகிறார்கள் எனில் அதற்கு காரணம் இந்த சாந்தி கியர்ஸ் கேண்டீன். மாதம் முழுக்க சாப்பிட்டாலும் கூட 1500 ரூபாயை தாண்டாது பில்.
பட்ஜெட்டுக்கு ஏற்ற உணவகம்!
ஒரு புறம் பொருளாதார பிரச்சனை நிலவி வந்தாலும், குடும்பத்தோடு வெளியில் சென்று, வாரத்தில் ஒரு நாளவாது குடும்பத்துடன் உணவருந்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஒரு முறை சென்றாலும் 1000 - 500 என்று செலவாகும் நிலையில், சாந்தி கியர்ஸில் குடும்பத்துடன் சென்று மூக்கு பிடிக்க சாப்பிட்டாலும் 100 ரூபாய்க்கும் மேல் சாப்பிட முடியுமா என்பது கஷ்டம் தான்.
விலைக் குறைவா? தரமானதா?
இப்படி விலைக் குறைவா? தரமானதா? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் வரலாம். ஆனால் முழுக்க தரமான உணவுகளை மட்டுமே வழங்கி வருகிறது இந்த சேவை குழுமம். இங்கு ராகி பால், சத்து மாவு பால், கோதுமை பரோட்டா என மிக சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நிறுவனமே செலுத்திக் கொள்ளும்?
கடந்த 2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு அமல்படுத்திய போது, மற்ற உயர்தர உணவகங்கள் எல்லாம் அதை அப்படியே வாடிக்கையாளர்கள் மீது சுமத்தின. ஆனால் சாந்தி கியர்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் ஜி.எஸ்.டி வரியை தாங்களே செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனால் பல ஹோட்டல் விலை அதிகரிப்பு செய்தாலும், இந்த கேண்டீனில் மட்டும் விலை அதிகரிப்பு செய்யப்பட வில்லை. ஆமாங்க மற்ற உணவகங்களில் செலுத்தும் ஜி.எஸ்.டி கட்டணத்திலேயே இங்கு உணவருந்தி விடலாம்.
மருந்திலும் சலுகை!
24 மணி நேரமும் செயல்படும் மருந்தகம். எம்.ஆர்.பி. யில் இருந்து 20 சதவிகிதம் தள்ளுபடி இங்கே கிடைக்கிறது. மேலும் விற்பனை விலை மீதான வரி அறக் கட்டளையால் ஏற்றுக் கொள்ளப் படுகிறது, அதுமட்டும் அல்ல 15 முதல் 20 கிலோமீட்டர் தூரத்திற்குள் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவரியும் உண்டு.
50 – 70 வெளியூர் மக்களுக்கு தள்ளுபடி!
சாந்தி மருத்துவ ஆய்வகத்தில் அமைந்திருக்கும் ஆய்வகத்தில் எடுக்கப்படும் ஸ்கேன் , எக்ஸ்ரே , உள்ளிட்ட பல விதமான முக்கியமான டெஸ்டுகளுக்கு மற்ற இடங்களில் இருந்து 50 இல் இருந்து 70 சதவிகிதம் வரை விலை குறைவு. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் சாந்தி மருத்துவமனை - மருத்துவருக்கான கட்டணம் 30 ரூபாய் மட்டுமே. இதை பற்றிய முழு விவரங்களையும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இரத்த வங்கியும் உண்டு?
டயாலிசிஸ் - முழுக்க முழுக்க அதிநவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்டு செயல்பட்டும் வருகிறது. இங்கே, 500 ரூபாய்க்கு மின் மயானம், நாளொன்றிற்கு 10,000 பேர் தற்போது உபயோகிக்கும் உணவகம், ரேடியாலஜி சென்டர், ரத்த வங்கி, பெட் ரோல்பங்க் என பல சேவைகளை அதிரடியாக செயல்படுத்தி வருகிறது இந்த சேவை நீறுவனம்.
கல்வி உதவி!
ஓரு புறம் அதிரடியான பல சேவைகளில் ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி, அரசுப் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தல், ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு தன் செலவில் ஆசிரியர்களை பணியில் அமர்த்தல் என்று எண்ணற்ற சேவைகளைச் செய்து வருகிறது.
இப்படியொரு அக்கறைகொண்ட சாந்தி சோஷியல் சர்வீசஸ் அறக்கட்டளைக்கும், அதை நிறுவியவர்களுக்கும் கோவை மக்களின் சார்பாக மட்டுமல்லங்க, தமிழ்நாட்டின் சார்பாக ஒரு ஒரு சல்யூட்.