டெல்லி : இன்ஷூரன்ஸ் என்றாலே அலண்டு ஓடும் மக்கள் ஒரு புறம் இருந்தாலும், காக்காய் குருவி போல் சேமித்து நமது அடுத்த தலைமுறைக்கு சிறிதாவது உதவட்டும் என்று நமது முன்னோர்கள் இன்ஷூரன்ஸில் முதலீடு செய்து வருகிறார்கள், செய்தும் இருக்கிறார்கள்.
ஆனால் இன்றைய தலைமுறைகோ அதை க்ளைம் செய்வதற்கோ கூட நேரம் இல்லாமல் போய்விட்டது போல?
ஒரு புறம் கஷ்டப்பட்டு போடும் இன்ஷூரன்ஸ்கள், நிறுவனங்களில் க்ளைம் செய்யப்படாமல் இருக்கும் தொகை, மறுபுறம் வங்கிகளில் வைத்திருக்கும் எஃப்.டி எனப்படும் வைப்பு தொகை சுமார் 32,000 கோடி ரூபாய், கோரப்படாத வைப்புத் தொகையாக (unclaimed deposits) இருப்பதாக அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
வங்கிகளில் கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் கோரப்படாத வைப்புத் தொகையாக (unclaimed deposits) சுமார் 14,578 கோடி ரூபாய் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுவே கடந்த 2017ம் ஆண்டில் 11,494 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாட்டில் ஆயுள் மற்றும் பொது இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் செப்டம்பர் 2018 முதல் 17,887 கோடி ரூபாயை உரிமை கோரப்படாத தொகையாக வைத்துள்ளன.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் நாட்டில் மிகப்பெரிய முன்னணி இன்ஷூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ.சி நிறுவனம் மட்டும், கிட்டதட்ட 12,892 கோடி ரூபாய் உரிமை கோரப்படாத வைப்புத் தொகையை வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதே வகையில் அதாவது இன்ஷூரன்ஸ் வகையில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகையாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 2,156 கோடி ரூபாயை வைத்துள்ளது கவனிக்கதக்கது.
இவ்வாறு உரிமை கோரப்படாமல் வைப்புத் தொகை 10 வருடத்திற்கும் மேல் வைத்திருந்தால், அந்த தொகையை ரிசர்வ் வங்கி, கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு அனுப்படும் திட்டமான Depositor Education and Awareness Fund திட்டத்திற்கு மாற்றும் திட்டத்தினை கடந்த 2014ல் வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் உரிமை கோரப்படாத இந்த தொகையினை கேட்டு ஏதேனும் கோரிக்கைகள் வந்தால், வங்கிகள் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இதற்கு வட்டியாக 4 சதவிகிதம் இருந்து வந்தது. ஆனால் தற்போது இது 3.5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.