டெல்லி: நாட்டில் நிலவிவரும் கடும் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் விதத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் சேமிப்பு திட்டத்திற்காக ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யவிருக்கும் முழு பட்ஜெட்டில் ரூ,10 ஆயிரம் கோடியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆண்டு தோறும் பெய்யும் தென்மேற்கு பருவமழையும் தொடர்ந்து ஏமாற்றி வருவதால் விவசாய உற்பத்தியும் கடும் சரிவை சந்தித்து வருகிறது. அதோடு வழக்கமாக பெய்யும் வடகிழக்கு பருவமழையும் ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து சரிந்து வருவதை அடுத்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதோடு, பிரதமர் மோடியும் மாதந்தோறும் வானொலி மூலம் கலந்துரையாடும் மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக பேசும் போது, பொதுமக்களுடன் இணைந்து தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வுகாண விரும்புவதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்தே எதிர்காலத்தில் ஏற்படும் தண்ணீர் பிரச்சனையை ஒழித்து நீரை சேமிப்பதற்காக பட்ஜெட்டில் 10 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
குடிநீருக்கு காத்திருப்பு
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் மக்கள் குறைந்த பட்சம் 5 முதல் 10 கிலோ மீட்டர்களை வரை அலையோ அலை என அலைந்து திரிந்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். இன்னும் சில மாநிலங்களில் உள்ள கிராமங்களில் உள்ளவர்கள் குறைந்தபட்சம் 2 நாட்கள் வரையிலும் காத்திருந்து குடிநீரை கொண்டுவருகின்றனர்.
தலைவிரித்தாடிய தண்ணீர் பஞ்சம்
இதன் உச்சகட்டமாக கடந்த மாதத்தில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் பொதுமக்கள் தங்களின் காலைக்கடன் முதல் குளிப்பது உள்ளிட்ட அன்றான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட முடியாமல் திண்டாடினர். இதனால் சில நிறுவனங்கள் கூட தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்த வேலை செய்வதற்கு அனுமதி அளித்திருந்தது. அந்த அளவிற்கு தண்ணீர் பஞ்சம் தலைநகரில் தலைவிரித்தாடியது.
மத்தியான லஞ்ச் கட்
மேலும் பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளில் குடியிருப்போரை குளிக்கக் கூடாது என்றும் விருந்தினர்கள் யாரும் வரக்கூடாது என்றும் கூட உத்தரவிட்டிருந்தனர். இதனால் பெரும்பாலான குடித்தனக்காரர்கள் தங்கள் குடியிருந்த வீட்டை விட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். சில ஹோட்டல்கள் கூட மதிய உணவு விற்பனையை முற்றிலும் நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏமாற்றிய பருவமழை
இதற்கு முக்கிய காரணம், வழக்கமாக பெய்யும் வடகிழக்கு பருவமழையானது வழக்கத்தை விட கடந்த 2018ஆம் ஆண்டில் 85 சதவிகிதம் வரை பெய்யாமல் போனதே தண்ணீர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் அதையும் தாண்டி வழக்கமாக செய்யும் ஏரிகளை தூர்வாரும் பணிகளை செய்யாமல் விட்டதும் தண்ணீர் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
தண்ணீரால் கரைந்த கூட்டணி
பொதுமக்கள் சொல்வது உண்மை என்பது போலவே, கடந்த பிப்ரவரி மாதத்திலேயே தண்ணீர் பிரச்சனை லேசாக தலை காட்டத் தொடங்கியது. இதனை நன்கு உணர்ந்த மாநில அரசும், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் தேர்தலை வைக்க நிர்பந்தித்தது. இருந்தாலும் கூட, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மற்ற மாநிலங்களில் ஆளும் கூட்டணி அபார வெற்றி பெற்ற போதும் கூட, தமிழ்நாட்டில் மண்ணைக் கவ்வியது.
தண்ணீருக்கு முக்கியத்துவம்
பொது மக்களின் கோபத்தை நன்கு உணர்ந்து கொண்ட மாநில அரசும் குடிமராமத்துப் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. மத்திய அரசும் நாடு முழுவதும் நிலவிவரும் தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதோடு பிரதமர் மோடியும் பொதுமக்களோடு இணைந்து தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
நானும் உங்களோடுதான்
மாதந்தோறும் வானொலி மூலம் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் வாயிலாக கலந்துரையாடும் போது, நாடு முழுவதும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அனைவரும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதோடு விவசாய உற்பத்தியும் கடும் சரிவை சந்தித்து வருகிறது. எனவே இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டியது அவசியம். பொதுமக்களோடு நானும் இணைந்து தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வுகாண்பதற்கு ஆவலோடு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நீர் சக்தி இயக்கம்
இதன் ஆரம்ப கட்டமாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கடந்த திங்களன்று நீர் சக்தி இயக்கத்தை (Jal Shakti Abhiyaan) தொடங்கிவைத்தார். இதன் மூலம் முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 256 மாவட்டங்களில் கவனம் செலுத்தி நீர் சேமிப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்துள்ளார். இதன் மூலம் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதோடு விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும் தீர்வுகாணப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
இந்நிலையில், வரும் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யவிருக்கும் நடப்பு 2019-20ஆம ஆண்டுக்கான முழு பட்ஜெட்டில் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்து நீரை சேமித்து வைப்பதற்கான திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திட்டத்தின் மூலமாக, அடுத்து வரும் முதல் மூன்று ஐந்தாண்டுகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.