டெல்லி: BSNL நிறுவனத்தின் 2018 - 19 நிதி ஆண்டுக்கான நிகர நட்டம் 13,804 கோடி ரூபாய். இப்படி இந்தியாவிலேயே அதிக நிகர நட்டத்தைச் சந்திக்கும் நிறுவனங்கள் பட்டியலில் நம் BSNL-க்கு தான் முதலிடம்.
BSNL-க்கு அடுத்த இடம், இந்தியாவின் மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவிய ஜே ஆர் டி டாடா தொடங்கி அரசுடைமை ஆக்கப்பட்ட ஏர் இந்தியா. மூன்றாவது இடத்தில் மீண்டும் அரசின் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான எம்டிஎன்எல் இருக்கிறது.
இந்த இக்கட்டான சூழலில் BSNL நிறுவனத்தை என்ன செய்யலாம் என பல வழிகளில் யோசித்திருக்கிறது அரசு. அதில் முதல் ஐடியா BSNL நிறுவனத்தை விற்றுவிடுவது.
விற்பதில் பிரச்னை
மத்திய அரசு நினைப்பது போல BSNL நிறுவனத்தை விற்கப் போனால் யாரும் வாங்கத் தயாராக இல்லை. காரணம் BSNL நிறுவனத்துக்கு இருக்கும் மிகப் பெரிய கடன் பிரச்னை. அதையும் தாண்டி BSNL மற்றும் எம்டிஎன்எல் நிறுவனத்தை விற்க வேண்டுமென்றால் கூட அரசு தன் கை காசைப் போட்டு 1.2 லட்சம் கோடி செலவழிக்க வேண்டி இருக்கிறதாம். எனவே இத்தனை செலவு செய்து விற்பதற்கு அரசு தயாராக இல்லையாம். ஆகையால் BSNL நிறுவனத்தை தனியார் நிறுவனத்தோடு சேர்ந்து (Joint Venture) போட்டு மாருதி சுஸிகி போல நடத்தி மீண்டும் நிறுவனத்தை உயர்த்தும் ஐடியாவில் இருக்கிறார்களாம்.
நட்டத்துக்கு காரணம்
அரசின் இரண்டு பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களான BSNL மற்றும் எம்டிஎன்எல் இரண்டுமே ஆமை வேகத்தில் இயங்குவது, மோசமான நிர்வாகம், ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய அதிக சம்பளம், தேவை இல்லாத அரசு தலையீடுகள், புதிய தொழில்நுட்பத்துக்கு மிக மெதுவாக மாறுவது என பட்டியல் கொடூரமாக நீள்கிறது. பல டெலிகாம் நிறுவனங்கள் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு 5ஜிக்கு மாறிக் கொண்டிருக்கும் போது கூட இன்னும் BSNL தன்னை 5ஜிக்கு மாற்றிக் கொள்ளத் தயாரானதாகத் தெரியவில்லை என அரசு தரப்பே குற்றப்பத்திரிகை வாசிக்கிறார்களாம்.
சம்பளச் செலவுகள்
BSNL நிறுவனத்துக்கு வரும் மொத்த வருவாயில் சுமார் 77 சதவிகிதம் ஊழியர்களின் சம்பளத்துக்கே சரியாகிவிட்டதாம். எம்டிஎன்எல்-ன் ஆண்டு வருவாயில் 87 சதவிகிதம் ஊழியர்களின் சம்பளத்துக்கே சரியாகி விட்டதாம்.
இது போக
2016 - 17-ல் 4,793 கோடி ரூபாய் நட்டம்,
2017 - 18-ல் 7,993 கோடி ரூபாய் நட்டம்,
2018 - 19-ல் 13,804 கோடி ரூபாய் நட்டம் கண்டிருக்கிறார்கள்.
ஆண்டு வாரியாக சம்பளச் செலவுகள்
2016 - 17-ல் BSNL-ன் ஆண்டு வருவாய் சுமார் 31,000 கோடி ரூபாயாக இருந்திருக்கிறது. இதில் 50% ஊழியர்கள் சம்பளத்துக்கு செலவாகிவிட்டதாம்.
2017 - 18-ல் BSNL-ன் ஆண்டு வருவாய் சுமார் 25,000 கோடி ரூபாயாக இருந்திருக்கிறது. இதில் 60% ஊழியர்கள் சம்பளத்துக்கு செலவாகிவிட்டதாம்.
2018 - 19-ல் BSNL-ன் ஆண்டு வருவாய் சுமார் 18,850 கோடி ரூபாயாக இருந்திருக்கிறது. இதில் 77% ஊழியர்கள் சம்பளத்துக்கு செலவாகிவிட்டதாம்.
அரசு மீட்பு
BSNL நிறுவனத்தை விற்க முடியாத சூழலில், அதை மேம்படுத்த அரசு சுமார் 74,000 கோடி ரூபாயை BSNL நிறுவனத்தில் முதலீடு செய்யப் போகிறார்களாம். ஓய்வூதியத் திட்டத்துக்கு சுமார் 11,000 கோடி ரூபாய்,
விஆர்எஸ் வாங்கிக் கொள்பவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்துக்கு சுமார் 29,200 கோடி ருபாய்,
4ஜி தொழில்நுட்பத்துக்கு சுமார் 20,000 கோடி ரூபாய்,
அன்றாட நிர்வாக முதலீட்டுச் செலவுகள் என்றழைக்கப்படும் Capital Expenditure-க்கு 13,200 கோடி ரூபாய் ஒதுக்கப் போகிறார்களாம்.
மிக முக்கியமாக விருப்ப ஓய்வை ஊக்குவிக்க, இப்போது BSNL நிறுவன பணியில் இருந்து விஆர்எஸ் பெறுபவர்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 5 சதவிகிதம் கொடுக்கப் போகிறார்களாம்.
செலவு குறைவு
செலவைக் குறைக்க BSNL நிறுவனத்தில் பணியில் இருப்பவர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 60 வயதில் இருந்து 58 வயதாக குறைக்கப் போகிறார்களாம். அதனால் தான் ஓய்வூதியத் திட்டத்துக்கு மட்டும் சுமார் 40,000 கோடி ரூபாயை அறிவிக்கப் போகிறது BSNL நிர்வாகம். இந்தியாவில் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ஒரு டெலிகாம் வாடிக்கையாளரிடம் இருந்து சராசரியாக சுமார் 70 ரூபாயை வருவாயாகப் பெறுகிறார்கள். ஆனால் BSNL மற்றும் எம்டிஎன்எல் வெறும் 38 ரூபாயை வருவாயாக ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து பெறுகிறார்களாம்.