டெல்லி: இந்தியாவுக்கு அதிகம் கச்சா எண்ணெய் சப்ளை செய்து கொண்டிருந்த நாடுகளில் ஈரானுக்கு மூன்றாவது இடம். ஈராக் மற்றும் சவுதி அரேபியாவுக்குப் பின் ஈரானிடம் தான் இந்தியா அதிக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்தது.
Iran economic sanction காரணத்தால், இந்தியாவுக்கு இது நாள் வரை பெரிய அளவில் எண்ணெய் சப்ளை செய்து வந்த ஈரான் நாட்டிடம் கச்சா எண்ணெய் வாங்க முடியாத சூழலில் தவித்துக் கொண்டிருக்கிறது.
இந்த கச்சா எண்ணெய் தவிப்பு குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் சஞ்ஜீவ் சிங் "ஈரானிடம் இருந்து வாங்கிய கச்சா எண்ணெய்யை இப்போது பல நாடுகளிடம் இருந்து வாங்கிக் கொண்டிருக்கிறோம்" என சுரத்து இல்லாமல் சொல்லி இருக்கிறார்.
ஏன் ஈரான் எண்ணெய்
இந்தியாவுக்கு அருகில் இருக்கும் OPEC நாடுகள் என்றால் ஈரான், ஈராக், குவைத், ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா போன்ற எண்ணெய் வள நாடுகள் தான். இப்போது இந்த OPEC உறுப்பு நாடுகள் அனைவருமே தங்கள் தீர்மானப்படி உற்பத்தியைப் பெருக்கவில்லை என்றால், போட்டி போட்டுக் கொண்டு விலை ஏறும். இந்தியாவுக்கு நில அமைப்புப் படி மத்திய கிழக்காசிய நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தான் போக்குவரத்து செலவுகளைக் குறைக்கும். ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வாங்க வேண்டும் என்றால் போக்குவரத்துச் செலவுகளால் விலை இன்னும் அதிகரிக்கும். அதனால் தான் எண்ணெய் என்றால் iran economic sanction பிரச்னைகளை மறந்து ஈரானை நினைக்கிறது இந்தியா.
ஈரான் தரப்பு
இந்தியாவுக்கு இருக்கும் கச்சா எண்ணெய்த் தேவையை முழுமையாக புரிந்து வைத்திருக்கிறது ஈரான். இந்தியாவின் எரிசக்தி துறை பாதுகாவலர்களாக ஈரான் இருக்கும். இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய்யை குறைந்த விலையில், எளிதில் கிடைக்கும் விதத்தில், பாதுகாப்பாக இந்தியா வந்து சேரும் விதத்தில் ஈரானால் தர முடியும் எனவும் ஈரான் தரப்பு பகிரங்கமாகச் சொல்லி வருகிறது. இதை இந்திய நாட்டுக்கான ஈரான் தூதர் அலி செங்கானியும் உறுதி செய்திருக்கிறார். ஆக iran economic sanction-ஐத் தாண்டி தங்களோடு கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்யச் சொல்கிறது ஈரான்.
பேமெண்ட்
"ராஜா இந்த கையில காசு, வாயில தோச" என வியாபாரத்தில் கறார் பிடிக்கவில்லை ஈரான். நீங்கள் கொடுக்கும் போது பணம் கொடுங்கள். நிறைய நாட்கள் காலக் கெடு தருகிறோம். கொடுக்கும் பணத்தை டாலராக கொடுக்க வேண்டாம். இந்திய ரூபாயாகவே வாங்கிக் கொள்கிறோம். அதுவும் சிரமமா, பண்டமாற்று முறையில் பொருட்களாகவே வாங்கிக் கொள்கிறோம், உங்கள் நாட்டின் ஏற்றுமதியும் வளர்ந்ததாக இருக்கும் என இந்தியாவுக்கு அனைத்து கதவுகளையும் திறந்து விட்டு காத்திருக்கிறது ஈரான்.
அலி செங்கானி வாதம்
இந்தியாவுக்குத் தேவையான கச்சா எண்ணெய் விலை குறைவாக, எளிதில் கிடைப்பதாக, எரிசக்தி பாதுகாப்பு தருவதாக இருக்க வேண்டும் எனச் சொல்கிறார் ஜெய் சங்கர். இவை அனைத்தும் ஈரானிடம் இருந்து கிடைக்கும் என இந்திய ஈரான் கலாச்சார நிகழ்ச்சியில் சொல்லி இருக்கிறார் இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செங்கானி. அதோடு "இந்தியா எங்களிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தி இருக்கிறார்களே ஒழிய, வேறு எதையும் சொல்லவில்லை. ஆகையால் எதிர் காலத்தில், iran economic sanction-ஐத் தாண்டி எண்ணெய் வர்த்தகம் இந்தியா மற்றும் ஈரானுக்கு இடையில் தொடரலாம்" என பிள்ளையை கிள்ளிவிட்டிருக்கிறார் அலி செங்கனி.
அமெரிக்க தரப்பு
சில தினங்களுக்கு முன் தான் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க உள் துறை அமைச்சர் மைக் பாம்பியோ உடன், இந்தியாவின் கச்சா எண்ணெய் சிக்கலைப் பற்றிப் பேசி இருக்கிறார். அமெரிக்காவும் "அமெரிக்காவுக்காக இந்தியா ஈரானிடம் இருந்து கச்சா வாங்குவதை நிறுத்தி இருக்கிறது. இது ஒரு கடினமான முடிவு தான். இந்தியாவின் கச்சா எண்ணெய் பிரச்னையை தீர்க்க அமெரிக்கா தன்னால் ஆன எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறது" என்றார். அதாவது கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து இந்தியாவுக்குத் தேவையான கச்சா எண்ணெய்யை குறைந்த விலையிலேயே கிடைக்கச் செய்ய எல்லா அரசியல் அழுத்தங்களையும் கொடுத்துக் கொண்டிருப்பதைத் தான் இப்படிச் சொல்லி இருக்கிறார் போல.
பிரச்னை
ஈரான் மற்றும் வெனிசுலா நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதித்து கச்சா எண்ணெய் வாங்க விடாமல் செய்தது யார்..? அமெரிக்கா. இந்த பொருளாதாரத் தடையை ஏறக்குறைய எல்லா உலக நாடுகளும் ஏற்றுக் கொண்டது. ஆனால் சில நாடுகளுக்கு இன்னமும் ஈரானின் கச்சா எண்ணெய் அதி அவசியமாக இருக்கிறது. உதாரணம் இந்தியா மற்றும் சீனா. இந்த நேரம் பார்த்து OPEC நாடுகள் தன் உற்பத்தியை குறைத்தால் மேலே சொன்னது போல விலை ஏறும், விலை ஏறினால் "என்னங்க உங்கள நம்பி உங்க பொருளாதார தடைக்கு ஓகே சொன்னா இப்ப எங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் விலை கொடூரமா ஏறுதே" என ட்ரம்பிடம் தான் முறையிடுவார்கள். இப்போது இந்தியா முறையிட்டுக் கொண்டிருப்பது போல.
சீன பதிலடி
ஓரளவுக்கு மேல் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், எப்படியாவது கச்சா எண்ணெய் வந்தால் போதும் என்று ஈரானின் பழைய வாடிக்கையாளர்கள் நினைப்பார்கள். ஆக ஈரானிடமிருந்து சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குகிற நிலை ஏற்பட்டால் மீண்டும் வர்த்தகப் போர் வெர்சன் 2.0 நடத்த வேண்டி இருக்கும். ஏற்கனவே அமெரிக்க சீன வர்த்தகப் போர் நடந்து கொண்டிருக்கும் போதே, அமெரிக்க பொருளாதார தடையை மீறி, மே 2019-ல் 585 மில்லியன் டாலர் மதிப்புக்கு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி இருக்கிறது சீனா. ஆக "நீ என்ன அடிச்சா நானும் உன்ன அடிப்பேன்" என்கிற பாங்கை அமெரிக்கா போன்ற பெரிய தாதா மேல் கை வைத்தே உலகுக்கு உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது சீனா. சந்தர்ப்ப சூழ்நிலையால் அமெரிக்காவும் தலையிட முடியாமல் சீனாவிடம் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது.
இந்தியா பதிலடி
ஏற்கனவே அமெரிக்கா, இந்தியாவுக்கு Generalised System of Preference திட்டத்திலன் கீழ் வழங்கி வந்த இறக்குமதி வரிச் சலுகையை நிறுத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி ஆகும் 29 பொருட்களுக்கு இறக்குமதி வரி விதித்து பதிலடி கொடுத்தது இந்திய அரசு. ஆக சீனா பாங்கில் இறக்குமதி வரி விதித்துவிட்டார்கள். இப்போது அதே போல அமெரிக்காவின் iran economic sanction-ஐ மீறி சீனா போல, ஈரானிடம் எண்ணெய்யும் வாங்கி விட்டால், முழுமையாக அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது போல் ஆகிவிடும்.
காரணம்
மேலே சொன்னது போல, அமெரிக்கா உடனடியாக இந்திய கச்சா எண்ணெய் பிரச்னைக்கு ஒரு நல்ல முடிவைச் சொல்லவில்லை என்றால், அமெரிக்காவின் iran economic sanction-ஐ மதிக்காமல் சீனாவைப் போல, ஈரானுக்கு கச்சா எண்ணெய் ஆர்டர் கொடுத்து பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். காரணம் கச்சா எண்ணெய் இன்றைய வளர்ச்சி இந்தியாவின் உயிர் நாடி. அது அமெரிக்க நட்பை விட மிகப் பெரியது என உணர்ந்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.