டெல்லி: Indian Railways தனியார்மயமாவதை எதிர்த்து சோனியா காந்தி நேற்று (ஜூலை 02, 2019) பாராளுமன்றத்தில் பேசி இருக்கிறார்.
Indian Railways-க்கு சொந்தமான, ரெப ரேலியில் இருக்கும் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை உட்பட பல்வேறு Indian Railways-க்கு சொந்தமான உற்பத்தி நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை எதிர்த்துப் பேசி இருக்கிறார்.
ஆனால் மத்திய ரயில்வே அமைச்சகம் சோனியா காந்தியின் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது. அதோடு Indian Railways-க்கு சொந்தமான ரயில் பெட்டித் தொழிற்சாலைகள் எல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.
கார்ப்பரேட் மயம்
நிர்வாகத்தில் கார்ப்பரேட் மயம் கொண்டு வருகிறேன் என்கிற பெயரில், அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கு முதல் கட்ட ஒத்திகை பார்க்கிறார்கள். பாஜக அரசு நாட்டின் சொத்துக்களை வெகு சில தனியாருக்கு, வந்த விலைக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பல்லாயிரக் கணக்கான ஊழியர்கள் வேலை இழப்பார்கள் எனச் சொல்லி இருக்கிறார் சோனியா காந்தி.
மேக் இன் இந்தியா
அதோடு "காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், மேக் இன் இந்தியா திட்டத்தை மேம்படுத்த கொண்டு வரப்பட்ட ரயில் பெட்டி தொழிற்சாலை அது. ரேப ரேலியில் இருக்கும் இந்த ரயில் பெட்டி தொழிற்சாலை தான் இந்தியாவிலேயே மிக நவீனமான ரயில் பெட்டித் தொழிற்சாலை. நல்ல விலையில் சிறந்த ரயில் பெட்டிகளை இங்கு தயாரித்து வருகிறார்கள்" எனவும் சொல்லி இருக்கிறார்.
முதலீடுகள்
மேலும் இந்த ரேப ரேலி ரயில் பெட்டித் தொழிற்சலைக்கு மத்திய அரசு நிறைய முதலீடு செய்திருக்கிறது. இந்த நிலையில் ஏன் மத்திய அரசு கார்ப்பரேட் மயத்தைக் கொண்டு வருகிறது எனத் தெரியவில்லை. இதனால் 2,000 தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது என கொந்தளித்திருக்கிறார். அதோடு நிற்காமல் "நவீன இந்தியாவின் கோவில்கள் பொதுத் துறை நிறுவனங்கள்" என நேரு சொன்னதை மேற் கோள் காட்டிப் பேசி இருக்கிறார். ஆனால் இன்று பொதுத் துறை நிறுவனங்கள் மிகப் பெரிய பிரச்னையில் இருப்பதை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கள், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் போன்ற அரசு நிறுவனங்கள் கவலைக்கிடமாக இருப்பதைச் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
ரயில்வே பதில்
மேடம் "Corporatization என்பது Privatization அல்ல" என பதில் கொடுத்திருக்கிறது ரயில்வே. அதோடு "Indian Railways-ன் கீழ் இருக்கும் ரயில் பெட்டித் தொழிற்சாலைகள் எல்லாமே அரசின் கீழ் தான் இருக்கும். அந்த நிறுவனங்களை இன்னும் சிறப்பாக நிர்வகித்து, அவைகளை இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப் போகிறோம். இதனால் டெக்னாலஜி, கூட்டமைப்பு மற்றும் நவீனமயமாக்கள் அதிகரிக்கும்" என ரயில்வே பதில் கொடுத்திருக்கிறது.
சரியான பாதை
ரயில்வே நிர்வாகம் சொல்லும் பதிலில் எவ்வளவு உண்மை இருக்கிறது எனத் தெரியவில்லை. இந்த ரெபரேலி ரயில் பெட்டி தொழிற்சாலையை அமைக்கும் போது ஆண்டுக்கு 1,000 பெட்டிகளைத் தயாரிக்க முடியும் என்று தான் காங்கிரஸ் தொடங்கினார்களாம். 2011 - 14-ல் வெறும் 375 ரயில் பெட்டிகளில் சின்ன சின்ன வேலைகளைத் தான் செய்திருக்கிறது ரெப ரேலி ரயில் பெட்டித் தொழிற்சாலை. அதன் பின் ஜூலை 2014-ல் இந்த ரெப ரேலி ரயில் பெட்டித் தொழிற்சாலையை உற்பத்தி நிறுவனமாக மாற்றி இருக்கிறார்களாம்.
பாஜக ஆட்சியில்
அதன் பின் 2014 - 15-ல் 140 ரயில் பெட்டிகள், 2015 - 16-ல் 285 ரயில் பெட்டிகள், 2016 - 17-ல் 576 ரயில் பெட்டிகள், 2017 - 18-ல் 711 ரயில் பெட்டிகளை தயாரித்திருக்கிறார்களாம். ஆக காங்கிரஸ் அரசு முன் வைத்த உற்பத்தியை நோக்கி சிறப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு ரயில் பெட்டித் தொழிற்சாலை நிறுவனத்தில் ஏன் கார்ப்பரேட் மயமாக்க வேண்டும் என நமக்கு பதில் தெரியவில்லை. இந்தியாவில் இருக்கும் 7 ரயில் பெட்டித் தொழிற்சாலை நிறுவனங்களில் ரெப ரேலி நிறுவனத்தைத் தான் முதலில் கார்ப்பரெட் மயமாக்க முயற்சிக்கிறது மத்திய அரசு. இதற்கு ரெப ரேலி ரயில் பெட்டித் தொழிற்சாலையில் பலத்த எதிர்ப்பு எழுந்து கொண்டிருக்கிறது.
வழக்கம் போல எதையும் கண்டு கொள்ளாமல் தன் வேலையில் மும்முரமாக, கார்ப்பரேட் மயத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.