சென்னை : கடன் பிரச்சனையால் தவித்து வரும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தவித்து வந்த நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் மூடப்படுவதாக தவறான தகவல்கள் வெளியாகி உள்ளதாகவும், இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது.
இது குறித்து பி.எஸ்.என்.எல் (BSNL) நிறுவனத்தின் தமிழ்நாடு தொடர்பு வட்டம் தலைமை பொதுமேலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் குறித்து சில தவறான செய்திகள், தவறான உள்நோக்கத்துடன் பரப்பப்பட்டு ஒரு சில ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
ஆகவே பொதுமக்களின் மத்தியில் நிகழும் இந்த சந்தேகங்களை நீக்கும் வகையில் இந்த விளக்கங்களை வெளியிடுவது மிக அவசியமாக உள்ளது என்றும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் கூறியுள்ளது.
அதோடு பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூடப்படுவதாக சில ஊடகங்களில் வெளிவந்த செய்தி முற்றிலும் தவறானதாகும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூடுவதற்கான எந்த ஒரு திட்டமும் மத்திய அரசிடம் இல்லை.
கடுமையான போட்டியின் விளைவாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியை கடந்த சில மாதங்களாக சந்தித்து வருகிறது. எனினும் இந்த நிதி நெருக்கடியில் இருந்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மீட்டெடுப்பதற்கான, ஒரு மாற்று திட்டத்தை மத்திய அரசு தயாரித்து, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அளித்துள்ளது.
இந்த நிலையில் பி.எஸ்.என்.எல். முழுவதுமாக மத்திய அரசுக்கு சொந்தமான ஒரு பொதுத்துறை நிறுவனமாகும்.
அதோடு பி.எஸ்.என்.எல். நிறுவனம் தீவிரவாதத்துக்கு உள்ளான பகுதிகள் மற்றும் தொலைதூர பகுதிகளில் தொலைதொடர்பு சேவைகளை அளிப்பதோடு அல்லாமல், நமது இந்திய ராணுவத்துக்கும் தொலைத்தொடர்பு சேவைகளை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் நம் நாட்டிற்கு அத்தியாவசியமான தொலைத்தொடர்பு நிறுவனமாகவும் விளங்கி வருகிறது என்றும் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.
மேலும், வெள்ளம், புயல் போன்ற இயற்கை இடர்களின்போது தொடர்ந்து தொலைத் தொடர்பு சேவைகளை பொதுமக்களுக்கு அளிக்கும் ஒரே நிறுவனமாக பி.எஸ்.என்.எல். விளங்குகிறது என்றும் ரவிசங்கர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கதக்கது.
இந்த நிலையில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் எதற்காக மூடப்பட வேண்டும். தொடர்ந்து பொதுமக்களுக்கு தொலைத் தொடர்பு சேவையை அளித்து வரும் எனவும், அதோடு மிகச்சிறந்த தொலைத் தொடர்பு சேவைகளை வெளிப்படையான மற்றும் மிகக்குறைவான கட்டணங்களில் அளித்துவரும் எனவும் பொதுமக்களுக்கு இதன்மூலம் தெரிவிக்கிறோம். இதுகுறித்து வெளியாகும் எந்த வதந்திகளையும் யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.